Sunday, September 27, 2009

மனைவி சொல்லே மந்திரம்

மனைவி சொல்லை மந்திரமாகக் கருதி, மனைவியை மதித்து வாழ்ந்து, மகத்தான சாதனைகள் புரிந்தவர்கள் ஏராளம். அவர்களில் மாமேதையான நத்தானியல் ஹாவ்தார்னும் ஒருவர். நிறுவனம் ஒன்றில்... குறைந்த சம்பளத்தில், குமாஸ்தா வேலை பார்த்து வந்தார் இவர். ஒரு நாள், திடுமென வேலை பறிபோனது. அடுத்து என்ன செய்வது என்று தவித்தவருக்கு, ஆறுதலும் அறிவுரையும் சொன்னது அவரின் மனைவிதான்! ''உங்கள் திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனவே, நாவல் எழுதுங்கள். நாளை... உங்களது திறமையை இந்த நாடே அறியும்'' என்று உற்சாகப்படுத்தினார் மனைவி. ஆனால் நத்தானியல், ''அதுவரை, சாப்பாட்டுக்கு என்ன செய்வது?'' என்று பரிதாபமாகக் கேட்டார்.
அதற்கு அவரின் மனைவி, ''அந்தக் கவலை உங்களுக்கு எதற்கு? மாதா மாதம் வீட்டுச் செலவுக் கென்று தாங்கள் தந்த பணத்தில் கொஞ்சம் சேமித்து வைத்திருக்கிறேன். சிக்கனமாக செலவு செய்தால், ஆறு மாதம் வரை நிம்மதியாக சாப்பிடலாம். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் எழுதுங்கள்'' என்றார். இப்படி, தன் மனைவி கொடுத்த உத்வேகத்துடன் நத்தானியல் எழுதிய நாவல்தான் _ 'ஸ்கார்லட் லெட்டர்!'இதையடுத்து உலகமே போற்றும் எழுத்தாளராக, மேதையாகப் பரிணமித்தார் நத்தானியல் ஹாவ்தார்ன்.

தேர்ச்சிக்குத் தேவை பயிற்சி

ஜப்பான் தேசத்து அரசன் ஒருவன், தன் மகனுக்கு முடிசூட்ட நினைத்தான். நாடாளப் போகும் ஒருவனுக்கு விழிப்பு உணர்வு அவசியம் என்று கருதியவன், தன் மகனை ஞானி ஒருவரிடம் அனுப்பி வைத்தான். அவர் தரும் பயிற்சிகள், மகