Sunday, December 27, 2009

எவன் மனிதன்

வஞ்சனை, கபடம் என சமயத்திற்கேற்பப் பிழைப்பவன் - நரி

ஊக்கமின்றி ஏதேனும் ஒன்றை நினைத்துக் கொண்டு மனம் சோர்ந்து இருப்பவன் - தேவாங்கு

மறைந்திருந்து பிறருக்குத் தீங்கு செய்பவன் - பாம்பு

தர்மம், புகழ் போன்றவற்றைப் பற்றிக் கவலையின்றி அற்ப சுகங்களில் மூழிகிக் கிடப்பவன் - பன்றி

சொந்தமாகப் பிழைக்காமல், அந்த அக்கறையின்றி பிறருக்குக் பிரியமானவனாக நடந்து கொண்டு, அவர்கள் கொடுப்பதைக் கொண்டு வையிறு நிறைப்பவன் - நாய்

கண்ட கண்ட விஷயங்களுக்குக்கெல்லாம் கோபம் அடைபவன் - வேட்டை நாய்

அறிவின் துணை கொண்டு பெரும் பொருளைச் சேர்க்கும் வழியின்றி முன்னோரின் சாஸ்திரங்களை, பெருமைகளை மட்டுமே வாயினால் அடிக்கடி, திரும்பத் திரும்பக் கூறுபவன் - கிளிப்பிள்ளை

பிறர் நம்மை எவ்வளவு அவமதித்தாலும், அந்த அக்கிரமங்களைத் தடுக்க முயற்சி செய்யாமல், தனது மந்த குணத்தால் பொறுத்துக் கொண்டிருப்பவன் - கழுதை

வீண் மினுக்கு மினுக்கி தம்பம் பாராட்டுகிறவன் - வான் கோழி

கல்வி அறிவற்றவன் - வெறும் தூண்

தான் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்துச் சாப்பிடாமல் பிறரின் சொத்தை அபகரித்து உண்டு வயிறு வளர்ப்பவன் - கழுகு

ஒரு புதிய உண்மை வரும் பொழுது அதனை ஆவலோடு அங்கீகரித்து அறிந்து கொள்ளாமல், அதனைக் கண்டு வெறுப்படைபவன் - ஆந்தை

ஒவ்வொரு நிமிசமும் சத்தியத்தைப் பேசி, தர்மத்தை ஆதரித்து, பரமார்த்தத்தை அறிய முயல்கிறவன் - மனிதன்

Sunday, December 13, 2009

காந்திஜியின் நகைச்சுவை

ஒலிபெருக்கிக்காரரின் குடை:
காந்தியடிகள் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று மழை பெய்தது. மழையைப் பொருட்படுத்தாமல் மக்கள் நனைந்து கொண்டே காந்தியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒருவர் குடையை விரித்து காந்தியின் தலைக்கு மேலே பிடித்தார். இதைக் கண்ட காந்தி, "மக்கள் எல்லாம் நனையும் போது எனக்கு மட்டும் எதற்குக் குடை?" என்று கேட்டார்.
குடை பிடிப்பவரோ காந்தியின் சொல்லைக் கேட்கவில்லை. தொடர்ந்து குடையைப் பிடித்துக் கொண்டே இருந்தார்.
உடனே காந்தி கூட்டத்தினரைப் பார்த்து சிரித்துக் கொண்டே , "இவர் குடை பிடிப்பதைப் பார்த்தால் ஒலிபெருக்கிக்குச் சொந்தக்காரராக இருப்பார் போலிருக்கிறது. அதனால்தான் ஒலிபெருக்கி நனையாமல் இருக்க குடை பிடித்துக் கொண்டிருக்கிறார்." என்றார்.
இதைக் கேட்ட கூட்டத்தினர் அனைவரும் பலமாகச் சிரித்தனர்.

எனக்குப் பயன்படக் கூடியது:
காந்திஜி லண்டனில் நடந்த இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார். ஆங்கிலேயர் ஒருவரும் அதே கப்பலில் பயணம் செய்தார்.
பயணத்தின் போது காந்திஜியை அவர் அடிக்கடி கிண்டல் செய்து கொண்டு வந்தார் அவர். காந்தியடிகளோ இதைக் கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை. வெறுத்துப் போன ஆசாமி, காந்தியை நக்கலடித்து சில கவிதைகளை எழுதினார். அதை காந்தியிடம் கொடுத்து,"படித்துப் பாருங்கள்" என்றார்.
கவிதைகளைப் படித்து ஆசாமியின் நக்கலைப் புரிந்து கொண்டார். ஆனாலும் அது குறித்து கவலைப்படவில்லை.
மறுநாள் காலை அந்த ஆசாமி காந்தியடிகளைப் பார்க்க வந்தார். காந்திஜியிடம் ,"என் கவிதைகள் எப்படி? பயனுள்ளதாக இருந்திருக்குமே?" என்று நமட்டுச் சிரிப்புடன் கேட்டார்.
காந்தியடிகள் சிரித்துக் கொண்டே "ஓ..! தாங்கள் கொடுத்த கவிதைகளை ஒன்று விடாமல் படித்தேன். அதில் எஅன்க்குப் பயன்படக்கூடிய அம்சத்தை எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்." என்று கூறி அந்தக் காகிதத்தில் குத்தியிருந்த குண்டூசியை எடுத்துக் காட்டினார். நீங்கள் கொடுத்ததில் இதுதான் எனக்குப் பயன்படக் கூடியது."என்றார்.
அந்த ஆங்கிலேயரின் முகத்தில் ஈயாடவில்லை.

நீர்வீழ்ச்சியை விட பெரியது:
காந்தியடிகள் ஒருமுறை கர்நாடக மாநிலத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த சிலர் காந்திஜியிடம், "ஜோக் நீர் வீழ்ச்சியைப் பார்க்க வருகிறீர்களா?" என்று கேட்டனர்.
அந்த அன்பர்களிம் அழைப்பைத் தட்டிக் கழிக்க விரும்பாத காந்தியடிகள்,"நீங்கள் மழையைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? நன்கு கவனித்திருக்கிறீர்களா? வானத்திலிருந்து வருகிறது. வானிலுள்ள கருமேகங்களிலிருந்து வருகிறது. நீர்வீழ்ச்சி மலையிலிருந்து அல்லவா விழுகிறது. மலையை விட உயர்ந்த இடத்திலிருந்து வருகிறது மழை. அதற்கு இணை அதுவேதான். அதற்கு அடுத்தல்லவா நீர் வீழ்ச்சி எல்லாம்..."என்று அவர்களைச் சிரிக்க வைத்தார். சிந்திக்கவும் வைத்தார்.

கடவுளைத் தேடி

ஒரு ஊரில் சிலர் கடவுளைத் தேடிப் புறப்பட்டார்கள். அந்த ஊர் மக்களும் அவர்களை வழியனுப்பி வைத்தார்கள்.வெளியூர் சென்றிருந்த அந்த ஊர்ப் பெரியவர் ஒருவர், ஊர் திரும்பினார். சிலர் கடவுளைத் தேடிச் சென்றிருப்பதை அறிந்தார்.கழுதையில் அமர்ந்த அவர் அவர்கள் சென்ற திசையை நோக்கி வேகமாகச் சென்றார்.சில மணி நேரத்தில் அவர்களைப் பிடித்தார்.கழுதையிலிருந்து இறங்கிய அவர், "கடவுளைத் தேடிப் புறப்பட்டுள்ளீர்கள். உங்கள் முயற்சி வெற்றியடையட்டும்" என்று வாழ்த்தினார்.மீண்டும் கழுதையில் ஏறி அமர்ந்தார். அவர்கள் செல்லும் வழியிலேயே கழுதையை ஓட்டத் துவங்கினார்.அவர் ஊர் திரும்பாமல் தங்களுக்கு முன்னால் செல்வதைக் கண்ட அவர்கள் ஆச்சர்யமடைந்தார்கள்.அவர்களில் ஒருவர், "பெரரியவரே! ஊர் திரும்பாமல் எங்களுக்கு முன்னால் செல்கிறீரே?" என்று கேட்டார்."என் கழுதையைத் தேடி வந்தேன். வழியில் உங்களைப் பார்த்து வாழ்த்தினேன். மீண்டும் கழுதையைத் தேடிப் புறப்பட்டு விட்டேன். கழுதையைக் கண்டுபிடித்த பின்பே ஊர் திரும்புவேன். கழுதை கிடைக்காமல் ஊர் திரும்ப மாட்டேன்" என்றார்.இதைக் கேட்ட அவர்கள் "கழுதை மீது அமர்ந்தபடியே கழுதையைத் தேடுகிறாரே. இவரைப் போல் முட்டாள் யார் இருக்க முடியும்." என்று எண்ணிச் சிரித்தார்கள்."ஏன் சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டார் அவர்."கழுதையின் மீது அமர்ந்து இருக்கிறீர்கள். உம் கண் அருகிலேயே கழுதை இருக்கிறது. கழுதையைத் தேடிப் போவதாகச் சொன்னால் சிரிக்காமல் என்ன செய்வது"" என்றான் அவர்களில் ஒருவன்."நீங்கள் கடவுளத் தேடிச் செல்வதாகச் சொல்கிறீர்கள். உங்களுக்குள்ளேயே இருக்கும் கடவுளைத் தேடி அலைகிறீர்கள். நான் உங்களைப் பார்த்துச் சிரித்தேனா" என்று பதில் கேள்வி கேட்டார்.அவர்களுக்கு உண்மை புரிந்தது. அவருடன் சேர்ந்து ஊர் திரும்பினார்கள்.

Sunday, December 6, 2009

விவேகானந்தரின் விவேக மொழிகள்

மிருகபலத்தால் ஒரு போதும் உயர்வு பெறமுடியாது.ஆன்மிக பலத்தால் மட்டுமே நாம் எமுச்சி பெற முடியும். நாம் அனைவரும் மகத்தான பணிகளைச் செய்யவே பிறந்திருக்கிறோம்.
மேலைநாட்டு விஞ்ஞானத்தையும் நம் நாட்டு வேதாந்தத்தையும் இணையுங்கள். இவை இரண்டுமே வாழ்வின் அடிப்படை லட்சியங்களாகும்.
யார் ஒருவர் எதைப்பெறுவதற்குத் தகுதி உடையவராக இருக்கிறாரோ அதை அவர் பெறவிடாமல் தடுத்து நிறுத்துவதற்கு இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எந்த சக்தியாலும் முடியாது.
துன்பம் விளைவதற்கு அறியாமையைத் தவிர வேறு எதுவுமே காரணமில்லை. இந்த உண்மையைப் பட்டபகல் வெளிச்சத்தைப் போல என்னால் தெளிவாக புரிந்துக் கொள்ளமுடிகிறது.
ஆயிரம் முறை தோல்வியுற்றாலும் லட்சிய நோக்கிலிருந்து பின்வாங்காதீர்கள். போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதீர்கள். லட்சியப்பாதையில் வீறுநடைபோடுங்கள்.
அறிவு வளர்ச்சிக்கு ஒரே ஒரு வழிமுறை தான் இருக்கின்றது. நம்முடைய மனத்தை ஒரு முகப்பபடுத்துவதே அந்த வழி.
எதையும் வெறும் பரபரப்புடன் மட்டும் அணுகுவது கூடாது. தூய்மை, பொறுமை, விடாமுயற்சி என்ற இம்முன்றினையும் பின்பற்றினால் வெற்றிச் சிகரத்தை எட்டிப்பிடிக்கலாம்.
மூளை - தசைகள் - நரம்புகள் என்று உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தினையே பரவ விடுங்கள். மற்ற எந்த கருத்தினையும் உங்கள் மனத்திற்குள் நுழைய அனுமதிக்காதீர்கள்.
நாம் நினைக்கும் எண்ணங்கள் யாவும் விதை வடிவத்தை பெற்று பின்னர் நம் சூட்சம சரீரத்தில் சிறிது காலத்திற்கு தங்கி பின்னர் வெளிப்பட்டு வந்து அதற்குரிய பலன்களைத் தருகின்றன. இந்தப் பலன்களே மனிதனுடைய வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன.
ஒரு நல்ல கருத்தை எடுத்துக் கொள்ளுங்கள் - அந்த ஒரு கருத்தையே உங்கள் வாழ்க்கை மயமாக்குங்கள். அக்கருத்தையே நாளும் கனவு காணுங்கள். அக்கருத்தை முன்னிறுத்தியே வாழ்க்கையை நடத்துங்கள். வாழ்க்கை சொர்க்கமாகும்.
எழுந்திருங்கள்! விழித்துக் கொள்ளுங்கள். இனியும் தூங்க வேண்டாம். எல்லாத் தேவைகளையும் எல்லாத் துன்பங்களையும் போக்குவதற்கான பேராற்றல்! உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது.இதைப் பூரணமாக நம்புங்கள்.
மற்றவர்களின் தெய்வீக இயல்பை வெளிப்படுத்த உதவி செய்வது தான். நம்முடைய தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழியாகும்.
பொய் சொல்வது சாதாரண விஷயம் அல்ல. அது ஒரு கலை.பொய் சொல்ல அசாத்திய திறமை வேண்டும். ஏராளமான ஞாபக சக்தி வேண்டும். ஆனால் பொய் சொல்லி பிறரை ஏமாற்றுபவர்கள் மற்ற ஏமாற்றுக்காரர்களாலேயே பாடம் பெறுவார்கள்.
துக்கம் என்பது அறியாமையின் காரணமாகத்தான் ஏற்படுகிறது.வேறு எதனாலும் அன்று.
கடலைக் கடக்கும் இரும்பு போன்ற மன உறுதியும்; மலைகளையே துளைத்துச் செல்லும்; வலிமை தோள்களுமே; நமக்குத்தேவை. வலிமைதான் வாழ்வு பலவீனமே மரணம். மிகப்பெரிய இந்த உண்மையை உணந்து கொள்ளுங்கள்.

Thursday, December 3, 2009

எங்கள் மதமே உயர்ந்தது...!

தங்கள் நிலத்தில் விளைந்த பருத்தியை விற்பனைக்காக அருகிலுள்ள ஊர்ச் சந்தைக்கு தங்களது வண்டிகளில் கொண்டு சென்று கொண்டிருந்தனர். அவ்வழியே இருந்த ஒரு ஆலமரத்தினடியில் இளைப்பாறிச் செல்லலாமென்று அந்தப்பக்கம் வந்த விவசாயிகள் பலரும் அந்த மரத்தடியில் அமர்ந்திருந்தனர். அங்கிருந்த கூட்டத்தில் சைவம், வைணவம், புத்தம் என்று மும்மதத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். அவர்கள் பேச்சுகளுக்கிடையே அவர்களுக்குள் அவரவர் மதமே உயர்ந்தது என்று விவாதம் வந்தது.சைவ மதத்தைச் சேர்ந்தவர் ஒருவர் "சிவபெருமான்தான் அனைத்துக்கும் மேலானவர். சைவ மதம்தான் உலகில் உண்மையான சமயம்" என்றார்.வைணவ மதத்தைச் சேர்ந்த இன்னொருவர் "இல்லையில்லை திருமால்தான் பெரியவர். வைணவமே உண்மையான சமயம்" என்றார்."புத்தரை மறந்து விட்டு நீங்கள் இருவரும் இப்படி சண்டை போட்டுக் கொள்வது வேடிக்கையாக இருக்கிறது. புத்த மதம்தான் அனைத்திலும் சிறந்தது" என்றார் புத்த மதத்தைச் சேர்ந்த மற்றொருவர்.அவ்வளவுதான் அங்கு கூடியிருந்த மூன்று மதத்தினரும் மூன்று பிரிவுகளாகப் பிரிந்து தங்கள் மதத்தின் பலத்தைக் காட்டும் வேகத்தில் பேசி, கடைசியில் அடித்துக் கொள்ளும் நிலைக்கு வந்து விட்டனர்.இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பெரியவர் ஒருவர், "ஏன் இப்படி அடித்துக் கொள்கிறீர்கள். எது உண்மையான சமயம் என்று உங்களுக்குத் தெரிய வேண்டும். அவ்வளவுதானே?" என்றார்."ஆமாம்" என்றார்கள் அனைவரும்."நீங்கள் கொண்டு வந்திருக்கும் பருத்தியை விற்பதற்காகத்தானே சந்தைக்குச் செல்கிறீர்கள். அங்கு யாருடைய பருத்தி அதிக விலைக்குப் போகும்? சைவருடையதா? வைணவருடையதா? புத்த சமயத்தவருடையதா? உங்களில் யாராவது சொல்லுங்கள் என்று கேட்டார் பெரியவர்."சந்தையில் யாருடைய பருத்தி தரமுடையதாக இருக்கிறதோ அதுதான் அதிக விலைக்குப் போகும். சந்தையில் யாருடைய நிலத்தில் விளைந்தது என்று பார்த்து யாரும் வாங்குவதில்லை" என்று பதிலளித்தார் ஒருவர்."நல்லது" என்ற பெரியவர், "அதே போலத்தான் கடவுளும். நீங்கள் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம்.எப்படிப் பருத்தி வாங்குபவன் எந்த நிலத்தில் விளைந்தது என்று பார்ப்பதில்லையோ அது போல கடவுளும் சமயம் பார்ப்பதில்லை. யார் நல்ல வாழ்க்கை வாழ்கின்றனரோ அவரே கடவுளுக்கு மிகவும் பிடித்தமானவர். அவரைப் பொறுத்தவரை எல்லா சமயமும் ஒன்றுதான். இனி மேலாவது மதத்தின் பெயரால் சண்டை போடாதீர்கள்." என்றார்.இதைக் கேட்ட மும்மதத்தினரும் அமைதியடைந்து அந்தப் பெரியவரை வணங்கி விட்டு ஒற்றுமையாகச் சந்தைக்குக் கிளம்பினர்.

Thursday, November 12, 2009

பணத்திற்கான மொழிகள்

  • பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது.
  • பணக்காரனாய் சாக வேண்டும் என்பதற்காக வறுமையில் வாழ்வது வடிகட்டிய முட்டாள்தனம்.
  • பணக்காரன் ஆக வேண்டுமா? அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை. தேவைகளைக் குறைத்துக் கொண்டாலே போதும்.
  • நாம் பணக்காரர்களாக இருக்க கடமைப்பட்டிருக்கவில்லை. ஆனால் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
  • பணப்பிரச்சனை என்றால், எல்லோரும் ஒரே மதத்தினர்தான்.
  • பணம் ஒன்றே வாழ்வின் இலட்சியம் என்றால் அது தவறான வழியிலேதான் தேடப்படும்.
  • பணத்திற்குக் கடல் நீரின் குணம் ஒன்று உண்டு. கடல் நீரைக் குடிக்கக் குடிக்கத் தாகம் அதிகமாகும்.
  • சிலர் பணத்தை வெறுப்பதாகக் கூறுவர். ஆனால், அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தை!
  • பணம் தலைகுனிந்து பணியாற்றும் அல்லது தலைகுப்புறத் தள்ளிவிடும்.
  • பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஒழுக்கத்தை விற்று விடாதே.
  • பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன் கேட்கும் போதுதான் தெரியும்.
  • பணமும் இங்கித நடவடிக்கையும் ஒரு கனவானை உருவாக்குகின்றன.
  • பணத்தை அடிக்கடி குறை கூறுவார்கள். ஆனால் அதை யாரும் மறுப்பதில்லை.
  • பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம். அது இல்லாதவனுக்குக் கவலை.
  • பணமும் மகிழ்ச்சியும் பரம விரோதிகள். ஒன்றிருக்குமிடத்தில் மற்றொன்று இருப்பதில்லை.
  • நாமெல்லாம் பணத்திற்க்காக என்ன செய்யலாம் என யோசிப்போம் ஆனால் நம்மில் சிலர் பணத்தை என்ன செய்வது என்று யோசிப்பர்.

Saturday, October 24, 2009

காற்றாலை பயணம்

நான் என் அலுவலக வேலையாக நாகர்கோவில் வரை சென்றிருந்தேன். எனக்கு தெரிந்து நான் நாகர்கோவில் செல்வது இது இரண்டாவது முறை. முதல் முறை என் பெற்றோரோடு என் சிறு வயதில் சென்றிருந்தேன்.அப்பொழுது போகின்ற வழியில் ஒன்டிரண்டு காற்றாலைகளை பார்த்ததுண்டு. என் அப்பாவிடம் அதைப் பற்றி கேட்ட ஞாபகம்..... ஆனால் இப்பொழுது சென்று பார்க்கையில் திருநெல்வேலியை கடந்தவுடன் வழி நெடுகிலும் இந்த காற்றாலைகள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டுள்ளன. இந்தியாவிலேயே தமிழகம் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்வதிலும் முதலிடம் வகிக்கிறது என்று ஒரு தினசரி மூலம் நான் அறிந்ததுண்டு. அது எவ்வளவு தூரத்திற்கு உண்மை என்று நான் பார்த்த பொழுது தான் தெரிந்து கொண்டேன்.



முன்பெல்லாம் சில அர்ஜுன் படங்களில் வில்லனை அறிமுகம் செய்யும் காட்சியில் சில காற்றாலைகள் ஓடும் அருவியில் வைக்கப்பட்டு சுற்ற வைத்துக் கொண்டிருப்பார்கள்.வில்லன் கோஷ்டியினர் அதன் மூலம் மின்சாரம் எடுப்பார்களா இல்லையா என்று எனக்குத் தெரியாது......



சரி இந்த 'wind mills', காற்றாலைகள் என்ன தெரியுமா? ராட்சத அலகுகள் ('Blades') கொண்ட காத்தாடி ! நம்ம சின்ன வயசிலே பனை மட்டையை எடுத்து ஒரு குச்சியிலயோ அல்லது கருவேல மரத்தின் முள்ளிலோ கட்டி அது கீழே விழாமல் இருப்பதற்க்காக ஒரு ஆட்டுப் புழுக்கையை அந்த முள்ளின் நுனியில் வைத்து வேகமா ஓடிறப்ப சுத்திகிட்டே இருக்குமே! அது நாம் ஓடும் பொழுது காற்றின் விசையாலே சுத்திறதை எத்தனை நாள் பார்த்து சந்தோசப்பட்டிருப்போம்.....சமயத்திலே, அதுக்கு வர்ணம் எல்லாம் பூசி ஒடறப்ப அழகு பார்த்திருப்போம். இதெல்லாம் நான் அந்த பெரிய காற்றாலைக்கு முன் நின்று யோசித்துப் பார்த்தேன்.அந்த சுட்டெரிக்கும் வெயிலில் என்னால் ஒரு ஐந்து நிமிடம் கூட நிற்க முடியவில்லை.அப்பொழுதெல்லாம் வீட்டில் எவ்வளவு அடி வாங்கி, சுட்டெரிக்கும் வெயில் என்று பாராமல் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறோம் என்று மனசுக்குள் ஒரு இனம் புரியாத சந்தோசம். இதெல்லாம் நகர வாசிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.வேண்டுமென்றால் அவர்கள் ரெடிமேட் காத்தாடிகளை வைத்து விளையாடிருப்பார்கள்.


அது இப்ப நாம் வாழ தேவையான சக்தி கொடுக்குதுன்னா பார்த்துக்கங்களே! இந்த ராட்சத காற்றாலை பண்ணைகளை நீங்க திருநெல்வேலியிலிருந்து கன்னியாக்குமரி போறப்ப நிறைய பார்த்திருக்கலாம்! அது காலி மைதானத்திலே இந்த நூற்றுக்கணக்கான காற்றாலைகளை நிர்மானித்து அதிலிருந்து மின்சாரம் எடுப்பது! இது மாதிரி நல்ல காத்தடிக்கும் இடங்கள்ல இதை நிர்மானிச்சா, அந்த காத்தின் விசையால் ராட்சச காத்தாடிகள் சுழண்டு அந்த காத்தாடிகளோட இணைக்கப்பட்ட கியர்களும் சுழன்று வட்டமா சுத்துற விசையை கியர் மூலம் மாத்தி அதை ஒரு பெரிய செங்குத்தான தண்டின் ('Tubular shaft')வழியா அந்த விசையை கடத்தி பிறகு அந்த செங்குத்து தண்டுடன் இணைக்கப்பட்ட இன்னொரு சுத்தும் தண்டின் வழியால் இணைக்கப்பட்ட ஜெனரேட்டர்களை இயக்கி மின்சாரம் எடுப்பதே இந்த காற்றாலை மின்சாரம்! இதுக்குன்னு நிலம் வாங்கி இதை நிர்மானிச்சு மின்சாரம் எடுக்க அரசாங்கமே செலவு செய்து! சில சமயம் தனியீட்டார்களின் முதலீடுகளாலும் இது நிர்மானிக்கப்படுகிறது! இப்பொழுதெல்லாம் தனியார் நிறுவங்களின் முதலீடுகள் தான் இந்த துறையில் மேலோங்கி இருக்கிறது. இது போன்று எடுக்கப்படும் மின்சார செலவு கம்மி, ஆனால் ஒரு காற்றாலையின் விலை ஒரு கோடியிலிருந்து இருபது கோடி வரை......அப்புறம் கழிவுகளால் உண்டாகும் மாசு எதுவும் ஏற்படுத்தவதில்லை!
இந்த காத்தாடி இன்னைக்கு நேத்து வந்ததில்லை, இது ஒரு பழைய தொழில்நுட்பம்! அதாவது இதை 12ம் நூற்றாண்டிலேயே கண்டுபிடிச்சிட்டாங்க! அதிகமா இதன் உபயோகம் ஐரோப்பாவில் தான் முதல்ல இருந்தது, அதுவும் ஹாலந்து நாட்டில் மொத்த விவசாயமும் இந்த காற்றாலைகளால் இயங்கப்பட்ட கிணத்து தண்ணி எடுத்து இரைக்கும் கருவிகளால் செஞ்சாங்க, அதாவது நீர்பாசன வசதிகளில் இந்த காற்றாலைகள் ஒரு முக்கியமான அங்கம்! அப்பறம் இந்த இரயில்வே நெட்வொர்க் அந்த காலத்திலே அதிகரிச்சோன, நீராவி இஞ்சின்களுக்கு அங்கங்க தண்ணி இரைச்சு ஊத்த இந்த காற்றாலைகளை பயன் படுத்தினாங்க! அமெரிக்காவில , 1930க்கு முன்னே மொத்த விவசாயமும் இந்த காற்றாலைகள் கொண்டு தான் செஞ்சாங்க! அந்த காலத்திலே விவசாயம் மட்டுமில்லை மக்கா சோளம் அரைக்கவும் இந்த் காற்றாலை விசையை உபயோகப்படுத்தினாங்க! ஆனா இந்த மலிவான மின்சாரம் கிடைச்சோன இந்த காத்தாடிகள் அப்படியே செத்து போச்சு! இப்ப எண்ணெய் விலை அதிகம்னோன பழையபடி தூசி தட்டி எடுத்து திருப்பி எப்படி இன்னும் சிறப்பா காற்றாலைகள் நிறுவலாம்னு ஆராய்ச்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் நம்மவர்கள் பெற்றிருப்பது தமிழர்களாகிய நமெக்கெல்லாம் பெருமை தான்......


Thursday, October 15, 2009

செத்திருப்பீர்கள் என்று ராஜபக்சே சொன்னது ஒரு ஜோக்

பிரபாகரனுடன் இருந்திருந்தால் இன்னேரம் செத்திருப்பீர்கள் என்று ராஜபக்சே சொன்னதை நான் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்.
மேலும் காமெடியைப் படிக்க :

http://thatstamil.oneindia.in/news/2009/10/15/tn-rajapakse-just-joked-says-thirumavalavan.html

Monday, October 12, 2009

வராலாறுகளில் பெண் ஆட்சியாளர்கள்

வடகிழக்கு ஆப்பிரிக்காவின் அன்றைய மெரோவி (Meroe) ராஜ்ஜியத்தை கி.மு. முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில் குஷ் (Cush) அரசி ஆண்டிருக்கிறார்! இதன் தலைநகராக குஷிட்டே (Cushite) இருந்துள்ளது. இன்றைக்கு இந்த நாடு சூடான் என்று நம்பப்படுகிறது! இவர்தான் முதல் பெண்ணரசி என்ற பெருமையைப் பெறுகிறார்!
கி.மு.35ல் ஸ்ரீலங்காவை அரசி சிவாலி ஆண்டார்! இவர் தமிழகம் வழி வந்த தமிழ்ப் பெண் என்பாரும், சிங்களவப் பெண்ணரசி என்று சொல்வாரும் உண்டு! இவருக்குப் பின் அரசி அனுலா கி.மு. 42லிருந்து 47வரை ஆட்சி செய்தார்!
எகிப்தை ஏழாவது கிளியோபாட்ரா(Queen Cleopatra VII ) கி.மு 50 லிருந்து 51 வரை ஆட்சி செய்தார். இவருக்குப் பின் கி.மு.80-81ல் பெர்நீஸ் ஆட்சி செய்தார். அரசி அர்சினோவ் (கி.மு.270முதல் 279வரை) அரசி நெ·ப்ரேட்டரி (கி.மு. 1225லிருந்து 1292 ) அரசி நெ·ப்ரேட்டிட்டி (கி.மு 1350-1372 ) அரசி டையீ (கி.மு.1340-1415) அரசி ஹேட்செப்ஸ்ட் (கி.மு.1498-1501) ஆகியோர் எகிப்தை ஆட்சி செய்துள்ள பெண் அரசிகளாவார்கள்!
பிரிட்டனின் அன்றைய இசினியா என்றழைக்கப்பட்ட நாட்டின் அரசன் பிராஸ்டகஸ் கி.பி.60ல் இறந்துவிட 61ல் அவனது மனைவி பொடீசியா ஆட்சிக்கு வந்தார். பின்னர் ரோமானியர்கள் இவளது ஆட்சியைக் கைப்பற்றினர்.
இலங்கையை ஸ்ரீமாவோ பண்டாரநாயகா மும்முறை ஆட்சி செய்தவர் இவர்தான் முதல் பெண் பிரதமர்! இவரின் மகளான சந்திரிகா குமாரதுங்கா தனது தாயாரை பொதுத் தேர்தலில் வென்று பிரதமரானதும் குறிப்பிடத்தக்கது!
இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த நேருவின் மகளான இந்திராகாந்தி இரண்டு முறை பதவி வகித்த பிரதமரும் உலகின் இரண்டாவது பெண் பிரதமரும் ஆவார்! (19 ஜனவரி 1966 முதல் 24 மார்ச் 1977 வரையிலும், 14 ஜனவரி 1980 முதல் 31 அக்டோபர் 1984 வரை பிரதமராக இருந்தார். பதவியிலிருந்த போது மெய்க்காப்பாளர்களில் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார் இவர்!
இஸ்ரேல் நாட்டின் முதல் பெண் பிரதமர் கோல்டா மேயர் (1969-1974) உலகில் மூன்றாவது பெண் பிரதமர்!
மத்திய ஆப்பிரிக்க குடியரசின் பிரதமராக இருந்தவர் எலிசபெத் டோமிட்டின்(1975-1976)
பிரிட்டனின் தேர்ந்த்டுக்கப்பட்ட முதல் பெண் பிரதமர் தாட்சர்!(4 மே1979 முதல் 28நவ.1990 வரை) ஐரோப்பிய நாடுகளிலிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் பிரதமர் என்ற பெருமையும் உடையவர்.
ஏஞ்செலா மெர்க்கெல் ஜெர்மனின் கூட்டரசு வேந்தராக 22 நவம்பர் 2005 லிருந்து பொறுப்பேற்றுள்ளார்.
சாவோ டோம் மற்றும் பிரின்சிபே நாட்டின் பிரதமராக மரியா டோ கார்மோ சில்வேரா 8 ஜூன் 2005 லிருந்து பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு முன் மரியா டாஸ் நேவாஸ் செய்டா பேப்டிஸ்ட்டா டி செளஸா 7 அக்டோபர் 2002 முதல் 16 ஜூலை 2003வரை ஆட்சிப் பொறுப்பிலிருந்தார்.
உக்ரைன் நாட்டின் பிரதமராக யூலியா டிமோஷென்கோ 24 ஜனவரி முதல் அந்த ஆண்டு செப்டெம்பர் 8ம் தேதி வரை ஆட்சிப் பொறுப்பிலிருந்தார்.
ராட்மிலா சேகெரின்ஸ்கா மசிடோனியாவின் பொறுப்பு பிரதமராக 2004ம் ஆண்டு இருந்தார்.
லூயிஸா டயஸ் டியாகோ ஆப் மொஸாம்பிக் நாட்டின் பிரதமராக 17 பிப்ரவரி 2004 லிருந்து பிரதமராக ஆட்சிப் பொறுப்பேற்று இருந்து வருகிறார்.
பின்லாந்தின் முதல் பெண் பிரதமராக அன்னெலி டுலிக்கி ஜாட்டீன்மாகி 2003ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதியிலிருந்து ஜூன் 18ம் தேதிவரை மூன்று மாதங்கள் பதவி வகித்து விட்டு சொந்தக் காரணங்களால் பொறுப்பிலிருது ராஜினாமா செய்தார்.
தென்கொரியாவின் பிரதமராக சாங் சேங்கை அந் நாட்டு அதிபர் கிம் 2002ல் நியமித்தார். பாராளுமன்றம் இந்த நியமனத்தை நிராகரிக்கவே பத்து மாதங்களுக்குப் பிறகு பதவி விலகினார்!
1999 டிசம்பர் 10லிருந்து ஹெலன் எலிசபெத் கிளார்க் நியூசிலாந்தின் பிரதமராக இருந்து வருகிறார். இவருக்கு முன் ஜென்னி ஷிப்லே 1997 லிருந்து டிசம்பர் 1999 வரை பிரதமராக இருந்தார். இவரே இந்த நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற தகுதியும் உடையவர்!
நார்வே நாட்டின் பிரதமராக மூன்று முறை இருந்த பெருமை குரோ ஹார்லெம் ப்ருண்ட்லாண்டுக்கு உண்டு. இவர் உலக சுகாதார அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மகாத்மாவின் வாழ்விலே


காந்தியடிகள் கண்காட்சி ஒன்றுக்கு சென்றிருந்தார். அங்கு ஒருவர் அவருக்குத் துணையாக கண்காட்சியைப் பற்றி விளக்கம் அளித்துக் கொண்டே வந்தார்.ஒரு இடத்தில் அருகருகே இரண்டு தேனீக்கள் வளரும் பெட்டி இருந்தது. அதைக் காட்டிய அவர், "ஒரு பெட்டியில் உள்ள தேனீ மறந்தும் கூட அடுத்த பெட்டிக்குப் போகாது. எதிர்பாராமல் போக நேர்ந்தால் அடுத்த பெட்டியில் உள்ள தேனீக்கள் புதிதாக நுழைந்த தேனீயைக் கொன்று விடும்" என்றார்.இதைக் கேட்ட காந்திஜி வாயில்லாப் பூச்சியாக இருந்தாலும் அதற்குண்டான அறிவுத் திறமையைக் கேட்டு ஆச்சரியப்பட்டார். அப்போது விளக்கம் அளித்துக் கொண்டு வந்தவர் முதல் பெட்டியின் வாயிலில் இருந்த ஒரு தேனீயை பிடித்தி பக்கத்துப் பெட்டியின் நுழைவாயிலில் வைத்து விட்டார்.உடனே காந்திஜி குறுக்கிட்டு, "வேண்டாம் நீங்கள் சொல்லியதே போதும். நான் புரிந்து கொண்டேன். அந்த உயிரை ஹிம்சை பண்ண வேண்டாம்." என்றார்.சொல்லி முடிப்பதற்குள் அந்த ஆசாமி தேனீயை பக்கத்துப் பெட்டியின் உள்ளே வைத்து விட்டார். உடனே அந்த பெட்டியிலிருந்த தேனீக்கள் அனைத்தும் ஒன்று கூடி இந்தத் தேனீயைக் கொட்டிக் கொன்று வெளியே தள்ளி விட்டன. அனைத்தும் சில வினாடிகளிலேயே முடிந்து விட்டன.இந்தக் காட்சியைக் கண்ட காந்திஜியின் கண்களில் நீர் நிறைந்து விட்டது. கண்ணாடியைக் கழற்றி கண்ணீரைத் துடைத்துக் கொண்டே அந்த மனிதரைப் பார்த்து, "ஓர் உயிர் மாண்டு போக காரணமாக இருந்து விட்டீர்கள். உம்மால் உயிர் தந்து அதைப் பிழைக்க வைக்க முடியுமா? இனி நான் இந்தக் கண்காட்சியைக் காண மாட்டேன்" என்று சொல்லி வருத்தத்துடன் திரும்பி விட்டார்.காந்தியடிகள் சிறிய உயிரினமான தேனீயின் உயிர் சித்திரவதையைக் கூட விரும்ப மாட்டார். அனைத்து உயிரிடத்திலும் அன்பு கொண்டவர் அவர்.
காந்திஜி வெள்ளையனே வெள்ளையேறு என்று முழக்கமிட இந்தியர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மக்கள் காந்தியின் பின்னே அணிவகுத்து நின்றனர்.
இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இது பற்றிய பேச்சு வந்தது. போராட்டத்தை எந்த வழியில் அடக்கலாம் என்று கருத்துக் கேட்கப்பட்டது. அப்போது சர்ச்சில் எழுந்து கீழ்கண்டவாறு கூறினார்.
"இந்த காந்தி துப்பாக்கி ஏந்தி போரிட்டால் நான் பீரங்கியால் நசுக்கி இருப்பேன். பீரங்கி கொண்டு போராடினால் விமானம் கொண்டு அழித்திருப்பேன். ஆனால் அவரோ ஆயுதங்களைப் புறக்கணித்துவிட்டு அகிம்சை, சத்தியம் இவைகளையே ஆயுதமாகக் கொண்டு போராடுகிறார்கள். இவற்றை மழுங்கடிக்கக் கூடிய ஆயுதங்கள் உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் அவரை வெற்றி கொள்ள முடியவில்லை. பணிந்து போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. "
சர்ச்சில் இப்படிக் கூறியது அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களைத் திகைக்க வைத்தது.
ஓர் சமயம் ஓர் ஆங்கிலப் பத்திரிகையாளர் காந்தியை சந்தித்துப் பேசினார். அப்போது காந்தியை கிண்டல் செய்யும் நோக்கத்துடன், ""காந்திஜி, உங்கள் மக்கள் ஏன் உங்களைத் தங்கள் பிரதிநிதியாக ஏற்றுக் கொண்டனர்? வேறு சிறந்த தலைவர்களே அவர்களுக்குக் கிடைக்கவில்லையா?'' என்று கேட்க, உடனே மஹாத்மா காந்தி பெருந்தன்மையாக.... ""உங்களை (ஆங்கிலேயர்) சமாளிக்க நானே போதும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்'' என்றார்.
காந்திஜி ஒரு நாள் சலவைக்கூலி அதிகமாக ஆவதைக் கவனித்தார். மேலும் சலவைக்குப் போடப்பட்ட துணிகள் குறித்த காலத்தில் கிடைக்காமல் இருந்தன. எனவே, துணிகளைத் தாமே சலவை செய்வது என்ற முடிவுக்கு வந்தார்.
உடனே சலவை செய்யும் முறைகளை விளக்கும் புத்தகம் ஒன்றை வாங்கி வந்து படித்தார். சலவை செய்யும் முறைகளையும், இஸ்திரி போடுவது குறித்தும் கற்றுக் கொண்டார்.
முதன்முறையாக அவர் சலவை செய்த உடையைப் போட்டுக் கொண்டு நீதிமன்றத்திற்குச் சென்றார். அங்கிருந்தவர்களெல்லாம் அவரைப் பார்த்து சிரித்தார்கள். அதன் காரணம் பின்னால்தான் தெரிந்தது.
முதன்முறையாதலால் காந்திஜி சலவை செய்த சட்டைக்கு அதிகமாகக் கஞ்சி போட்டு விட்டார். அதனால் அவருடைய சட்டைக் காலரிலிருந்து கஞ்சிப்பசை காய்ந்து உதிர்ந்து கொண்டிருந்தது. இதைக்கண்டுதான் மற்றவர்கள் சிரித்தார்கள். ஆனால், காந்திஜி பிறர் சிரிப்பதைப் பற்றி என்றுமே கவலைப்படுவதில்லை. தமது செயலில் மட்டும் கருத்தாக இருப்பார்.
சலவைத் தொழிலைத் தாமே செய்தது போல் முடிவெட்டும் தொழிலையும் அவரே செய்யத் தொடங்கினார்.
ஒருநாள் காந்திஜி முடிவெட்டும் கடை ஒன்றுக்குச் சென்றார். அங்கே முடி வெட்டியவர் ஓர் ஆங்கிலேயர். ஆங்கிலேயர்கள் இந்தியர்களுக்கு முடி வெட்டமாட்டார்கள். ஆகவே, அவர் காந்திஜிக்கு முடிவெட்ட மறுத்து விட்டார். அத்துடன் ஏளனமாகவும் பேசினார். இதனால் காந்திஜியின் மனம் புண்பட்டது.
காந்திஜி உடனே கடையில் முடி வெட்டும் ஒரு கத்தரி வாங்கிக் கொண்டார். கண்ணாடியின் முன் நின்று தாமே முடிவெட்டிக் கொண்டார். முன்பக்கம் ஓரளவு சரியாகயிருந்தாலும் பின்பக்கம் சரியாக அமையவில்லை. இருப்பினும் அப்படியே நீதிமன்றத்திற்குச் சென்றார்.
நீதிமன்றத்தில் எல்லோரும் காந்திஜியைப் பார்த்து சிரித்தார்கள். உங்கள் முடியை எலி கத்தரித்து விட்டதா? என்று கேலி செய்தார்கள். காந்திஜியோ, "வெள்ளைக்கார நாவிதன் என்னுடைய கருப்பு முடியை வெட்ட மறுத்து விட்டான். ஆகையால் நானே வெட்டிக்கொண்டேன்" என்று பதில் சொன்னார். அதற்குமேல் அவர்கள் பதில் ஏதும் பேசவில்லை. காந்திஜியும் தாமே முடிவெட்டிக் கொள்வதையும் நிறுத்தவில்லை.
தன்னுடைய வேலைகளைத் தானே செய்து கொள்ள வேண்டும். எந்த வேலையும் தாழ்வானதில்லை, எல்லாம் உயர்ந்தவைதான்." என்பது காந்திஜியின் கொள்கை. இதை அவர் தம்முடைய வாழ்க்கையில் பின்பற்றி அதன்பிறகே பிறருக்கு எடுத்துச் சொன்னார்.

Thursday, October 8, 2009

உங்களுக்குத் தெரியுமா?

  • காலைப் பொழுதை AM என்கின்றோம் இது Ante meridiem என்னும் லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது. மாலைப் பொழுதை PM என்கின்றோம் இது Post meridiem என்னும் லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது.
  • Buck எனும் வார்த்தை டாலரை மட்டும் குறிப்பதற்கல்ல. அவரவர் நாணயத்தையும் பக் என்றும் சொல்லலாம்.
  • சாலைகளில் நேர்வழியாய் இல்லாமல் மாற்று வழியாய் செல்வதை Detour என்பர்.
  • அபார்ட்மென்ட் தேடும்போது பயன்படுத்தப்படும் BHK-யின் அர்த்தம் B-Bed Room-ஐயும் H-Hall (living room)-ஐயும் K-Kitchen-ஐயும் குறிக்கும்.
  • ஆங்கிலத்தில் ‘-dous’ என முடிவது நான்கு வார்த்தைகள் மட்டும் தான். அது tremendous, horrendous, stupendous, and hazardous
  • "The quick brown fox jumps over the lazy dog." என்ற இந்த வாக்கியம் ஆங்கிலத்தின் அனைத்து எழுத்துக்களையும் கொண்டுள்ளது.
  • abcdef என்ற ஆறு எழுத்துக்களும் கொண்ட ஒரு குறுகிய வார்த்தை Feedback.
  • ஆங்கிலத் தட்டச்சுப் பலகையின் ஒரே ஒரு வரிசையை மட்டும் பயன்படுத்தி நம்மால் தட்டமுடியும் மிக நீளமான வார்த்தை Typewriter.
  • ஏழு என்பது ராசி இல்லாத எண்ணாக கருதியதால் லத்தீன் நாட்டினர் அதை எழுதி பின் அடித்து விடுவர்.
  • உலகம் போற்றும் சாக்ரடீசுக்கு எழுதப் படிக்கத் தெரியாது.
  • ஆப்கானிஸ்தானில் ரயில்கள் கிடையாது.
  • மொசாம்பிக் (Mozambique) நாட்டிற்கு ஒரு சிறப்பு அதன் பெயரில் இருக்கிறது. அதன் ஆங்கிலப் பெயரில் a, e, i,o,u ஐந்து வவ்வல்ஸ் (Vowels) இருக்கிறது.
  • இந்தியாவில் நாம் சும்மா (இலவசமாய்) கிடைத்ததை ஓசியில் கிடைத்த்து என்கிறோம். இந்த ஓசி என்கிற வார்த்தை எப்படி வந்தது தெரியுமா? கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியிலிருந்த இந்தியாவில் அவர்கள் அனுப்பும் தபால்களில் ஓ.சி.எஸ் என்கிற முத்திரை குத்தப்பட்டிருக்கும். ஆன் கம்பெனி சர்வீஸ் என்கிற ஆங்கில வார்த்தைகளின் சுருக்கமான இந்த ஓ.சி.எஸ் முத்திரை குத்தப்பட்ட தபால்கள் ஸ்டாம்ப் ஒட்டப்படாமல் சென்றதால் ஓசியில் போகிறது என்று அதனைச் சொல்வார்கள். நாளடைவில் சும்மா கிடைக்கும் அனைத்தும் ஓசியாகி விட்டது.
  • a,b,c,d என்ற எழுத்துக்கள் ஜீரோ (Zero) , ஒன்று (One) முதல் தொண்ணூற்று ஒன்பது (Ninety Nine) வரையுள்ள ஆங்கில வார்த்தைகளில் இடம்பெறவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

Wednesday, October 7, 2009

நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள்

ஒரு பணக்கார வணிகனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர். அவர்களில் நான்காவது மனைவியை மட்டும் அவன் அதிகமாக நேசித்து அவளை நன்றாகக் கவ்னித்துக் கொண்டான். அனைத்திலும் சிறந்ததை அவளுக்குக் கொடுத்தான். மூன்றாவது மனைவியையும் நேசித்தான். அவளைப் பற்றி எப்பொழுதும் தன்னுடைய நண்பர்களிடம் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தான். எனினும் அவள் வேறொருவருடன் ஓடிப் போய் விடுவாள் என்கிற பயம் அவனுக்கு இருந்தது. அவன் தன்னுடைய இரண்டாவது மனைவியையும் நேசித்தான். அவனுக்கு ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் அவன் எப்பொழுதும் அவளின் உதவியை நாடுவான். அவளும் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லுவாள். வணிகனின் முதல் மனைவி உண்மையான வாழ்க்கைத் துணையாகத் திகழ்ந்தாள். அவனுடைய வீட்டையும், சொத்தையும், வணிகத்தையும் கவனித்துக் கொண்டாள். அவள் அவனை அதிகமாக நேசித்த போதிலும், அவன் அவளை நேசிக்கவில்லை.
ஒருநாள் வணிகன் திடீரென்று நோய் வாய்ப்பட்டு படுக்கையிலிருந்தான். அவன் இறக்கப் போவதை அறிந்து கொண்டான். எனவே அவன், தன் நான்காவது மனைவியை அழைத்து, "நீ என் அருகில் இருந்து என்னைக் கவனித்துக் கொள்வாயா?" என்று கேட்டான். அவள் என்னல் முடியாது என்று கூறி விட்டுப் போய் விட்டாள். அவள் கூறிய பதில் கூர்மையான கத்தியைப் போல் வணிகனின் இதயத்தைக் குத்தியது.
கவலையடைந்த அவன் தன் மூன்றாவது மனைவியை அழைத்தான். அதே கேள்வியைக் கேட்டான். அவள், "முடியாது. இவ்வுலக வாழ்க்கை எவ்வளவு இன்பமானது, நீங்கள் இறந்தவுடன் நான் மறுமணம் செய்து கொள்ளலாமென்று இருக்கிறேன்." என்றாள். இந்த பதிலைக் கேட்ட அவன் இதயம் கல்லானது.
அதன் பிறகு, அவன் தன் இரண்டாம் மனைவியை அழைத்து அவளிடமும் அதே கேள்வியைக் கேட்டான். அவளோ, "நான் மிகவும் வருந்துகிறேன். இந்த முறை நான் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. வேண்டுமென்றால் நான் உங்களை நல்ல முறையில் அடக்கம் செய்து விடுகிறேன்" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அவளுடைய பதிலும் அவனுக்கு இடி தாக்கியது போலிருந்தது.
அவன் கண்களை மூடினான். அப்பொழுது "நான் உங்களுடனே வருவேன், நீங்கள் எங்கே சென்றாலும் நான் உங்களைப் பின்பற்றுவேன்" என்று ஒரு சத்தம் கேட்டது. அது யார் என்று பார்க்க விரும்பி, தன் கண்களைத் திறந்து பார்த்த போது, அவனுடைய முதல் மனைவி நின்று கொண்டிருந்தாள். அவள் உணவு குறைபாட்டால் மிகவும் மெலிந்து போயிருந்தாள். அவன் அவளிடம், நான் நன்றாக இருந்த சமயம், நான் உன்னைக் கவனித்திருக்க வேண்டும் என்றான்.
உண்மையில் இந்த வணிகனைப் போல் நம் எல்லோருக்கும் நான்கு மனைவிகள் இருக்கிறார்கள்.
1. நான்காவது மனைவி நம்முடைய உடல். அது நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அதற்கு எவ்வளவு நேரம் செலவழித்தாலும், நாம் இறக்கும் போது அது நம்மோடு வராது. நம்மை விட்டுச் சென்று விடும்.
2. மூன்றாவது மனைவி நம்முடைய உடமைகள். சொத்து, பதவி போன்றவை நாம் இறந்த பின்பு வேறொருவருடையவராகி விடுகிறது.
3. இரண்டாவது மனைவி என்பது நம்முடைய குடும்பமும், நண்பர்களும். எவ்வளவுதான் அவர்கள் நம்முடன் நெருக்கமாக இருந்தாலும், அவர்கள் கல்லறை / எரியூட்டுமிடம் வரைதான் நம்முடன் வருவார்கள்.
4. நம்முடைய முதல் மனைவி என்பவள் நம்முடைய ஆன்மா. பொருள், சொத்து மற்றும் சுக போகத்தை நாடும் பொருட்டு அதைக் கவனிக்காமல் விட்டு விடுகிறோம். எனவே சாகும் நேரத்தில் புலம்புகிறோம்.
இப்படித்தான் வாழ்க்கையின் உண்மை அறியாமல் தவிக்கிறார்கள்.

கவசம் எப்போது பாதுகாக்கும்

தென்னிந்தியப் பகுதியைச் சேர்ந்த வீரன் ஒருவன் அக்பருக்கு இரும்புக் கவசம் ஒன்றை அன்பளிப்பாகக் கொடுத்தான். போர்க் காலத்தின் போது பாதுகாப்பிற்காக இரும்புக் கவசத்தை அணிந்து கொள்வதற்குத் தகுந்த முறையில் வீரன் கவசத்தை உருவாக்கி இருந்தான்.இரும்புக் கவசத்தைப் பார்த்து மகிழ்ந்த மன்னர் அதனை அரண்மனையிலிருந்த சிலை ஒன்றுக்கு அணிவிக்கச் சொன்னார். படை வீரர்களைக் கூப்பிட்டு சிலையை வாள்களால் தாக்குமாறு உத்தரவிட்டார். வாள்களால் தாக்கிய பின்பு சிலை உடையாமல் உள்ளதா? என்பதைச் சோதிக்க விரும்பினார்.வீரர்களும் சிலை மீது பலம் கொண்ட மட்டும் ஆயுதங்களால் தாக்கினார்கள். சிலை சிதறி மண்ணில் விழுந்தது. வீரர்கள் சிலை உடைந்து போன விபரத்தை மன்னரிடம் கூறினார்கள். மன்னர் அதிர்ச்சியுடன் சிலையைப் பரிசளித்த வீரனைக் கூப்பிட்டு கோபமாய்ச் சத்தமிட்டார்."மூடனே, நீ கொடுத்து விட்டுப் போன கவசத்தை அணிந்து போருக்குச் சென்றால் என் நிலைமை என்ன ஆகும்?" என்று ஆவேசத்துடன் கத்தினார். அன்பளிப்பு தருவார் என எதிர்பார்த்திருந்த வீரனுக்கு அக்பரின் கோபமான வார்த்தைகள் வேதனையை ஏற்படுத்தியது. மன்னரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட வீரன் அடுத்த முறை நல்ல கவசத்தைச் செய்து வருவதாகக் கூறிச் சென்றான்.இதையறிந்த பீர்பால் கவசமளித்த வீரனைக் கூப்பிட்டார். அரசர் கூறியது போல் உறுதியான கவசத்தை உருவாக்கிக் கொண்டு முதலில் தன்னை வந்து பார்க்குமாறு கூறினார். சில நாட்கள் கடந்தன. இரவு பகலாய்க் கண்விழித்து புதிய இரும்புக் கவசம் ஒன்றை உருவாக்கி அதை பீர்பாலிடம் கொண்டு வந்து காண்பித்தான். பீர்பால் அவ்வீரனிடம் சில யோசனைகளைக் கூறினார். அதன்படி அவ்வீரன் அக்பரைக் காணச் சென்றான்."அரசே, இந்த முறை நான் செய்து கொண்டு வந்திருக்கும் கவசம் மிகவும் உறுதியானது. பரிசோதித்துப் பார்த்தால் அதன் உண்மை புரியும்" என்றார்.அக்பரும் தனது பணியாளைக் கூப்பிட்டு அந்தக் கவசத்தை வேறொரு சிலையில் மாட்டச் சொன்னார்."அரசே, இம்முறை இந்தக் கவசத்தை சிலைக்கு அணிவிக்க வேண்டாம். நானே மாட்டிக் கொள்கிறேன். உங்கள் வீரர்களை வாளைக் கொண்டு என்னைத் தாக்கச் சொல்லுங்கள்" என்றான்.அக்பர் அதிர்ச்சி அடைந்தார். "உன் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டால் என்ன செய்வது?" என்றார் அக்பர்."என் உயிரை விட உங்கள் உயிர் முக்கியம். தயங்க வேண்டாம். அரசே என்னைத் தாக்கச் சொல்லுங்கள்." என்றான் அவ்வீரன். உடனே அக்பரும் வீரனைத் தாக்குவதற்கு உத்தரவிட்டார். அரண்மனை வீரர்கள் ஆயுதங்களால் தாக்கத் துவங்கினார்கள்.இரும்புக் கவசம் அணிந்திருந்த வீரன் அனைத்து போர்முறைப் பயிற்சிகளையும் கற்றிருந்தபடியால் அரண்மனை வீரர்களைத் திருப்பித் தாக்கினான். உடலில் கவசம் அணிந்திருந்ததால் அவனுக்கு அடி எதுவும் படவில்லை. அரண்மனை வீரர்களுக்குக் காயமேற்பட்டது. இதைக் கண்ட அக்பர் அதிர்ச்சி அடைந்தார். உடனே சண்டையை நிறுத்தும்படி கூறினார்."வீரனே, எதற்காக எமது வீரர்களிடம் சண்டையிட்டாய்?" என்றார் அக்பர்."மன்னிக்க வேண்டும் அரசரே! இந்தக் கவசத்தை அணிந்து கொண்டு தாங்கள் போருக்குப் போகும் போது எதிரிகள் உங்களைத் தாக்கினால் நீங்கள் திருப்பி சண்டையிடுவீர்கள் அல்லவா? அப்படித்தான் என்னை ஆயுதங்களால் தாக்கியவர்களை நான் தடுத்து நிறுத்தி, திரும்பத் தாக்குதலை நடத்தினேன்." என்றான்.அக்பருக்குத் தன் தவறு புரிந்தது.வீரனுக்கு இந்த யோசனையைச் சொன்னவர் பீர்பால்தான் என்று தெரிந்து கொண்டு அவரையும் பாராட்டினார்.

Tuesday, October 6, 2009

நடிகவேள்

எம்.ஆர்.ராதா எந்த அதிகாரங்களைக் கண்டும் அஞ்சாதவர். தன் மனதில் பட்டதைச் சொல்லும் சுபாவத்துக்குச் சொந்தக்காரர். அவர் இம்பாலா காரில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு ஊர்வலம் வந்த கதை பலருக்கும் தெரியும். அதே இம்பாலா காரை, அப்போதைய குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் சென்னை வந்தபோது, அவரை அழைத்து வருவதற்காக எம்.ஆர்.ராதாவிடம் சில அதிகாரிகள் கேட்டிருக்கிறார்கள். 'இந்த ராதாகிருஷ் ணன் போவதற்காகத்தான் கார். அந்த ராதாகிருஷ் ணனுக்காக இல்லை' என்று துணிச்சலாக மறுத்தவர். அண்ணா, பெரியாரைவிட்டுப் பிரிந்தபோது 'அண்ணாவின் அவசரப் புத்தி' என்று புத்தகம் எழுதி, அவரிடமே கொண்டுபோய்க் கொடுத்தார். 'நீங்களா எழுதினீர்கள்?' என்று அண்ணா கேட்க, 'எனக்குத்தான் எழுதத் தெரியாதே, நான் சொல்லச் சொல்ல எழுதினது. யார் எழுதினால் என்ன?' என்றார். அந்தக் காலகட்டத்தில் கட்சியில் இருந்தவர்களுக்கு ஒளி வட்டம் சூட்டப்படுவதைக் கடுமையாக எதிர்த்தவர் ராதா. அண்ணா, திராவிடர் கழகத்தில் 'தளபதி' எனத் தொண்டர்களால் அழைக்கப்பட்டவர். ஒருமுறை அவர் நாடகத்துக்கு அண்ணா வந்திருந்தபோது, மேக்கப் ரூமில் இருந்த ராதாவிடம் 'தளபதி வந்தி ருக்கிறார்' என்று அவசர அவசரமாகச் சொல்லியிருக் கிறார்கள். 'தளபதி குதிரையை எங்கே நிறுத்திட்டு வந்திருக்கார்?' என்று நக்கலாகக் கேட்டாராம் ராதா. ஓசியில் நாடகம் பார்க்கும் வி.ஐ.பி-க்களையும், 'காசு கொடுத்து டிக்கெட் வாங்கினவன்லாம் தரையிலே உட்கார்ந்திருக்கான். ஓசியிலே வந்தவன்லாம் சேர்ல உட்காந்திருக்கான்' என்று நாடக மேடையிலேயே கலாய்ப்பாராம்.

1966ல் தமிழக அரசின் சார்பில் சிறந்த நடிகருக்கான விருதுக்கு ராதா தேர்ந்தெடுக்கப்பட்டு கவர்னர் பரிசளிப்பதாய் இருந்தது. ஆனால் 'மொழி தெரியாத கவர்னர் என் படத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. எனவே விருது வாங்கமாட்டேன்' என்று மறுத்துவிட்டார்.

பெரியாரின் போர்ப்படைத்தளபதியாய் வாழ்ந்த சுயமரியாதை வீரன் பட்டுக்கோட்டை அழகிரிதான் ராதாவிற்கு 'நடிகவேள்' பட்டம் அளித்தவர். இன்று உலகமெங்கும் புகழ்பெற்று பெயர்போலவே மாறிவிட்ட 'கலைஞர்' என்னும் பட்டத்தைக் மு.கருணாநிதிக்கு வழங்கியவர் ராதாதான்.

இளவயதில் சாதனை படைத்தவர்கள்

இந்திய சரித்திரத்தில் இடம் பெற்ற போது பகத்சிங் வயது 23

புத்தர் ஞானம் பெற அரண்மனையை விட்டு வெளியேறிய போது வயது 27

ஜான்சி ராணி வெள்ளையனை எதிர்த்து வீரத்துடன் போரிட்டபோது வயது 25

திருப்பூர் குமரன் வெள்ளையருக்கு எதிரான போராட்டத்தில் ரத்தம் சிந்திய போது வயது 26


அலெக்சாண்டர் பாரசீகத்தின் மீது படையெடுத்த போது வயது 22


ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு விதியை கண்டறிந்த போது வயது 24


கலிலியோ தெர்மொமீட்டரைக் கண்டுபிடித்த போது வயது 20


மார்கோ போலோ உலகப் பயணத்தை தொடங்கிய போது வயது 17


கிரகாம்பெல் தொலைபேசியை கண்டறிந்த போது வயது 29


பாஸ்கல் கணக்கிடும் கருவியைக் கண்டுபிடித்த போது வயது 19


மாண்டலின் சீனிவாசன் புகழ் பெற்ற போது வயது 15

Monday, October 5, 2009

தற்செயலாக உருவான விஞ்ஞானம்

மரத்திலிருந்து ஒரு ஆப்பிள் தற்செயலாக கீழே விழுந்தது. அதை பார்த்துதான் புவியீர்ப்பு விசையை நியூட்டன் கண்டுபிடித்தார். இது போலவே பெரும்பாலான விஞ்ஞான கண்டுபிடிப்புகள் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில உங்களுக்காக.....

சர்ச்சின் பிரார்த்தனை கூடத்தில் அமர்ந்திருக்கும் போது அங்கு அலங்கார விளக்குகள் லேசாக ஆடிக்கொண்டிருந்ததை கவனித்தார் கலிலியோ. இதன் மூலம் தான் தனி ஊசல் தத்துவத்தை உருவாக்கினார்.

காது கேளாதவர்களுக்கு ஒரு கருவியை கண்டுபிடிக்க முயன்ற போது தான் கிரகாம் பெல் டெலிபோனை கண்டுபிடித்தார். ஒருமுறை தன் உதவியாளர் வாட்சனை கீழ் அறைக்கு அனுப்பி அங்கிருக்கும் கருவியில் ஏதாவது கேட்கிறதா என்று கவனிக்க சொன்னார். மாடியில் உள்ள அறையில் உள்ள கருவியில் கிரகாம் பெல் பேசுவார்.ஆனால் கீழே இருக்கும் வாத்சொனுக்கு ஒன்றுமே கேட்காது.தினமும் இதே வேலை தான். ஒரு நாள் மாடியில் இருந்த பெல் மீது ஒரு ஆசிட் குடுவை பட்டு தீப்பற்றி கொண்டது.பயந்து போன பெல், வாட்சன் கம் ஹியர், ஐ நீட் யு என்று சொன்னார். எதிர்பாராத விதமாக கீழ் இருந்த அறையில் உள்ள கருவியில் அந்த குரல் கேட்டது. மேலே நடந்த விபத்தினை அறியாத வாட்சன் வேலை செய்யுது....வேலை செய்யுது.... என்று கத்திக் கொண்டே மாடிக்கு ஓடினார். இவ்வாறு தான் தொலைபேசி பிறந்தது.

ஜான் வால்கர் என்பவர் ஒரு பார்மாசிஸ்ட். ஒரு நாள் இவர் தரையில் வேதிப் பொருள் ஒன்றை கொட்டிவிட்டார். ஒரு குச்சியை எடுத்து ஒரு முனையால் அதை அகற்றினார்.அப்பொழுது அந்த குச்சி தீப்பற்றி எரிந்தது.இதை வைத்துத்தான் தீக்குச்சியை கண்டுபிடித்தார்.

Sunday, October 4, 2009

காமராஜரின் கமெண்ட்!

கர்மவீரர் காமராஜர் ஒரு முறை, தஞ்சை மாவட்டத்தில் இருந்த பழைமையான கோயில் ஒன்றைப் பார்வையிடச் சென்றார். சிதிலம் அடைந்திருந்தாலும் புராதனமான அந்தக் கோயிலின் கட்டுமானம் அவரை வியக்க வைத்தது.ஓர் இடத்தில் நின்றவர், "இந்தக் கோயிலைக் கட்டுனது யாரு?'' எனக் கேட்டார். உடன் வந்த அதிகாரிகளுக்கு அதுபற்றி தெரிய வில்லை. பதில் சொல்லத் தெரியாமல் விழித்தனர். உடனே, சிரித்துக் கொண்டே மேலே இருந்த டியூப் லைட்டை சுட்டிக்காட்டிய காமராஜர், "இவ்வளவு காலம் நிலைச்சு நிக்கிற இந்தக் கோயிலைக் கட்டியவர் யாருன்னு தெரியலே. ஆனா, ஒரு மாதம்கூட ஒழுங்கா எரியாத இந்த டியூப் லைட்ல உபயதாரர் யாருன்னு எவ்வளவு பெரிசா எழுதி வெச்சிருக்காங்கன்னு பாருங்களேன்'' என்று கூற... உடன் வந்தவர்கள் வாய்விட்டுச் சிரித்தார்களாம்!

சாணக்கியர்

மௌரியப் பேரரசை நிறுவிய சந்திரகுப்தனின் குரு சாணக்கியர். இவரது அர்த்த சாஸ்திரம் அரசியல் பொக்கிஷம்!இவர் ஒரு நாள் அரசவையில், "மன்னா, ஏழை மக்கள் கடும் குளிரால் வாடுகிறார்கள். அவர்களுக்கு இலவச கம்பளி கொடுத்து உதவ வேண்டும்!'' என்று வேண்டுகோள் விடுத்தார். அரசனும் இதை ஏற்று, கம்பளி வழங்கும் பொறுப்பையும் அவரிடமே ஒப்படைத்தான்.அரசாங்க செலவில் வாங்கப்பட்ட கம்பளிகள், ஏழைகளுக்கு விநியோகிக்க வசதியாக சாணக்கியரது வீட்டில் அடுக்கப்பட்டன. இந்த விஷயம், ஊர் எல்லையிலிருந்த கொள்ளையர்களுக்கும் தெரிய வந்தது. அன்று இரவு, சாணக்கியரது வீட்டுக்குச் சென்று கம்பளிகளைக் கொள்ளையடித்துக் கொண்டு செல்வது என்று அவர்கள் முடிவு செய்தனர். திட்டப்படி அன்று இரவு சாணக்கி யரது வீட்டுக்குள் அவர்கள் நுழைந்தனர். அங்கு, அரதல் பழசான - கிழிந்த போர்வை ஒன்றைப் போர்த்திக் கொண்டு படுத்திருந்தார் சாணக்கியர். அருகில் அவரின் தாயாரும் அப்படியே! கொள்ளையர்களுக்கு ஆச்சரியம். திருட வந்ததையும் மறந்து சாணக்கியரை எழுப்பினர்!கண் விழித்த சாணக்கியர் ஆச்சர்யமுற்றார். எதிரே நின்றிருந்த திருடர்களில் ஒருவன், "ஐயா... நாங்கள், உங்கள் வீட்டில் இருக்கும் கம்பளிகளைத் திருடவே வந்தோம். இங்கு புதிய கம்பளிகள் இவ்வளவு இருந்தும் நீங்களும் உங்கள் தாயாரும் கிழிந்த போர்வையைப் போர்த்திக் கொண்டிருக்கிறீர்களே? புதிய கம்பளிகளில் இரண்டை உங்களது தேவைக்காக எடுத்திருக்கலாமே?'' என்று கேட்டான்.அதற்கு சாணக்கியர், "அவை, ஏழை- எளியோருக்கு வழங்கப்பட இருக்கும் அரசாங்கப் பொருட்கள். அதை எப்படி நான் உபயோகிக்க முடியும்? மன்னன் என் மீது கொண்டுள்ள நம்பிக்கை என்னாவது?'' என்றார்.இதைக் கேட்டதும் சாணக்கியரின் கால்களில் விழுந்த திருடர்கள், தங்களை மன்னிக்க வேண்டினர். 'இனி, வாழ்நாளில் நாங்கள் திருடவே மாட்டோம்' என்று அவர் முன் சத்தியமும் செய்தனர்!சாணக்கியர், இன்றளவும் மக்கள் மனதில் வாழ்கிறார் என்றால், அதற்குக் காரணம்... அவரது அரசியல் தந்திரங்கள் மட்டுமல்ல; தன்னலமற்ற அவரது தூய்மையான வாழ்வும்தான்!

தமிழ் நடிக நடிகையரின் டைவர்ஸ்

  1. ஊர்வசி
  2. பிரசாந்த்
  3. மோகினி
  4. ரோகினி
  5. சொர்ணமால்யா
  6. சுகன்யா-ஸ்ரீதர்
  7. பாபிலோனா
  8. டான்ஸ் மாஸ்டர் கலா- ஆர்.கோவிந்தராஜன் (சிநேகாவின் அண்ணன்)
  9. சுலக்ஷனா - எம்.எஸ்.வி.கோபி
  10. ரேவதி - சுரேஷ்மேனன்
  11. கவுதமி
  12. ராமராஜன் - நளினி
  13. சீதா - பார்த்திபன்
  14. கமல்ஹாசன் (இருமுறை)- வாணிஸ்ரீ, சரிகா
  15. சரண்யா - ராபர்ட்
  16. டாக்டர் ஷர்மிளா - ஏ.எல்.என்.மோகன்
  17. ஸ்ரீவித்யா - ஜார்ஜ்
  18. அம்பிகா- (ஒருமுறை)
  19. ராதிகா - (இருமுறை)
  20. சரத்குமார் - சாயா
  21. விஜயகுமாரி - எஸ்.எஸ்.ராஜேந்திரன்
  22. லட்சுமி - (மூன்று முறை)
  23. ஐஸ்வர்யா (ஒரு முறை)
  24. சுஜாதா
  25. சரிதா-முகேஷ்

Friday, October 2, 2009

கை வண்ணம்










































































































காந்தி ஜெயந்தி


காந்திஜி தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது நடந்த சம்பவம் இது. இஸ்லாமிய இளைஞன் ஒருவன் காந்திஜியை சந்தித்தான். ''பாபுஜி! எனக்கு மட்டும் ஆங்கிலம் தெரிந்திருந்தால், நிறைய சம்பாதிப்பேன். ஆனால் இப்போது, அரை வயிற்றுக்குத்தான் என்னால் சம்பாதிக்க முடிகிறது!'' என்று வருத்தத்துடன் கூறினான். உடனே காந்திஜி, ''கவலைப்படாதே! இனி, தினமும் உனக்கு ஆங்கிலம் கற்றுத் தருகிறேன்'' என்றார். இளைஞன் மகிழ்ந்தான் எனினும் தயக்கத்துடன், ''ஆனால், பாபுஜி... வேலையை விட்டு விட்டு, தினமும் என்னால் இங்கு வர முடியாதே!'' என்றான்.அவனைப் பார்த்துப் புன்னகைத்த காந்திஜி, ''அப்படியானால், தினமும் நானே உனது இடத்துக்கு வந்து கற்றுத் தருகிறேன்!'' என்றார். அதன்படி, தினமும் சுமார் 6 கி.மீ. தொலைவு நடந்து சென்று, அந்த இளைஞனுக்கு ஆங்கிலம் கற்றுத் தந்தாராம் காந்திஜி!


தன் ஆசிரமத்தில் உள்ள சாலையில் நடந்து கொண்டிருந்தார் காந்திஜி. அன்று அவர் மௌன விரதம். வழியில், இரண்டு அங்குல நீளமுள்ள பஞ்சு ஒன்று சாலையில் கிடப்பதைக் கண்டார். தன்னுடன் வருபவர்களிடம் அதைச் சுட்டிக்காட்டிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார் காந்திஜி.உடன் வந்தவர்களில் ஒரு பெண்மணி, 'சுற்றுப்புறத் தூய்மையில் நாட்டம் கொண்ட பாபுஜிக்கு, சாலையில் கிடக்கும் இந்த பஞ்சு உறுத்தலாக உள்ளது போலும்' என்ற எண்ணத்தில் அதை எடுத்துக் கொண்டாள்!மாலையில், மௌன விரதத்தை நிறைவு செய்தார் காந்திஜி. பிறகு, தனது ராட்டையை எடுத்து நூல் நூற்க அமர்ந்தவர், சாலையில் இருந்து எடுத்து வந்த பஞ்சுத் துண்டை தரும்படி அந்தப் பெண்ணிடம் கேட்டார்.அவள் திகைத்தாள். ''சிறிய பஞ்சுதானே என்று அதைக் குப்பைத் தொட்டியில் வீசி விட்டேன் பாபுஜி'' என்றாள் தயக்கத்துடன். காந்திஜியின் முகம் மாறிற்று. ''இதுவே, ஒரு தம்பிடியாக இருந்திருந்தால், மிகச் சொற்பமான காசுதானே என்று தூக்கி எறிந்திருப்பாயா?'' என்று கேட்டார். ''எறிந்திருக்க மாட்டேன்'' என்றாள் அவள்.''பருத்தியைப் பயிரிடுவதிலும் அதைச் சுத்தப்படுத்திப் பஞ்சாக்குவதிலும் எவ்வளவு உழைப்பு செலவாகிறது என்று உனக்குத் தெரியாதா? அதை எறிந்தவன் பாவம் செய்து விட்டான் என்பதில் சந்தேகமே இல்லை. இதுகுறித்து பலமுறை விளக்கியும் இதன் மதிப்பை உணராத நீ, இரட்டைக் குற்றம் செய்தவள் ஆகிறாய். போ... போய் அதைக் கொண்டு வா!'' என்றார் காந்திஜி. ஓடோடிச் சென்ற பெண்மணி, குப்பைத் தொட்டியில் இருந்து அந்த பஞ்சைத் தேடிப் பிடித்து எடுத்து வந்தாள்.அதை வாங்கிக் கொண்ட காந்திஜி, ''துணியாக நெய்த பிறகு, இதன் அழுக்கை எளிதில் அகற்றி விடலாம்'' என்றபடி, தான் ஏற்கெனவே வைத்திருந்த பஞ்சுடன் சேர்த்து நூல் நூற்க ஆரம்பித்தார். அவரது எளிமை மற்றும் சிக்கனத்தைக் கண்டு அங்கிருந்தவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்!

Sunday, September 27, 2009

மனைவி சொல்லே மந்திரம்

மனைவி சொல்லை மந்திரமாகக் கருதி, மனைவியை மதித்து வாழ்ந்து, மகத்தான சாதனைகள் புரிந்தவர்கள் ஏராளம். அவர்களில் மாமேதையான நத்தானியல் ஹாவ்தார்னும் ஒருவர். நிறுவனம் ஒன்றில்... குறைந்த சம்பளத்தில், குமாஸ்தா வேலை பார்த்து வந்தார் இவர். ஒரு நாள், திடுமென வேலை பறிபோனது. அடுத்து என்ன செய்வது என்று தவித்தவருக்கு, ஆறுதலும் அறிவுரையும் சொன்னது அவரின் மனைவிதான்! ''உங்கள் திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனவே, நாவல் எழுதுங்கள். நாளை... உங்களது திறமையை இந்த நாடே அறியும்'' என்று உற்சாகப்படுத்தினார் மனைவி. ஆனால் நத்தானியல், ''அதுவரை, சாப்பாட்டுக்கு என்ன செய்வது?'' என்று பரிதாபமாகக் கேட்டார்.
அதற்கு அவரின் மனைவி, ''அந்தக் கவலை உங்களுக்கு எதற்கு? மாதா மாதம் வீட்டுச் செலவுக் கென்று தாங்கள் தந்த பணத்தில் கொஞ்சம் சேமித்து வைத்திருக்கிறேன். சிக்கனமாக செலவு செய்தால், ஆறு மாதம் வரை நிம்மதியாக சாப்பிடலாம். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் எழுதுங்கள்'' என்றார். இப்படி, தன் மனைவி கொடுத்த உத்வேகத்துடன் நத்தானியல் எழுதிய நாவல்தான் _ 'ஸ்கார்லட் லெட்டர்!'இதையடுத்து உலகமே போற்றும் எழுத்தாளராக, மேதையாகப் பரிணமித்தார் நத்தானியல் ஹாவ்தார்ன்.

தேர்ச்சிக்குத் தேவை பயிற்சி

ஜப்பான் தேசத்து அரசன் ஒருவன், தன் மகனுக்கு முடிசூட்ட நினைத்தான். நாடாளப் போகும் ஒருவனுக்கு விழிப்பு உணர்வு அவசியம் என்று கருதியவன், தன் மகனை ஞானி ஒருவரிடம் அனுப்பி வைத்தான். அவர் தரும் பயிற்சிகள், மகனின் விழிப்பு உணர்வை வளர்க் கும் என்பது அரசனின் எண்ணம். ஞானியின் ஆசிரமத்தில் பல்வேறு பணிகளைச் சிறப்பாகச் செய்து வந்தான் இளவரசன். ஒரு நாள், திடீரென தடியால் அவனைத் தாக்கினார் ஞானி.இளவரசன் அதிர்ந்தான். ''என்ன இது? ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள்?'' என்று கேட்டான்.''உனது விழிப்பு உணர்வை மேம்படுத்துவதற்கான முதல் பயிற்சி இதுதான். திடீர் திடீரென தடியால் உன்னைத் தாக்குவேன். அதிலிருந்து நீ தப்பிக்க வேண்டும்'' என்றார். இளவரசன் திகைத்தான். ஆரம்பத்தில்... ஞானியின் தாக்குதலில் இருந்து அவனால் தப்பிக்க இயலவில்லை; பல முறை அடி வாங்கினான். ஆனால், போகப் போக அவனது அறிவும் உணர்வும் கூர்மையாயின. ஞானியின் காலடி ஓசையைக்கூடத் துல்லியமாகக் கணித்து, அவரிடம் இருந்து தப்பித்தான். ஞானி மகிழ்ந்தார். ''பயிற்சியின் முதல் கட்டம் முடிந்தது. இனி, தூங்கும்போது தாக்கு வேன். எச்சரிக்கையாக இரு'' என்றார். இதிலும் ஆரம்ப கட்டத்தில் பல முறை அடி வாங்கியவன், அடிக்கு பயந்து தூக்கத்தையே இழந் தான். ஒரு கட்டத்தில் தூக்கத்திலும் உள்ளுணர்வு விழித்திருக்கும் நிலையை எட்டினான். ஒரு நாள், தூங்கிக் கொண்டிருக்கும் அவனைத் தாக்குவதற்காக தடியை ஓங்கினார் ஞானி. அவனோ, கண்களைத் திறக்காமலேயே தாக்குதலைத் தடுத்தான். ஞானிக்குத் திருப்தி! மறுநாள், ''இனி மூன்றாம் கட்ட பயிற்சி. தடிக்கு பதிலாக வாளால் தாக்குவேன். கொஞ்சம் அசந்தாலும் உயிர் போய் விடும். ஜாக்கிரதை!'' என்று எச்சரித்தார். இளவரசன் அதிர்ந்தான். 'விழிப்பு உணர்வை மேம்படுத்த நமக்குக் கற்றுத் தருகிறாரே... ஒரு முறை, இவர் தூங்கும் போது நாம் தாக்கினால் என்ன?' என்று எண்ணினான். மறுகணம், ஞானியின் முகம் சிவந்தது. ''என்னையே தாக்கத் திட்டமிடுகிறாயா? என்ன துணிச்சல்?'' என்று அவன் மீது பாய்ந்தார். 'மனதில் நினைப்பதையும் அறியும் அளவுக்கு விழிப்பு உணர்வு மிகுந்தவராக இருக்கிறாரே இந்த ஞானி' என்பதை அறிந்த இளவரசன் வெட்கித் தலை குனிந்தான். ஞானியிடம் மன்னிப்புக் கேட்டான். அவர் அளவுக்கு, விழிப்பு உணர்வில் தானும் மேம்பட உறுதி கொண்டான். பயிற்சிகள் தொடர்ந்தன. விரைவில் தேர்ச்சி பெற்றான். அவனை வாழ்த்தி வழியனுப்பினார் ஞானி!

Thursday, September 24, 2009

தவப்புதல்வனின் தாய்

விருதுநகர் தெப்பக்குளம்; குளத்தைச் சுற்றிலும் கடைவீதிகள். அந்த வீதிகளின் ஒன்றுக்குள்ளே பிரிந்து செல்லும் சுலோசன நாடார் வீதி என்னும் அந்தச் சின்னஞ்சிறு சந்துக்குள்ளேதான், தமிழ் நாட்டின் தவப்புதல்வர் காமராஜ் அவர் களை ஈன்றெடுத்த அன்னை சிவகாமி அம்மாள் வாழ்ந்து வருகிறார்.
மிகச் சாதாரணமான எளிய இல்லம். அங்குள்ள கயிற்றுக் கட்டிலில் அந்த அம் மையார் படுத்திருந்தார். சின்ன இடம். நாலு பக்கத்துச் சுவர்களிலும் பழம் பெரும் சேத பக்தர்களின் படங்கள். அவற் றுக்கிடையே வேல் முருகன் படம். அதற்குப் பக்கத்தில் சத்தியமூர்த்தியின் உருவம்!
கட்டிலில் படுத்திருந்த மூதாட்டியார் எங்களைக் கண்டதும் எழுந்து உட் கார்ந்தார். மூச்சுத் திணறியது. ''வாங்கய்யா'' என்று அன்புடன் அழைத்தபடியே எழுந்து போய் மின்சார விளக்கின் 'ஸ்விச்'சைப் போட்டார்.
''தங்கள் திருமகனைப் பற்றித் தாங்கள் ஏதாவது சொல்லவேண்டும்...''
''நான் என்ன சொல்லப் போகிறேன் ஐயா! எனக்கு வயதாகிவிட்டது. அத்து டன் ரத்தக் கொதிப்பு வேறு. பேசினால் மூச்சுத் திணறுகிறது. ரெண்டு வருசம் உப்பைத் தள்ளிப் பத்தியச் சாப்பாடு சாப்பிட்டேன். இப்போது கொஞ்சம் பரவாயில்லை. சாப்பாட்டில் உப்பு சேர்ந்துக்கொள்கிறேன்.''
''சென்னைக்குப் போய் மகனோடு இருப்பதில்லையா?'' என்று கேட்டபோது அம்மூதாட்டியார் முறுவலித்தார்.

''நல்லாச் சொன்னீங்கய்யா... அவன் மந்திரியாகி ஏழெட்டு வருசம் ஆகுது. இதுவரைக்கும் நான் அங்கே அஞ்சு தடவைதான் போயிருப்பேன். போன உடனே என்னை ஊருக்குத் திருப்பிப் பயணம் பண்ணி அனுப்புவதிலேயே குறியாயிருப்பான்! 'பட்டணம் பாக்கணும்னா சுத்திப் பாரு. திருப்பதிக்குப் போகணும்னா போயிட்டு வா. எல்லாத் தையும் பார்த்துட்டு உடனே விருதுநகர் போய்ச் சேரு'ம்பான்..!''
''மாசச் செலவுக்கு உங்களுக்குப் பணம் அனுப்புகிறாரா?''
''அனுப்பறான். பொடிக்கடை தனக் கோடி நாடார் மூலமாத்தான் பணம் வரும்...''
''எவ்வளவு பணம் அனுப்பறாரு?''
''120 ரூபாய். பத்துமாய்யா? தண்ணி வரியே பதிமூணு ரூவா கட்டறேன். மாசம் அந்த 120 ரூபாதான், அதுக்கு மேலே செலவு செய்யக்கூடாதும்பான். அவங்கவங்க உழைச்சுப் பிழைக்கணும் பான். நானும் பேசாம இருந்துடுவேன். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா? ரேசன் வந்துது பாருங்க... அப்ப இங்கே வந்திருந்தான். 'என்னப்பா, இப்படிக் கேப்பையும் கம்பும் போடறாங்களே, இதை எப்படிச் சாப்பிடறது? நெல்லு வாங்கித் தரப்படாதா'ன்னு கேட்டேன். 'நெல்லு பேச்சுப் பேசாதே. ஊருக்கெல்லாம் ஒண்ணு, நமக்கு ஒண்ணானு கேட்டான். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா..?''
''இப்படியரு தவப்புதல்வனைப் பெற்றெடுத்த தாங்கள் நிஜமாகவே பாக்கியசாலிதான்'' என்றதும், அன்னை யின் கண்கள் கலங்கிவிட்டன.
''ஏன் கண் கலங்குகிறீர்கள் அம்மா?''
''கலங்காம என்ன செய்ய? துறவியாகி விட்ட பட்டினத்தடிகளை அவன் தாய் துறந்துவிட்டதைப்போல், நானும் என் மகனை இந்த நாட்டுக்காகத் துறந்து விட்டு நிற்கிறேனே!''

Friday, September 18, 2009

புதிதாக ஏ.சி. வாங்குபவராக இருந்தால்

புதிதாக ஏ.சி. வாங்குபவராக இருந்தால் உங்கள் வீட்டில் ஏ.சி. பொருத்தப்படவிருக்கும் அறையின் அளவை மனதில் வைத்துக் கொண்டு தேர்வு செய்யுங்கள். 1.5 டன், 2 டன், 3 டன் என்று நம் பயன்பாட்டுக்கு ஏற்ற ஏ.சி. மெஷின்கள் உள்ளன. 150 சதுர அடி கொண்ட அறையாக இருந்தால் 1.5 டன் அளவுள்ள ஏ.சி. போதுமானது. பெரிய ஹால் என்றால் 3 டன் தேவைப்படும்.உதிரிபாகங்களை குறைந்த விலையில் வாங்காதீர்கள். நல்ல விலையில் தரமானவற்றை வாங்குங்கள். ஏ.சி. வாங்கியதும், அதற்கேற்ற தரமான 'ஃப்யூஸ் ஒயர்', 'டிரிப்பர்' போன்றவற்றை பொருத்தவேண்டும். மலிவான விலைகளில் வாங்கினால், உங்கள் உயிருக்கு ஆபத்தாக முடியும். உதாரணத்துக்கு ஸ்பிலிட் ஏ.சி. 1.5 டன் எனில், 20 ஆம்ப்ஸ் ஒயரினால் ஆன ஃப்யூஸை பொருத்துங்கள். இதேபோல் டிரிப்பரும் 20 ஆம்ப்ஸ் கொண்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மின் சப்ளையில் கோளாறு எற்பட்டாலும் டிரிப்பர் தானாக ஆஃப் ஆகி ஏ.சி-யைக் காப்பாற்றி விடும்.ஏ.சி. வாங்கும்போது இலவசமாகக் கொடுக்கப்படும் ஸ்டெபிலைசர்கள் தரம் குறைந்தவையாக இருக்கக் கூடும். தரமான நிறுவனங்களின் ஸ்டெபிலைசர்களை வாங்குங்கள். எல்லா ஏ.சி. நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு சொல்லும் அட்வைஸ்... ஏ.சி. வாங்கி பொருத்தியதும், அது எப்போதும் 23 டிகிரிக்கு கீழ் வைக்கக்கூடாது. அதற்கும் குறைவாகக் கொண்டு போகும்போது ஏ.சி. அதிக பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும். அப்போது கம்ப்ரஸர், காயில், ஏ.சி-க்கு செல்லும் ஒயர் என எல்லா பகுதியும் சூடாகிவிடும். இதனாலும் தீப்பிடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. எக்காரணம் கொண்டும் 16 டிகிரியில் ஏ.சி-யை கொண்டு போகாதீர்கள்.வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏ.சி-க்களை முன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சர்வீஸ் செய்யவேண்டும். ஸ்பிலிட் ஏ.சி. எனில் 15 நாட்களுக்கு ஒரு முறை ஃபில்டரை கழற்றி தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து மாட்டுங்கள். இதனால், எந்தவித இடையூறும் இல்லாமல் குளுமையாக காற்று வரும்.ஏ.சி. ஓடிக் கொண்டிருக்கும்போதே ரூம் ஸ்ப்ரே அடிப்பது மிகவும் தவறு. பெர்ஃப்யூம்கள் ஏ.சி.யின் உள்ளே இருக்கும் காயிலை பழுதாக்கி, சீக்கிரத்தில் மெஷினை ரிப்பேராக்கிவிடும். நல்ல குளுமை வேண்டும் என்பதற்காக ஏ.சி. ஓடிக்காண்டிருக்கும்போதே ஃபேனை போடாதீர்கள். ஃபேன் காற்று, ஏ.சி காற்றை திசை திருப்பி விடும். ஏ.சி காற்று வருவதற்கு சரியான ஃப்ளோ கிடைக்காது.27 டிகிரியிலும், நல்ல குளுமையை தரக்கூடிய ஏ.சி.தான் தரமானது. 27 டிகிரியில் வைக்கும்போது மூச்சு திணறுவதுபோல் உணர்ந்தால், அந்த ஏ.சி. சரியாக சர்வீஸ் செய்யப்படாததாக இருக்கலாம். ஸ்பிலிட் ஏ.சி. எனில் அறையை முழுவதையும் மூடிவிடக்கூடாது. கதவுக்கு அடியில் இருக்கும் வழியிலாவது காற்று போகும் அளவுக்கு இடைவெளி இருக்க வேண்டும். சிறிய துவாரமாவது போட்டு வையுங்கள். இதனால் ஒரு நாளைக்கு ஒரு யூனிட் கரன்ட் மட்டுமே கூடுதலாகச் செலவாகும்.உங்கள் ஏ.சி. கூலாக இல்லையெனில் உடனடியாக சர்வீஸ் ஆட்களை அழைத்து, மெஷினில் கேஸ் போதுமான அளவோடு இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் நிரப்பச் சொல்லுங்கள்.ஏ.சி. மெஷின்களைப் பொறுத்தவரை எவாபிரேட்டர் காயில், கண்டன்ஸர் காயில், ஏ.சி. மெஷினுடைய ஃபேன் இந்த மூன்றும் மிகவும் முக்கியம். இந்த பாகங்கள் சுத்தமாக வேலை செய்கின்றனவா என்பதை கண்காணித்துக் கொண்டே இருங்கள். இவை மூன்றும் சரியாக வேலை செய்தாலே மின்சாரம் வீணாகாமல் இருக்கும்.ஏ.சி-யை வாங்கும்போது அதுபற்றிய டெக்னிக்கலான விஷயங்களை அறிந்து கொள்ளவேண்டும். இதனால், ஏ.சி. சர்வீசுக்கு வருபவர்கள் மேலோட்டமாக சரி செய்வதையும் நீங்கள் கண்டுபிடித்துவிடலாம். சர்வீஸ் ஆட்கள் வந்தால் கூடவே இருந்து கவனிப்பது உங்கள் ஏ.சி. மெஷினுக்குப் பாதுகாப்பானது.

ம்.. வேப்ப மரத்துக் காத்து... கயித்துக் கட்டிலு இதுக்கெல்லாம் ஈடாகுமா இந்த ஏ.சி.' என்று கிராமங்களில் இன்றைக்கும் காற்றாடத்தான் தூங்குகிறார்கள். வீடு கட்டும்போதே காற்று எளிதாக வந்து போகும் வகையில் அமைத்துவிட்டால்... ஏ.சி-யாவது... கீசியாவது!

Thursday, September 17, 2009

தென்கொரியாவில் தேர்வு

தென்கொரியாவில் கல்லூரிக்கான நுழைவுத்தேர்வினை அரசாங்கம் நடத்துகிறது. அது தான் அங்குள்ள மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயக்கும் தேர்வு. இந்த தேர்வு நடக்கும் நாட்களில் அரசாங்கம் எதை எல்லாம் செய்கிறது என்ற பட்டியலை பாருங்கள்.
  1. பரிட்சை நாள் அன்று காலை அலுவலகம் செல்கின்றவர்கள், வணிகர்கள் மற்றும் பிற தொழில் செய்கின்றவர்கள் ஒரு மணி நேரம் தாமதமாக தங்கள் பணிக்கு செல்லும்படியாக அரசு கேட்டுக் கொள்கிறது. அதற்கான அனுமதியை எல்லா நிறுவனங்களும் அளித்திருக்கின்றன. முக்கிய காரணம் பரிட்சைக்கு செல்லும் மாணவர்கள் பேருந்து ரயில் சாலை போன்ற இடங்களில் நெருக்கடி இல்லாமல் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காகவே.
  2. பரிட்சை நாள் அன்று கூடுதலான ரயில் மற்றும் பேருந்துகள் இயக்கபடுகின்றன.
  3. பரிட்சை நடைபெறும் வளாகத்தில் யாரும் செண்ட் அடித்துக் கொண்டு வருவது முற்றிலும் தவிர்க்கபடுகிறது. காரணம் அது கவன சிதைவை உண்டுபண்ணக்கூடும்.
  4. பரிட்சைக்கு தயார் ஆகும் மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்தவதற்கு வசதியாக மாலை முன்னதாகவே அவர்கள் வேலையிலிருந்து திரும்ப அனுமதி தரப்படுகிறது
  5. பரிட்சைக்கு மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் நாட்களில் பெற்றோர்கள் விளையாட்டு போட்டிகள் மற்றும் கேளிக்கை விழாக்களில் கலந்து கொண்டு இரவில் தாமதமாக வீடு திரும்ப கூடாது என்பதற்காக இரவு பத்து மணிக்கு எல்லா விழாக்களும் நிறைவு செய்யப்படுகின்றன.
  6. பரிட்சை நாளில் ஆங்கில தேர்வு எழுதும் மாணவர்கள் உச்சரிப்பு கேட்டு பதில் எழுத நேரிடும் என்பதால் அதற்கு இடையூறு செய்ய கூடாது என்று பரிட்சை நடக்கும் நேரத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. விமானம் பறக்கும் ஒசை மாணவர்களின் கவனத்தை சிதற அடிக்கும் என்பதால் விமான சேவை நேரம் அன்று மட்டும் மாற்றப்படுகிறது. தரையிறங்க உள்ள விமானங்கள் கூட தாமதமாகவே அனுமதிக்கபடுகின்றன
  7. ரேடியோ மற்றும் தொலைக்காட்சி பரிட்சைக்கு செல்லும் மாணவர்களை பொதுமக்கள் வாழ்த்தும் நிகழ்ச்சியை ஒளிபரப்புகின்றன
  8. பரிட்சை நடைபெறும் நேரத்தில் இந்த ஆண்டு பரிட்சை எப்படியிருக்கிறது. இது சென்ற ஆண்டுகளில் இருந்து எந்த அளவு மாறுபட்டிருக்கிறது. எப்படி மாணவர்கள் இதை எதிர் கொள்கிறார்கள் என்பதை முக்கிய தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றது
  9. அன்று மின்சார ரயில்கள் கூட அவசியமில்லாமல் ஒலிப்பானை உபயோகபடுத்த கூடாது
  10. தேர்வு நடைபெறும் வளாகங்களின் அருகாமையில் எவரும் எவ்விதமான ஒலிப்பானையும் ஒரு போதும் பயன்படுத்த கூடாது
  11. ஸ்டாக் மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய வணிக மையங்கள் கூட அன்று ஒரு மணி நேரம் தாமதமாகவே இயங்க துவங்குகின்றன
  12. நுழைவு தேர்வு எழுதும் மாணவர்களை தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கு அன்று விடுமுறை அளிக்கபடுகிறது. அதனால் மற்ற மாணவர்கள் வந்து போகும் இடையூறு தவிர்க்கபடுகிறது.
  13. தேர்வு நடைபெற்ற நாளின் மாலையில் அன்று கேட்கபட்பட்ட கேள்விகளும் அதற்கான சரியான பதிலையும் நாளிதழ்கள் பிரசுரம் செய்கின்றன. இதனால் தான் எவ்வாறு தேர்வு எழுதினோம் என்பதை மாணவன் உடனே தெரிந்து கொள்ள முடிகிறது.
  14. தேர்விற்கு ஒருவாரம் முன்னதாகவே மாணவர்களின் நினைவாற்றலை வளர்க்க உதவும் குறிப்புகள் மற்றும் பரிட்சை எழுதும் மாணவர்களுக்கான சீரான உணவு முறை பற்றிய தகவல்களை எல்லா ஊடகங்களும் வாறி வழங்குகின்றன. வீடு தேடி வந்து உளவியல் நல ஆலோசகர்கள் நம்பிக்கை பயிற்களும் தருகிறார்கள்
  15. இது போலவே பௌத்த ஆலயங்களும் கிறிஸ்துவ தேவலாயங்களும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் நினைவாற்றலை பயிற்சி தருகின்றன.
  16. கொரிய மின்சார துறை இதற்காக தனது 4000 பணியாளர்களை சிறப்பு பணி என கருதி மின்சார தடையே இல்லாமல் பரிட்சை நடைபெற உதவி செய்கிறது
  17. பரிட்சைக்கு மாணவர்கள் தயார் ஆகும் நாட்களில் வீட்டில் பெற்றோர்கள் ஹெட்போன் போட்டுக் கொண்டு மட்டுமே தொலைக்காட்சி பார்க்கும்படியாக தொலைக்காட்சிகளே வற்புறுத்துகின்றன.
  18. தாமதமாகவோ அல்லது நுழைவு தேர்விற்கான அடையாள அட்டையை மறந்துவிட்டோ வரும் மாணவர்களுக்கு உதவி செய்வதற்கு என்றே தனியான போலீஸ்படை அமைக்கபட்டு உதவி செய்கிறார்கள்.
  19. கேள்விதாளை 400 ஆசிரியர்கள் கொண்ட குழு நான்கு நிலைகளில் உருவாக்கி முடிவு செய்கிறது. பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள் ஒரு போதும் இடம் பெறுவதில்லை.
  20. தோல்வியுற்ற மாணவர்களின் பெற்றோர்கள் தன் பிள்ளையின் தோல்விக்கு ஒரு போதும் ஆசிரியரை குறை சொல்வதில்லை. மாறாக கூடுதல் கவனம் தந்து எப்ப படிக்க வைப்பது என்பதில் தான் அக்கறை காட்டுகிறார்கள்.

கொரியா மாணவர்களின் எதிர்காலத்தை முடிவு செய்யும் நுழைவு தேர்விற்கு அரசும் மக்களும் தரும் முக்கியத்துவத்தில் பத்தில் ஒரு பகுதி கூட நமது சூழலில் இல்லை.

Monday, September 14, 2009

எய்ட்ஸ் நோயாளிக்கு வாய்த்த அதிர்ஷ்டம்...

'அதிசயம்... ஆனால், உண்மை!' என்று சொல்லும்படியாக எங்காவது, எப்போதாவது, ஏதாவது சில சம்பவங்கள் நடப்பதுண்டு. அந்தப் பட்டியலில் இந்த விஷயத்தையும் சேர்க்கவேண்டும். சம்பந்தப்பட்டவர்களின் எதிர்கால நலன் கருதி, பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டிருக்கின்றன.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்துக்கும் நகரத்துக்கும் இடைப்பட்ட ஊர் அது. அந்த ஊரைச் சேர்ந்த சரவணனுக்கும், கீதாவுக்கும் திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிறது. ஒரு வருடத்துக்கு முன்பு கீதா அழகான பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். குழந்தைக்கு ஆராதனா என்று பெயர் சூட்டி சந்தோஷப்பட்டிருக்கிறார்கள். 'இதுல என்ன அதிசயம் இருக்கு..?' என்று கேட்கிறீர்களா?
சரவணன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்! அவரைக் கரம் பிடித்தபோது
கீதாவுக்கு எய்ட்ஸ் கிடையாது. குழந்தை ஆராதனா எய்ட்ஸ் நோய் பாதிப்பில்லாமல் பிறந்திருக்கிறாள். கீதாவுக்கும் எய்ட்ஸ் பரவவில்லை. அதுதான் அதிசயம்!
சரவணனின் வீட்டுக்குப் போனோம். ''பாப்பா தூங்கிட்டு இருக்கா... வாங்க வெளியில உட்கார்ந்து பேசுவோம்!'' என்றவர், வீட்டு வாசலில் இருந்த வேப்ப மரத்தடியில் கயிற்றுக் கட்டிலை எடுத்துப் போட்டார். ''நாமக்கல்ல இருக்கிற ஒரு காலேஜ்ல நான் டிகிரி படிச்சேன். ஃபைனல் இயர் படிக்கும்போது, ஃபர்ஸ்ட் இயர்ல வந்து சேர்ந்தா கீதா. அவளை முதல்ல பார்த்ததுமே மனசுக்குள்ள ஒரு பூ பூத்துச்சு. 'இதயம்' படத்துல வர்ற முரளி மாதிரி என்னோட காதலை கீதாகிட்ட போய்ச் சொல்லத் தயங்கியே... ஒரு வருஷம் முடிஞ்சு போச்சு.
இந்த நிலையில... ஃபைனல் இயர்ல எங்க செட் பசங்க நாலு பேரு குற்றாலம் டூர் போயிருந்தோம். நாங்க தங்கியிருந்த இடத்துல ஒரு வெளிநாட்டுப் பொண்ணு இருக்கறதா சொல்லி புரோக்கர் ஒருத்தன் வந்தான். வெளிநாட்டுப் பொண்ணுன்னு சொன்னதால, ஆசையில ஓகே சொல்லிட்டோம். நாங்க தங்கியிருந்த காட்டேஜுக்கு பொண்ணை கூட்டிட்டு வந்தான் புரோக்கர். நாலு பேரும் விடியற வரைக்கும் அந்த பொண்ணோட சந்தோஷமா இருந்தோம். என் நண்பர்கள் எல்லாரும் காண்டம் யூஸ் பண்ணினானுங்க. என்னோட திமிரு... வெளி நாட்டுப் பொண்ணுகிட்ட என்னடா பிரச்னை இருக்கப் போவுதுன்னு, காண்டம் யூஸ் பண்ணல. என் வாழ்க்கையில நான் செஞ்ச முதல் தப்பும் அதுதான்... கடைசி தப்பும் அதுதான்.
ஊருக்கு வந்ததும் திரும்பவும் கீதாவைத் தொடர ஆரம்பிச்சேன். ரெண்டு வருஷ போராட்டத்துக்குப் பிறகு தான் அவ என் காதலை ஏத்துக்கிட்டா. அதுக்குப் பிறகு நான் அவளுக்கு உண்மையா இருக்க ஆரம்பிச்சேன். இந்த சூழ்நிலையில கீதாவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாங்க. அப்போதான் கீதா, தன்னோட வீட்டுல எங்க காதலைச் சொன்னா...'' என்று சரவணன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சூடு பறக்கத் தேநீர் கொண்டுவந்தார் கீதா.
தேநீரை நம்மிடம் கொடுத்துவிட்டு சரவணன் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார் கீதா. ''நான் காதலிக்கற விஷயத்தைச் சொன்னதும் அப்பா என்னை அடிக்க வந்துட்டாரு. அப்புறம் என்னோட பிடிவாதத்தைப் பார்த்த பிறகு கல்யாணத்துக்கு சம்மதிச்சாரு. நாமக்கல் ஏரியாவுல கல்யாணத்துக்கு முன்னாடி பையனுக்கும் பொண்ணுக்கும் ஹெச்.ஐ.வி. டெஸ்ட் பண்ணிக்கறது ஒரு சம்பிரதாயமாகவே இருக்கு. நாங்களும் டெஸ்ட் பண்ணினோம். அப்போதான் இவருக்கு எய்ட்ஸ் இருக்கறதை கண்டுபிடிச்சாங்க. அந்த நேரத்துல இவரு அழுத அழுகை எனக்கு மட்டும்தான் தெரியும். எய்ட்ஸ் இருக்குன்னு நான் இவரை விட்டுட்டு போயிருந்தா... கண்டிப்பா அன்னிக்கே இவரு செத்திருப்பாரு. முதல்ல அதிர்ந்துபோன நான், மெள்ள ஜீரணிச்சுக்கிட்டேன். 'கல்யாணம் பண்ணிகிட்டு உன்னோட வாழ்க்கையை கெடுக்க விரும்பல கீதா'ன்னு சொல்லி ஒதுங்கப் பார்த்தாரு. ஆனா, நான் பிடிவாதமா இவரை கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சேன். இவருக்கு எய்ட்ஸ் இருக்கற விஷயம் இன்னும் எங்க குடும்பத்துல யாருக்கும் தெரியாது.
கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி எய்ட்ஸ் நோய்க்கு ட்ரீட்மென்ட் கொடுக்கற டாக்டர் ஆனந்தைப் போய் பார்த்தோம். 'உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சுருக்கு?'னு அவரு என்னை திட்டினாரு. என் காதலோட உறுதியைப் பார்த்துட்டு, 'சரி... கல்யாணம் பண்ணிக்கங்க. ஆனா, குழந்தையெல்லாம் பெத்துக்கக் கூடாது. எப்போ செக்ஸ் வச்சுக்கிட்டாலும் கண்டிப்பா காண்டம் யூஸ் பண்ணணும்'னு சொன்னாரு. கல்யாணம் முடிஞ்சு ரெண்டரை வருஷம் அப்படித்தான் இருந்தோம். குழந்தை இல்லைன்னு ஊருல அவரைப் பத்தித் தப்பா பேசுறதைக் கேட்டுட்டு, என்னால தாங்கிக்க முடியல. எனக்கு அந்த வியாதி வந்தாலும் பரவாயில்ல... குழந்தை பெத்தே ஆகணும் முடிவு பண்ணினேன். ஆனா, அதுக்கு எங்கவீட்டுக்காரர் சம்மதிக்கவே இல்ல. ஒரு நாள் நைட் அவரை கட்டாயப்படுத்தி காண்டம் இல்லாம செக்ஸ் வச்சுக்கிட்டேன். நான் கர்ப்பமானேன். அதுக்குப்பிறகு டாக்டர் ஆனந்த்தை போய் பார்த்தோம். அவரு மறுபடியும் என்னை திட்டித் தீர்த்துட்டு, 'எப்படியோ உனக்கு அந்த கிருமிகள் பரவியிருக்கும். பொறக்கப்போற குழந்தைக்காவது அது இல்லாம பார்த்துக்குவோம்'னு சொல்லி ட்ரீட்மென்ட் கொடுத்தாரு. ஹெச்.ஐ.வி. பாதிப்பு இல்லாம குழந்தை பிறந்துடுச்சு. அதுக்குப் பிறகு எனக்கு டெஸ்ட் எடுத்துப் பார்த்தாங்க. எனக்கும் ஹெச்.ஐ.வி. பாதிப்பு இல்ல. சில பேருக்கு ஆறு மாசத்துக்கு பிறகுதான் தெரியும்னு டாக்டர் சொன்னாரு. இப்போ ரெண்டு வருஷம் ஆகப்போகுது. அதனால மறுபடியும் செக் பண்ணி பார்த்துக்கலாம்னு டாக்டர் கிட்ட போனோம். எந்த சாமி புண்ணியமோ... எனக்கு எய்ட்ஸ் இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாரு!'' என்று கண் கலங்கினார் கீதா.
''இது எப்படி சாத்தியமாகும்..?'' என்ற கேள்வியோடு டாக்டர் ஆனந்த்தை சந்தித்தோம். ''நிஜமாகவே இது மெடிக்கல் மிராக்கிள் தான். அந்தப் பொண்ணுகிட்ட நான் பேசிய வரைக்கும் பீரியட் டைம் முடிஞ்சு சரியா பதினான்காவது நாள் ரெண்டு பேரும் செக்ஸ் வச்சுருந்திருக்காங்க. அதனால ஒரே முயற்சியில கர்ப்பமாகிட்டா. அந்த நேரத்துல அந்தப் பொண்ணோட உடலுறுப்புகள்ல புண் எதுவும் இல்லாம இருந்திருக்கணும். அதோட உடம்புல எதிர்ப்பு சக்தியும் அதிகமா இருந்திருக்கணும். அதனால தான் ஹெச்.ஐ.வி. அவங்கள பாதிக்கல.அதுக்குப் பிறகு அவங்க தொடர்ந்து காண்டம் யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. இனி காண்டம் இல்லாம இது மாதிரி ரிஸ்க் எடுக்க வேண்டாம்னு அவங்களை எச்சரிக்கை பண்ணி ருக்கேன்.
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மத்தவங்களும் இதையே ஒரு முன் உதாரணமா எடுத்துகிட்டு காண்டம் இல்லாம உடலுறவு வச்சுக்க முயற்சிக்கக்கூடாது. அப்படி வச்சுக்கிட்டா, கண்டிப்பா எய்ட்ஸ் வரும்!'' என்று எச்சரித்தார்.
நன்றி: ஜூனியர் விகடன்

சுவிஸ் பேங்க்ல அக்கவுண்ட் ஆரம்பிக்கலாமா?

சுவிட்சர்லாந்து வங்கிகள் என்றாலே வாடிக்கையாளர்களின் பணம் மற்றும் வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்கள் குறித்த பாதுகாப்புக்குப் பிரபலமானவை என்பது சர்வதேசப் பாமரர்களுக்கும் தெரிந்த உண்மை. சுவிஸ் வங்கிகளின் ரகசியத்தன்மை 1934-ம் ஆண்டு சட்டம் மூலம் கொண்டுவரப்பட்டது. கிட்டத்தட்ட 300 ஆண்டுகளாக சுவிஸ் வங்கிகள் பரபரப்பாக இயங்கி வந்தாலும், 'இரும்புத் திரை வங்கிகளாக' இவை மாறத் தொடங்கியது அதன் பிறகுதான். பின்னணியில், இரண்டு காரணங்கள் இருந்தன.
ஹிட்லர் ஜெர்மனியை ஆண்ட 1931-ம் ஆண்டு, 'ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் சொத்துக்கள் வைத்திருக்கக் கூடாது' என்று அறிவித்திருந்தார். அதை மீறி சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர். 1932-ல் பிரான்ஸின் மேல்தட்டைச் சேர்ந்தவர்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இதற்கு எதிராக பிரெஞ்சு இடதுசாரிகள் கலகம் செய்யத் துவங்கினர். அதிலிருந்தே சுவிஸ் வங்கிகளின் நடைமுறைகள் மேலும் இறுக்கமாகின. சுவிட்சர்லாந்தைப் பொறுத்தவரை, சொத்துக் குவிப்பைக் கணக்கில் காட்டாமல் கறுப்புப் பணம் குவிப்பது அந்த நாட்டின் சட்டப்படி குற்றமே கிடையாது. எனவேதான் உலகெங்கும் அரசாங்கங்களின் கண்களில் மண்ணைத் தூவி, வருமான வரித் துறையுடன் கண்ணாமூச்சி ஆடி, கறுப்புப் பணம் சேர்க்கும் பணக்காரர்களும், மகா மெகா ஊழல் அரசியல்வாதிகளும் சுவிஸ் வங்கிகளில் பணம் குவிக்கின்றனர்.
'எங்கள் நாட்டில் இந்த அமைச்சர் ஊழல் செய்து சேர்த்த பணம் இங்கு வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டுள்ளதா?' என்றோ, 'வருமானத்தில் கணக்கு காட்டப்படாத பணம் உங்கள் வங்கியில் சேர்க்கப்பட்டுள்ளதா?' என்று கேட்டாலோ, சுவிஸ் வங்கிகள் சொல்லும் ஒரே பதில், 'ஸாரி'. ஆயுதக் கடத்தல், போதைப் பொருள் கடத்தல் போன்ற பிரத்யேகக் குற்றங்களுக்கு மட்டும் விதிவிலக்காக விசாரணையின் பொருட்டு சுவிஸ் வங்கிகள் வாடிக்கையாளர் குறித்த ரகசியங்களைத் தரும்.
ஆனாலும்கூட, அந்தக் குற்றங்கள் முழுவதுமாக நிரூபிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும். மேலும், சுவிஸ் மாஜிஸ்டிரேட் ஒருவர் தீர விசாரித்து, 'சுவிட்சர்லாந்து சட்டங்களின்படி இது தண்டிக்கப்படக்கூடிய குற்றம்' என்று சான்றிதழ் அளித்தால் மட்டும்தான் இது சாத்தியம். இல்லாமல்போனால், சுவிட்சர்லாந்து அரசாங்கமே கேட்டாலும் சுவிஸ் வங்கிகள் வாடிக்கையாளர் குறித்த விவரங்களைத் தர வேண்டிய அவசியமில்லை. இது தவிர விவாகரத்து, சொத்துப் பிரிவினை போன்ற எந்த ஒரு காரணத்துக்காகவும் வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்கள் தரப்பட மாட்டாது. வருமானத்தை மிஞ்சி சொத்து சேர்ப்பது, பணம் சேர்ப்பது அந்த நாட்டுச் சட்டப்படி குற்றமில்லை. இது குறித்த விவரங்களை யாராவது கேட்டு, வங்கிகள் கொடுத்தால்தான் சுவிட்சர்லாந்து குற்றவியல் சட்டத்தின்படி கடுமையான குற்றமாகும்.
அப்படியானால், இந்த வங்கிகளில் யார் வேண்டுமானாலும் அக்கவுன்ட் ஓப்பன் செய்துவிட முடியுமா?
சுவிஸ் வங்கிகள் வங்கிக் கணக்கைத் தொடங்குவதற்குக் கேட்கும் ஆவணங்கள்.
1. பாஸ்போர்ட்
2. இருப்பிடச் சான்றிதழ், கேஸ் கனெக்ஷனுக்கான பில்கள், குடிநீர் வரி கட்டிய பில்கள் போன்றவை.
3. பொருளாதாரப் பின்னணிக்கான ஆவணங்கள். உங்கள் கம்பெனியின் டாகுமென்ட்ஸ், பிசினஸ் ஒப்பந்தங்கள் ஆகியவற்றைக் காட்டலாம்.
4. நீங்கள் சுவிஸ் வங்கிகளில் கட்டும் பணம் உங்களுக்கு எந்த வருமானத்தின் மூலம் வந்தது என்பதற்கான ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஏனெனில் ஆயுதக் கடத்தலும் போதைப் பொருள் கடத்தலும் சுவிஸ் அரசியலமைப்பின்படி தடைசெய்யப்பட்டு இருப்பதால், அத்தகைய சட்டவிரோதச் செயல்களின் மூலம் வந்த வருமானம் இல்லை என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். மற்றபடி அது கறுப்புப் பணமா, ஊழல் பணமா என்பதைப் பற்றியெல்லாம் கவலையில்லை.
என்ன, ரொம்ப சிம்பிளாகத்தானே இருக்கிறது, நாமும் சுவிஸ் வங்கியில் ஒரு அக்கவுன்ட் ஓப்பன் செய்யலாம் என்று கிளம்புகிறீர்களா? ஒரு நிமிஷம்... பெரும்பாலான சுவிஸ் வங்கிகளில் 'மினிமம் பேலன்ஸ்' கண்டிப்பாகத் தேவை. அந்த மினிமம் பேலன்ஸ்... சுமார் ஆறு கோடியே அறுபத்தைந்து லட்ச ரூபாய்.
இதையெல்லாம் விட முக்கியம், சுவிஸ் வங்கியில் ஏற்கெனவே கணக்கு வைத்திருக்கும் ஒருவரின் அறிமுகம் தேவை. அவரை நீங்கள் கண்டுபிடிப்பதற்குள் தாவு தீர்ந்து டவுசர் கிழிவது நிச்சயம்.
சுவிஸ் வங்கிக் கணக்குகள் குறித்து சர்வதேச சமூகத்தின் கவனம் திரும்பி இருக்கிறது.
காரணம், அமெரிக்கா தொடங்கி மூன்றாம் உலக நாடுகள் வரை தன் ஆக்டோபஸ் கரங்களை விரித்து இறுக்கி நெரிக்கும் பொருளாதார நெருக்கடி. 'உள்ளூர்ச் சந்தையும் அரசாங்கமும் பங்குச் சந்தையும் இன்ன பிறவும் பொருளாதார நெருக்கடிகளில் தள்ளாடும்போது தங்கள் தேசத்தைச் சேர்ந்த மில்லியன், பில்லியன், டிரில்லியன் கணக்கான பணம் சுவிஸ் வங்கிகளில் முடங்கிக் கிடப்பது என்ன நியாயம்?' என்று உலக நாடுகள் சிந்திக்கத் தொடங்கியிருக்கின்றன.
இந்தியப் பண மதிப்புப்படி 72 லட்சம் கோடி ரூபாய் சுவிஸ் வங்கிகளில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த இந்தியாவின் இடைக்கால பட்ஜெட் தொகை ரூ. 9 லட்சத்து 53 ஆயிரத்து 231 கோடி. ஆக மொத்தம், கிட்டத்தட்ட ஏழு இந்திய பட்ஜெட்டுகளுக்கான இந்தியர்களின் கறுப்புப் பணம் சுவிஸ் வங்கிக் கணக்குகளில் உள்ளன.

Thursday, August 13, 2009

இளைஞர்கள்

முன்பெல்லாம் ஒரு வழக்கம் உண்டு வழக்கம் என்பதை விட அதை பழமொழி என்றே கூறலாம் உன் நண்பனை பற்றி சொல் நான் உன்னைப் பற்றி கூறுகிறேன் என்று. இப்பொழுதெல்லாம் இதை பின்பற்றினால் நம்மைப் போன்ற அறிவிலி யாரும் இல்லை என்றே கூறலாம்.இப்பொழுது உலகம் வளர்ந்து வரும் நிலையில் உறவுகளையே மறக்கத் துடிக்கும் சமுதாயத்தில் நண்பர்களை அதுவும் பால்ய கால நண்பர்களை நினைத்துப் பார்க்கக் கூட மனிதன் நேரம் இல்லாமல் பணத்தை தேடி அலைந்துகொண்டிருக்கிறான்.சிறு வயதில் கொண்ட நட்பு என்பது எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் எதார்த்தமாக இருந்தது. நாளாக நாளாக நாம் வளருவதைப் போல நண்பர்களிடையே எதிர்பார்ப்புகளும் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது.நான் இவனுக்கு இதை செய்திருக்கிறேன் என்றால் இவனும் இதை எனக்கு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எப்பொழுது வருகிறது என்று கேட்டால் நான் விடையற்று நிற்கின்றேன்.நான் மட்டும் அல்ல என்னை போன்ற பலருக்கும் இதே போன்ற கேள்விகள் ஆயிரம் இருக்கும்.ஒவ்வொரு நட்புக்கு பின்னாலும் ஒரு சுயலாபம் இருக்கின்றது. சுயலாபம் இல்லாத நட்பே இல்லை. இது ஒரு கசப்பான உண்மையே!!! பழகும் பொழுது எதிர்பார்ப்பில்லாமல் பழகும் ஒரு சிலர் பழகிய பிறகு மிகுந்த எதிர்பார்ப்புகளை சுமந்து கொண்டே நம்மிடம் பழகுகிறார்கள். கேட்டால் உன்னிடம் கேட்காமல் வேறு யாரிடம் சென்று நான் கேட்பது அது உனக்கு அசிங்கம் இல்லையா என்றதொரு விளக்கம் வேறு. அதில் தவறில்லை நாம் நன்றாக இருந்தால் நண்பர்களுக்கு மட்டும் இல்லை உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் நம்மால் ஆன உதவிகளை செய்யலாம். நாமே இங்கு கஷ்டப்படும் போது நம்மால் பிறர்க்கு எப்படி உதவ முடியும்???? இதற்க்கு நல்ல உதாரணங்கள் உண்டு. நகரத்தில் இருக்கும் அனைவரும் இதை அனுபவப்பட்டிருப்பார்கள். முன்பெல்லாம் சென்னை போன்ற பேரு நகரங்களில் திருமணமாகாத வாலிபர்களுக்கு வீடு கிடைப்பது என்பது குதிரைக் கொம்பான விஷயம்.அப்படியும் கிடைத்து விட்டால் ஆயிரம் நிபந்தனைகள். மூன்று பேருக்கு மேல் தங்கக் கூடாது, காலையில் மட்டும் தான் தண்ணீர் வரும்; அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அதற்க்குள் எல்லா வேலைகளையும் நாம் முடித்திருந்திருக்க வேண்டும்.அப்பொழுது நண்பர்களில் ஒருவன் மட்டுமே வேலைக்குச் செல்வான். மற்றவர்கள் வேலை தேடிக் கொண்டிருப்பார்கள். அப்படி இருக்கும் சூழ்நிலையில் படித்து முடித்து வரும் நண்பர்கள்,உறவினர்கள் எல்லாம் நேராக நாம் இருக்கும் இடத்திற்கு வந்து விடுவார்கள்.(எப்படித்தான் நாம் இருக்கும் விலாசம் கிடைக்குமோ???) நிலைமையை எடுத்துச் சொன்னாலும் அவர்களை நாம் வேண்டுமென்றே தவிர்க்கிறோம் என்று நினைத்துக்கொண்டே சென்று விடுவார்கள். பிற்பாடு அவர்களுக்கும் நமக்கும் ஒரு தொடர்பே இல்லாமல் போய் விடும்.ஆனால் இப்பொழுது உள்ள சூழ்நிலையே வேறு. திருமணம் ஆகாதவர்களை தவிர வேறு யாருக்கும் வீடு கிடைப்பதில்லை.இப்பொழுதெல்லாம் படிக்கும் பொழுது நட்புடம் இருப்பவர்கள் படித்து முடித்த பின்னரும் ஒன்றாக வீடு எடுத்து தங்கி வேலை தேடுகிறார்கள்.அதை நினைக்கும் பொழுது மனதுக்கு ஆறுதலாகவே இருக்கிறது. ஆனால் அனைவருக்கும் வேலை கிடைத்து விட்டு ஒருவனுக்கு மட்டும் வேலை கிடைக்காவிட்டால் ஒரு வித பொறாமை வந்து விடுகிறது அதுவே அவர்களின் நட்புக்கு ஒரு விரிசல் வர காரணமாகி விடுகிறது. நட்பு என்பது சகிப்புத்தன்மை,பொறாமை அவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டது. அது அப்பொழுது எல்லாம் தெரியாது.ஏனென்றால் அதெல்லாம் பக்குவப்படாத வயது.வாழ்க்கைக்கும் தேர்வுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான். படித்து முடித்து விட்டு தேர்வு எழுதிய பின்பு தான் நமக்கு முடிவுகள் வரும். ஆனால் வாழ்கையில் முடிவுகள் வந்த பின்பு தான் நாம் படிக்கவே ஆரம்பிப்போம். "உன் நண்பனை பற்றி சொல் உன்னை பற்றி சொல்கிறேன்" என்று சொன்னால்,யாரும் நண்பனாக இருக்கமுடியாது ,நல்லவர்கள் மட்டும் நண்பர்களாகி விட்டால் ,தவறான வழியில் செல்பவர்களை யார் வழிநடத்துவது.கெட்டவர்கள் இருந்தால் அந்த நட்பு கெட்ட நட்பும் .நல்லவர்கள் இருந்தால் அது நல்ல நட்பும் என்றும் சொல்வது வேடிக்கையான விஷயம்.ஒரு நண்பர்கள் கூட்டத்தில் ஒரு கெட்டவன் இருந்தால் அவனை ஒழுங்குபடுத்துவது ஒரு உண்மையான நண்பனின் கடமையாகும்.அதை விட்டு விட்டு அவன் எக்கேடு கெட்டு போனால் எனக்கென்ன என்று இல்லாமலும், இல்லை அவன் செய்யும் செயல்களுக்கு உடன் போகாமல் இருப்பதும் ஒரு நல்ல நண்பனின் தலையாய கடமையாகும்.இப்பொழுதெல்லாம் சமுதாயத்தில் ஒரு பரவலான கருத்து நண்பர்கள் ஒன்று சேர்ந்தாலே குடியும் கும்மாளமும் தான் என்று. அந்த கருத்தை தகர்த்தெறிந்து கெட்ட சகவாசங்களை விட்டெறிந்து இந்த சமுதாயத்தின் முன்னேற்றதிற்க்குப் பாடு படுவோம். எல்லோரும் சொல்கிறார்கள் நாளைய உலகம் இளைஞர்கள் கையில் என்று அப்படியென்றால் இன்றைய உலகம் யார் கையில்??? அதுவும் நம் கையில் என்று கூறி நாட்டின் முன்னேற்றத்திற்கும் ஒற்றுமைக்கும் பாடு படுவோம்....

Monday, August 10, 2009

நான் பார்த்த மனிதர்கள்

சில சமயம் நான் கடவுளின் மீது கோபம் கொள்வது உண்டு. ஏனென்றால் என் சிறு வயதில் சிறு வயது என்றால் என் அப்பாவின் கைப் பிடித்து நடந்த வயதில் நான் பார்த்த மனிதர்கள் எப்படி இருந்தார்களோ அப்படியே தான் இப்பொழுது வரை இருக்கிறார்கள். நான் படித்த வரலாறுகளாகட்டும், கதைகளாகட்டும் அதில் வருபவர்கள் அனைவரும் முன்னேறிவிடுகிறார்கள். ஆனால் நான் பார்த்த மனிதர்களில் பெரும்பாலோனோர் எப்படி இருந்தார்களோ அப்படியே இன்னும் இருக்கிறார்கள்.இவ்வளவுக்கும் அவர்கள் யாரும் உழைக்காமல் இல்லை..... செருப்பு தைப்பவர் இன்னும் செருப்பு தைத்துக்கொண்டு தான் இருக்கிறார், மூட்டை சுமப்பவர் இன்னும் மூட்டையை மட்டுமே சுமந்து கொண்டிருக்கிறார்.நான் ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும் போது அவர்களைப் பார்ப்பதுண்டு.என்னால் முடிந்த உதவிகளையும் செய்துவிட்டு வருவதுண்டு. சில சமயம் நினைத்துப்பார்க்கும் போது எனக்கு விந்தையாகவே உள்ளது. அப்பொழுது எனக்குள் எழுந்த எண்ணங்கள் ஆயிரம் ஆயிரம்....அதில் அவர்கள் செய்யும் தொழிலின் மீது தவறா????? இல்லை இந்த சமுதாயத்தின் மீது தவறா????? என்று. அவர்களுக்கும் ஆசைகள் இருக்காதா நாமும் இந்த சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்று??? எனக்குத் தெரிந்து நம் நாட்டில் மட்டும் தான் இந்த மாதிரியான நிலைமை. அவர்களின் வாழ்வுக்கும் அரசாங்கம் ஒன்றும் செய்யாமல் இல்லை; அவர்களின் குழந்தைகளின் கல்வியாகட்டும், வாழ்க்கையாகட்டும் அனைத்து உதவிகளையும் அரசாங்கம் செய்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அவை முழுமையாக சென்றடைகிறதா என்பது தான் கேள்விக் குறி.சமுதாயத்திலும் இன்னும் அவர்களுக்கு முழுமையான அங்கிகாரம் கிடைக்க வில்லை என்பது தான் என்னுடைய கருத்து.நம்மில் இன்னும் எத்தனை பேர் செய்யும் தொழிலை வைத்து அவர்களை எடை போடுகிறோம்... ஆனால் அவர்கள் நேர்மையாக உழைக்கின்றனரா என்று ஒரு போதும் பார்ப்பதில்லை... உதாரணத்திற்கு பேருந்தில் நமக்கு அருகாமையில் உட்காருபவர்கள் நல்ல ஆடை அணிந்து டிப் டாப்பாக இருந்தால் தான் நாம் இடமே கொடுக்கிறோம்.பின்பு எப்படி அவர்களுக்கு மனதில் இடம் கொடுத்து அவர்கள் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்ப்படுத்த நமக்கு மனம் வரும். நானே சில சமயம் ஆள் பார்த்து இடம் கொடுத்ததுண்டு... இப்பொழுது அதை நினைத்துப்பார்க்கும் பொழுது என்னை நினைத்து நானே வெட்க்கப்படுவதுண்டு. அப்பொழுது வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியாத வயது.ஏற்றத்தாழ்வுகள் என்பது எப்பொழுது வேண்டுமானாலும் யார் வாழ்கையிலும் வரும் என்பதை புரிந்துகொள்ள முடியாத பருவம்.நான் ஒன்றும் தெரியாத மனிதர்களுக்கு உதவுங்கள்,கருணைபடுங்கள் என்று கூறவில்லை... நமக்கு தெரிந்த நாம் சிறு வயது முதல் பார்த்து வந்த மனிதர்களுக்கு நம்மால் ஆனா உதவிகளை செய்தாலே போதுமானது... அதை விட்டு விட்டு கண்ணுக்குத் தெரியாத மனிதர்களுக்கு நான் இதை செய்தேன் அதை செய்தேன் என்று சொல்லிக்கொள்வதில் அர்த்தம் ஒன்றும் இல்லை. அரசாங்கமே அனைத்தையும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது மூடத்தனம்...அரசாங்கம் செய்யும் நலத்திட்டங்களை முழுமையாக அவர்களுக்கு சேருமாறு செய்து மற்றும் நம்மை போன்றவர்கள் முயற்சி எடுத்து செய்தாலே கோடான கோடி மக்களின் வாழ்வுக்கு வெளிச்சம் ஏற்றிவிடலாம்........

Friday, August 7, 2009

தபூசங்கர் கவிதைகள்

அற்புதமான காதலை மட்டுமல்ல அதை உன்னிடம் சொல்ல முடியாத அதி அற்புதமான மௌனத்தையும் நீதான் எனக்குத்தந்தாய்.

யாராவதுஏதாவதுஅதிர்ச்சியானசெய்தி சொன்னால்அச்சச்சோ என்றுநீ நெஞ்சில் கைவைத்துக் கொள்வாய்.நான் அதிர்ச்சி அடைந்துவிடுவேன்.



என்னை எங்கு பார்த்தாலும்ஏன் உடனே நின்று விடுகிறாய்?என்றா கேட்கிறாய்.நீ கூடத்தான்கண்ணாடியை எங்கு பார்த்தாலும்ஒரு நொடி நின்று விடுகிறாய்.உன்னைப் பார்க்க உனக்கேஅவ்வளவு ஆசை இருந்தால்எனக்கு எவ்வளவு இருக்கும்...



நீ இல்லாத நேரத்திலும்உன் இருக்கையில் அமர்ந்திருக்கிறதுஉன் அழகு. .....



ஊரிலேயேநான்தான் நன்றாகபம்பரம் விடுபவன்ஆனால் நீயோஎன்னையே பம்பரமாக்கிவிடுகிறாய் ......



நீ யாருக்கோ செய்தமௌன அஞ்சலியைப்பார்த்ததும்...எனக்கும்செத்துவிடத் தோன்றியது..




உன்னைக் காதலித்துக்கொண்டிருக்கும்போதுநான் இறந்துபோவேனாஎன்பது தெரியாது.ஆனால்நான் இறக்கும்போதும்உன்னைக் காதலித்துக்கொண்டிருப்பேன்என்பது மட்டும் தெரியும் .




எதை கேட்டாலும் வெட்கத்தயே பதிலாக தருகிறாய்
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்




நீ வருவதற்காவே காத்திருக்கிறேன்
என்னை கடந்து போவதற்காவே வருகிறாய்



அழகான பொருள்கள் எல்லாம்
உன்னை நினைவுபடுத்துகின்றன
உன்னை நினைவுபடுத்துபவை
எல்லாம் அழகாகவே இருக்கின்றன




நீ நடந்து போன சுவடின்றி
அமைதியாக கிடக்கிறது
சாலை
அதிவேக ரயிலொன்று கடந்துபோன
தண்டவாளம் போல் அதிர்கிறது
என் இதயம்




அரைமணிநேரமாய்பேசிகொண்டிருக்கிறாய்..வாழ்நாள் விமோட்சனம்அடைந்துவிட்டதாய் கூச்சலிடுகிறதுசெல்போன் பொத்தான்கள்..




அழகான கன்னமெனசொல்லி கிள்ளுகிறாய்பக்கத்துவீட்டு குழந்தையை!தன்னுடையதை விடஉன்னுடையது அழகெனபொறாமையில் அழுகிறது குழந்தை....







Saturday, August 1, 2009

கிடா விருந்து

உங்களில் பெரும்பாலோனோர்க்கு கிடா விருந்து அனுபவம் இருக்கும் என நினைக்கின்றேன்.எனக்குக் கிடைத்த அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்கு எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.பெரும்பாலும் கிராமங்களில் இந்த கிடா விருந்து என்பது மிகவும் பிரசித்தம். சிறு வயது முதல் இன்று வரை கிடா விருந்திற்க்காக என்னை என் சொந்தங்கள் அழைத்துக்கொண்டே இருக்கின்றனர். பணி சுமை காரணமாக இன்று என்னால் அவ்வளவாக அதில் பங்கேற்க முடியாத சூழ்நிலை. கோவில் திருவிழா, குழந்தைகளுக்கு மொட்டை போட,பிராத்தனைகளை நிறைவேட்ற, காதணி விழா என்றால் உடனே கிடா விருந்து தான் என் ஊரில். அந்த கிடா விருந்துக்குச் செல்வதென்பதே ஒரு மகிழ்ச்சியான நிகழ்வுதான். இதற்க்கான ஒரு மாதம் முதல் ஒரு வருடம் வரை கிடாவை வளர்ப்பார்கள். பெரும்பாலும் அவரவர் குலதெய்வ கோவில்களில் தான் இந்த கிடா விருந்து சம்பவம் அரங்கேறும். ஊருக்கு அருகினில் கோவில் என்றால் மாட்டு வண்டி பயணம் தான். ஊருக்கு சற்று தொலைவினில் என்றால் ஒரு லாரியை வாடகைக்குப் பிடித்து எல்லோரும் செல்வோம்.அந்த லாரி வைக்கோல் ஏற்றிச் செல்லும் லாரியாகத் தான் இருக்கும்.அவ்வளவு பழையதாக இருக்கும். எல்லோரும் சேர்ந்து தள்ளினால் தான் அது ஸ்டார்ட் ஆகும். பொறுமையாக அதில் ஏறிச் சென்று கோவிலை அடைந்து விடுவோம். பெண்கள் எல்லோரும் குடங்களை எடுத்துக் கொண்டு அருகினில் இருக்கும் குளங்களைத் தேடி சென்று விடுவர்.ஒவ்வொரு கோவில்களுக்கு அருகில் குளங்கள் இருக்கும்.சிறு குழந்தைகள் எல்லாம் விளையாட சென்று விடும். பெரியவர்கள் எல்லாம் நிழல் இருக்கும் பகுதியைப் பார்த்து சென்று விடுவர். சமையல்காரர்கள் சமையலுக்கான வேலையை ஆரம்பித்து விடுவர். மசாலா அரைப்பது,அடுப்புகளை தயார் பண்ணுவது,விறகுகளை வண்டியில் இருந்து இறக்குவது போன்ற வேலையே அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். சில சமயங்களில் உறவினர்களே நல்ல சமையல்காரர்களாக இருப்பர். அவ்வாறு இருந்தால் அவர்கள் படுத்தும் பாட்டுக்கு அளவே இருக்காது. அதை அனுபவித்து பார்த்தால் தான் தெரியும்.முன்தினமே சமையலுக்கான பட்டியலை தயார் செய்து கொடுத்துவிடுவார்கள்.அதில் ஒன்று குறைந்தால் கூட போச்சு.கத்தி கூச்சல் போட்டு விடுவார்கள். உடனே கிடா விருந்து கொடுப்பவருக்கு கோபம் வந்து அவர் வீட்டு ஆட்களை கூச்சல் போடுவார். அந்த வீட்டுப் பெண்கள் எல்லாம் அங்கே தான் வைத்தேன்...இங்கே தான் வைத்தேன் என்று தேட ஆரம்பித்து விடுவார்கள். இதே சமையலுக்கு ஆள் வைத்தால் அவர்களே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்கள். வீட்டில் உள்ளவர்களுக்கு வேலை மிச்சம். பெரும்பாலும் கிடா விருந்தில் சமையலுக்கு ஆள் வைப்பது என்பது குறைவு.வீட்டு ஆட்கள் தான் எல்லாவற்றையும் ப்ர்ரதுக்கொள்ள வேண்டும்.அடுப்பை எரிய வைக்கும் முன் போதும் போதும் என்றாகிவிடும். ஏனென்றால் பச்சை விறகுகளாக இருக்கும். அவை சாமானியமாக எரியாது. அங்கு இருக்கும் இலை தலைகளை எல்லாம் போட்டு முதலில் எரிய வைத்து பின்பு விறகுகளை வைத்து விடுவர்.கிடாவை வெட்டும் முன்பாகவே பொங்கல் வைத்து விடுவார்கள். பின்பு கோவிலில் உள்ள பூசாரியிடம் சொல்லி கிடாவை வெட்ட ஏற்ப்பாடு செய்வார்கள். அந்த கிடாவை சம்மதிக்கச் செய்வது என்பது நகைச்சுவையான சம்பவம்.கிடாவிற்கு மாலை போட்டு மஞ்சள் தண்ணீரை ஊற்றி சம்மதிக்க வைப்பார்கள். கிடாவை வெட்டுவதர்க்கென்றே ஒரு கோஷ்டி இருக்கும்.அப்பொழுது அந்த கிடாவைப் பார்த்தலே பரிதாபமாக இருக்கும்.சில மணித்துளிகள் நாம் அசைவமே சாப்பிடக்கூடாது என்றெல்லாம் எண்ணிய நாட்கள் அவை.அவர்கள் அரைமணி நேரத்தில் முழுவதுமாக வெட்டி உரித்து விடுவார்கள். அதில் ஈரல்,குடல்,கால்கள் என்றெல்லாம் தனித்தனியே பிரித்து விடுவார்கள்.அதன் ரத்தத்தை ஒரு பாத்திரத்தில் பிடித்து விடுவார்கள்.கறி பகுதியை சமையலுக்கு அனுப்பிவிடுவார்கள். கிடா விருந்து நாட்களில் தான் கிடாவின் அனைத்துப் பாகங்களையும் ஒரு சேர சாப்பிட முடியும். குடல் கொலம்பு, சூப்பு, மூளை, தலை கறி மற்றும் பல.... அந்த கொலம்பு கொதிக்கும் போது வரும் வாசனைக்கு ஈடு இணையே கிடையாது.அந்த வாசனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்துக்கும் சென்றடயும் அதை வைத்தே அந்த பகுதி மக்கள் ஆஹா!!!!! யாரோ கிட விருந்து போட போகிறார்கள் என்று கண்டுபிடித்து அங்கே வந்துவிடுவார்கள் சட்டிகளை தூக்கிக் கொண்டு....மிச்சம் இருந்தால் அவர்களுக்கு அன்று சரியான விருந்து இல்லையென்றால் அன்று அவர்களுக்கு ஏமாற்றம் தான். அந்த ஏமாற்றத்தைப் போக்க சிலர் அவர்களுக்கு பணம் கொடுக்கும் பழக்கமும் உண்டு.... பணம் கொடுக்கும் பழக்கம் என்பது மிகவும் அரிது. கிடா விருந்து என்றாலே சராயத்திற்க்குப் பஞ்சம் இருக்காது. தண்ணி அடிப்பவர்களுக்கென்று தனியாக சமைக்கும் பழக்கமே உண்டு. அவர்கள் படுத்தும் பாட்டிற்கு அளவே கிடையாது.ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கு ஒருமுறை வந்து வந்து கறியை எடுத்துக்கொண்டு போய் விடுவார்கள். தண்ணியைப் போட்டு விட்டு அவர்கள் படுத்தும் பாட்டிற்கு இந்த கட்டுரையே போதாது. சமைத்து முடித்த பிறகு அதை கடவுளுக்குப் படைத்து விட்டு சாப்பிட உட்க்கார்ந்து விடுவார்கள். சிறியவர் முதல் பெரியவர் வரை.....மண் தரையில் தான் சாப்பாடு. யாரும் அதற்க்காக கூச்சப் படுவது என்பதே கிடையாது... அவர்கள் எவ்வளவு பெரிய ஆட்களாக இருந்தாலும்.சைவம் சாப்பிடும் ஆட்கள் வந்திருந்ததால் அவர்களுக்கு தனியாக சமைத்திருப்பர்கள். இதில் ஒரு சாஸ்திரம் வேறு உண்டு கிடா விருந்து வைத்து மிச்சம் இருந்தால் அதை வீட்டற்கு எடுத்துச் செல்ல கூடாது. அதனால் ஒவ்வொருவரும் குறைந்தது கால் கிலோ கறியாவது சாப்பிட்டு விடுவார்கள்.ஒவ்வொரு கிடாவும் குறைந்தது பதினைந்து முதல் இருபது கிலோ இருக்கும்.அழைக்கப்பட்டிருக்கும் விருந்தாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் பூசாரிக்கும் அந்த கோவிலை சுற்றி உள்ள மக்களுக்கும் அன்று திருவிழா தான்.மீதமுள்ளதை அவர்களிடமே கொடுத்து விட்டு பாத்திரங்களை நன்றாக கழுவி வந்த லாரியில் ஏற்றி விடுவார்கள். விருந்து முடிய எப்படியும் மாலை நேரம் ஆகிவிடும்.அதற்குள் குழந்தைகள் எல்லாம் விளையாடி அசந்து தூங்கிப்போயிருக்கும்.அவர்களை எல்லாம் எழுப்பி தயார் செய்வதே பெரிய வேலை வீட்டில் உள்ளவர்களுக்கு. இந்த மாதிரியான விஷேசங்களுக்கு குழந்தைகளுக்கு நிறைய அணிகலன்களை அனுவிக்கும் பழக்கம் வேறு உண்டு.சில சமயம் கவன குறைவு காரணமாக குழந்தைகள் அதனை தொலைத்து விடும் சம்பவங்களும் நிறைய உண்டு. இப்பொழுது உள்ள தலைமுறையினர்க்கு சொந்த பந்தங்களின் பாசங்களைப் பற்றி அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த மாதிரியான தருணங்கள் தான் ஒவ்வொருவரையும் இணைக்கும் விழாவாக நான் கருதுகின்றேன்.

Wednesday, July 29, 2009

சைக்கிள்

எனக்கு மிகவும் ஆச்சர்யம் நான் பார்த்த வலைப்பதிவுகளில் யாருமே சைக்கிள் பயணத்தையோ அல்லது சைக்கிளில் இருக்கும் டைனமோ பற்றியோ பதிவு செய்யாதது எனக்கு மிகுந்த மன வருத்தத்தைத் தந்தது. இருந்தாலும் மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததற்கு. கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காது அந்த தருணம். சிறு வயது முதலே சைக்கிள் என்றால் எனக்கு அலாதி பிரியம். சைக்கிளில் வந்து என் உறவினர்கள் யார் வந்து கூப்பிட்டாலும் நான் பயணத்திற்கு தயாரான காலம் அது. சைக்கிளில் உள்ள மணியின் ஓசைக்கு பைப் ஹோர்ன் கூட இணைஇல்லை என்றே நான் நினைக்கிறேன்.அப்பொழுது எல்லாம் சைக்கிளின் குறுக்கு கம்பிக்கு நடுவே ஒரு சின்ன இருக்கை ஒன்று இருக்கும் அது சிறு வயது குழந்தைகளுக்காக.உட்கார பழகிஇருக்கும் குழந்தைகளுக்காக கூடையினால் செய்யப்பட்ட சீட்டை சைக்கிளின் முன் பகுதியில் மாட்டிவைப்பர்கள் அந்த குழந்தைகளும் எந்த பயமும் இன்றி உட்கார்ந்துகொள்ளும். அந்த காலங்களில் சைக்கிள்களுக்கு லைசென்ஸ் உண்டு. அந்த லைசென்ஸ் ஒரு மெல்லிய தகடினால் செய்யப்பட்டு அதில் வருடம் பொறிக்கப்பட்டிருக்கும். அப்பொழுதெல்லாம் வசதியின்மை காரணமாக வாடகைக்கு சைக்கிள் எடுத்துதான் பழக வேண்டும். அதுவும் காத்திருந்து... அவரவர் உயரத்திற்கு தகுந்தபடி சைக்கிள் அளவும் இருக்கும். கால் வண்டி,அரை வண்டி, முக்கால் வண்டி மற்றும் முழு வண்டி என்றெல்லாம் வாடகை சைக்கிள் கடையில் அன்று. அரை மணி நேரத்திற்கு ஐம்பது பைசா ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரூபாய் என்று கணக்கு வேற. ஒரு ஐந்து நிமிடம் அதிகமானால் கூட கடைக்காரன் திட்டி விடுவான். பழகும் போது பஞ்சர் ஆகிவிட்டால் பஞ்சருக்கும் சேர்த்து காசு வாங்கிவிடுவான். சைக்கிள் ஓட்ட தெரியாத சிறு வயதில் டைனமோ வைத்த சைக்கிள் என்றால் அவ்வளவுதான். அன்று முழுவதும் சைக்கிளின் பெடலை கையால் சுற்றிக் கொண்டே இருப்பேன்.சைக்கிள் பூட்டு பக்கத்தில் ஒரு டைனமோ பொருத்தப்பட்டிருக்கும் அதன் மேல் பகுதியில் ஒரு சக்கரம் இருக்கும் அந்த சக்கரம் சைக்கிளின் டயரோடு உரசுவதால் டைனமோவில் இருக்கும் சக்கரமும் சேர்ந்து சுழல அதில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு சைக்கிளின் முன் பகுதியில் உள்ள விளக்கு எரியும்.எவ்வளவு வேகமாக பெடலை சுற்றுகிறோமோ அவ்வளவு பிரகாசமாக விளக்கு எரியும். இவ்வாறு செய்ததால் பலமுறை என் அப்பாவிடம் நான் திட்டு வாங்கியிருக்கிறேன். பாவம் அவர் கஷ்டம் அவருக்கு. ஏனென்றால் டைனமோவை அதிக முறை உபயோகித்தால் டயர் சீக்கிரமே தேய்ந்து விடும். இதற்காக ஒவ்வொரு முறையும் டயர் மாற்றும் போது ரிக்க்ஷா டயர் போடுப்பா என்று என் அப்பா கடைக்காரனிடம் கூறியது இப்போது நினைவுக்கு வருகிறது. டைனமோவிலிருந்து தான் மின்சாரம் உற்பத்தியாகும் என்று நான் சற்று பெரியவனான பிறகு தான் உணர்ந்தேன்.நான் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் பொழுது என் அப்பா எனக்கு ஒரு சைக்கிள் வாங்கி கொடுத்தார்.அப்பொழுது எனக்கு கார் வாங்கிகொடுத்தது போல் ஒரு சந்தோஷம். அன்று இரவு என் நண்பர்கள் அனைவரிடமும் சென்று என் சைக்கிளை காண்பித்து விட்டு வந்தேன். அதில் தான் எத்தனை ஆனந்தம்.அப்பொழுது என் நண்பர்களில் ஒரு சிலர் மட்டுமே சைக்கிள் வைத்திருந்தனர்.பள்ளிக்குச் செல்லும் போது ஒவ்வொரு சைக்கிளில் இரண்டு பேர் செல்வோம். சில சமயம் மூன்று பேர் செல்லும் பழக்கமும் உண்டு. விடுமுறை நாட்கள் என்றால் நண்பர்கள் அனைவரும் தத்தமது சைக்கிளை எடுத்துக் கொண்டு ஊர் சுற்ற கிளம்பிவிடுவோம். வீட்டை விட்டு நெடுந்தூர பயணம் என்றெல்லாம் அனுபவம் உண்டு எனக்கு. போகும் வழியில் சாலையின் இரு புறமும் இருக்கும் புளிய மரத்தின் நிழலில் இளைப்பாறி புளியங்காயை ருசி பார்த்த நாட்கள் ஏராளம்.கோடையில் வீட்டிற்க்கு தண்ணிர் எடுத்து வருவது என்பது சாதாரண காரியம் கிடையாது. இரு ரப்பர் குடங்களை அதன் வாய் பகுதியில் நல்ல நைலான் கயிற்றினால் கட்டி சைக்கிளின் பின் பகுதியில் இருக்கும் கேரியரில் தொங்க வைத்து விடுவார்கள். என்னோடு மூத்த வயதுக்காரர்கள் எல்லாம் மூன்று குடங்களை கேரியரில் வைத்து தண்ணீர் எடுப்பார்கள். மூன்றாவது குடம் என்பது ஆச்சர்யமான விஷயம் தான். ஏனென்றால் அந்த மூன்றாவது குடத்தை கேரியரின் நடுவில் வைத்து சைக்கிள் டியூப்பினால் கட்டி சைக்கிளின் இருக்கையோடு மாட்டிவிடுவார்கள். பல சமயம் நான் தண்ணீர் எடுத்து வரும் பொழுது குடத்தோடு கீழே விழுந்தது உண்டு. சில சமயம் குடமும் உடைந்தது உண்டு. அன்று முழுவதும் திட்டுகளும், பாசங்களும் மாறி மாறி கிடைத்திருக்கிறது. திட்டுகள் குடம் உடைந்ததற்க்காக.... பாசங்கள் நான் கீழே விழுந்ததற்க்காக.....
என் நண்பன் ஒருவன் சைக்கிளில் செல்லும் பொழுதே தன்னுடைய இரண்டு கைகளையும் விட்டு பயணம் செல்லுவான். அவனிடம் நான் எப்படியடா இப்படி இரண்டு கைகளையும் விட்டு செல்கிறாய் என்றால் அதை சொல்லித்தர அவன் பண்ணிய பந்தாவுக்கு அளவே கிடையாது. பிற்பாடு நானே கற்றுக் கொண்டு ஒரு நாள் சாலையில் இரண்டு கைகளையும் விட்டு பயணம் செய்யும் பொழுது என் அப்பாவின் நண்பர் ஒருவர் அந்தக் காட்சியை காண அன்று எனக்கு என் அப்பாவிடம் நல்ல அடி கிடைத்தது. இப்பொழுது சாலையில் நான் பார்க்கும் சிறார்கள் சுலபமாக இவ்வாறு ஓட்டிச் செல்கின்றனர்.(பெண் சிறார்கள் கூட) இப்பொழுது சைக்கிள் ஓட்டுவது என்பதே எனக்கு அபூர்வமாகிவிட்டது.நான் என் ஊருக்குச் சென்றால் தருணம் வாய்க்கும் பொழுது எல்லாம் சைக்கிள் ஓட்டி விடுவேன். இப்பொழுது வரும் சைக்கிள்கள் எல்லாம் நவீனமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சில சமயம் நாமும் இப்பொழுதே பிறந்திருக்கலாமே என்று தோன்றியது உண்டு.ஆனால் நான் பெற்ற இன்பம் இன்றைய தலைமுறையினர்க்கு கிடைக்க வாய்ப்பே இல்லை என்று மட்டும் ஆணித்தனமாக என்னால் சொல்ல முடியும்.

Wednesday, July 22, 2009

பிளவர் மில்

உங்களில் பெரும்பாலோனோருக்கு பிளவர் மில் மற்றும் ரைஸ்மில்லை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. என் நண்பரோடு சேர்ந்து பால்ய நினைவுகளை நினைத்துப் பார்க்கும் பொழுது தோன்றியது இந்த பிளவர் மில். இப்பொழுது இருக்கும் தூரிதஉணவு கலாச்சாரத்தில் இந்த பிலௌர் மில் எல்லாம் மறக்கடிக்கப் பட்டுவிட்டது. இந்த பிலௌர் மில் 1975 தொடங்கி ௨000 வரை பிரசித்தம். மிளகாய், மல்லி,கோதுமை, சீயக்காய் இவை எல்லாம் இந்த பிலௌர் மில்லில் தான் மக்கள் அரைக்க வருவார்கள். என் பள்ளி நாட்களில் எனக்கும் அந்த அனுபவம் மிகவும் உண்டு . பிலௌர் மில் போவது என்பது அலாதியான இன்பம் தான் அப்பொழுது. ஏனென்றால் நண்பர்கள் சூழ மிளகாய்,மல்லி, கோதுமைகளை வாளியில் போட்டுக் கொண்டு ஜாலி யாக போய் வருவோம். அதுவும் நான் இருந்தது காலணி வீடு. என் வயது சிறார்கள் அதிகம் அப்பொழுது. ஒருவன் பிளவர் மில் போனால் அனைவரது வீட்டிலும் அன்று மாவு அரைக்க சென்று விடுவோம் வீட்டில் சண்டை போட்டாவது.... மிளகாய் அரைக்க போகும் போது அது நன்றாக காய்ந்திருக்க வேண்டும் இல்லையென்றால் கடைக்காரன் திருப்பி அனுப்பிவிடுவான்.மிளகாய் அறைக்கபோகும் போது மட்டும் பயந்து கொண்டே செல்வோம். மல்லி அறைக்கபோகும் போது மட்டும் அம்மா ஒன்றுக்கு இரண்டு முறை சொல்லி அனுப்புவாள் மல்லியை அரைத்த பிறகு நன்றாக சூடு தணித்துவிட்டு வா என்று.... அதற்காக பிலௌர்மில்லில் இரும்பினால் செய்யப்பட்ட தட்டில் அந்த பொடியை காயபோட்டு விடுவேன். அதுவும் மிளகாய் பொடி காயப்போட்டதில் மல்லிபொடியை காயவைக்க கூடாது.பொடியை காய வைக்காமல் போனால் கருத்துவிடும் அதனால் கொழம்பும் கருப்பாக போய் விடும் என்று பயம்புருத்திய நாட்கள். எத்தனை உண்மை இதெல்லாம்!!!! அரைக்கும் ஊழியனிடம் சண்டையிடுவேன் ஒன்றுக்கு மூன்று அல்லது நான்கு முறையாவது அரை என்று. இவை எல்லாம் அம்மா எனக்கு இட்ட கட்டளைகளின் பேரில். அதுவும் அவன் சலிப்பிற்க்கு அளவே கிடையாது. அந்த காலத்தில் பொடி அரைப்பதற்கு அவ்வளவு மெனக்கெட வேண்டும். அரைத்துக் கொண்டிருக்கும்போதே கரண்ட் போய் விட்டால் அவ்வளோதான் பொடி அனைத்தும் கருப்பாகி விடும். அதனால் ஆண்டவனை வேண்டிக் கொண்ட நேரம் அது. பிலௌர் மில் பக்கம் போனாலே அந்த பொடிகளின் நெடி மூக்கை தொலைக்கும். தீபாவளி சமயம் என்றால் பிலௌர் மில் பக்கம் போகவே முடியாத நிலை... முறுக்கு மாவு, அதிரச மாவு அரைக்க என்று மக்கள் கூட்டம் அலை மோதும். காலை நேரத்தில் சென்றால் வீடு திரும்ப மதியம் ஆகி விடும் சூழ்நிலைக்கும் நான் தள்ளப் பட்ட காலம் அது. இப்பொழுது நாகரிகத்தின் மாற்றத்தால் அடைக்கப்பட்ட மிளகாய் தூள்,மல்லி தூள்,மஞ்சள் தூள் இன்னும் சில... இன்னும் என் அம்மா பிலௌர் மில்லில் அரைக்கப்பட்ட மிளகாய் தூள்,மல்லி தூள்,மஞ்சள் தூள்களை உபயோகிக்றாள். அதனால் தான் என்னவோ அவளின் பாசத்தைப் போல் அவளுடைய சமையலும் மாறாமல் இருக்கிறது. இன்னும் அவள் ஒரு படி மேல போய் அமெரிக்காவில் இருக்கும் என் சகோதரிக்கும் அதை பொட்டலம் கட்டி அனுப்பி வைக்கிறாள். இன்றைய தலைமுறையினர்க்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த கட்டுரை எழுதுவதற்கு காரணமாக இருந்த என் நண்பர் மனோஜிற்குத் தான் நான் முதலில் நன்றி சொல்லியாக வேண்டும்.......

Tuesday, July 21, 2009

விவசாயம்

எத்தனையோ கோடி மென் பொறியாளர்களில் நானும் ஒருவன். இந்த ஆண்டு மென்பொருள் ஏற்றுமதியில் சிறு சரிவு ஏற்ப்பட்ட காரணத்தினால் சக ஊழியர்கள் அனைவரும் தத்தமது எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்கள். அவர்களில் பெரும்பாலனோர் மீண்டும் விவசாயத்திற்கே சென்று விடலாம் என்று எள்ளி நகையாடினார்கள். விவசாயம் என்பது யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள அது ஒன்றும் மென்பொருள் கிடையாது என்று அப்பொழுதுதான்நான்நினைத்துப்பார்த்தேன்.... என் சிறு வயது அனுபவமே அதற்குச் சான்று . நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம் அது. என் பெற்றோர்களும் விவசாயத்தைப் பற்றி அவ்வளவாக அறிந்திருக்க வாய்ப்பில்லை அவர்களும் அரசு ஊழியர்கள் என்ற காரணத்தினால். என் தாத்தா பாட்டி இறந்த அடுத்த வருடம் நாமும் விவசாயம் பண்ணலாமே என்று என் தந்தை முடிவெடுத்திருந்தார்.உழுது விதைத்தும் முடித்திருந்தார்கள். அப்பொழுது உரம் இட வேண்டிய நேரம் நானும் எனது பெற்றோர்களும் உர மூடையை சுமந்து கொண்டு வயலுக்குச் சென்றோம். வரப்பில் நடக்கும் சுகமே அலாதியானது.அதன் மேடு பள்ளங்கள் தானாகவே உருவானவை அல்ல. உலக வரைபடம் வரையறுக்கும் முன்பே தன்னுடைய நிலத்திற்கு எல்லை போடப்பட்டவை தான் இந்த வரப்புகள். இரு வரப்புகளுக்கிடையே தண்ணிர் பாய்ந்து செல்லும் அழகே அழகு. எத்தனை கோடி கொட்டிக் கிடைத்தாலும் காண கிடைக்காத அற்புதம் அது. சினிமாவில் மட்டுமே கண்டு களித்திர்பார்கள் நகரவாசிகள். உரங்களைப் பிரித்து அவரவர்களுக்கு கொடுத்த பகுதிகளுக்குச் சென்றோம். வயல் முழுவதும் தண்ணிர் சூழ்ந்திருந்த நேரம் எனது கால் சட்டையை மடித்து விட்டு வயலுக்குள் இறங்க ஆயத்தமானேன். எனது கையில் உள்ள சட்டி முழுவதும் உரம்.வயலுக்குள் இறங்கியதும் ஒரு சறுக்கு!!! என்னை நிதானப்படுத்திக் கொண்டு உரத்தை தூவ ஆரம்பித்தேன்.சட்டியில் உள்ள உரம் முழுவதும் காலியாகி இருந்தது. வயலுக்குள் இருந்து வரப்பில் கால் வைத்த போது தான் தெரிந்தது என் கால்கள் முழுவதும் ரத்தம். வயலில் பயிர்களுக்குத்தான் எத்தனை கோபம்....வேலை தெரியாமல் என்னை மிதிக்கிறான் என்று ... கூட்டுமுயற்சியின்(டீம் வொர்க்)ஆரம்பமே விவசாயம் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அப்பொழுது தான் கற்றுக்கொண்டேன் விவசாயம் எவ்வளவு கடினம் என்று அசை போட்டுக் கொண்டே பணிக்குத் தயாரானேன்.....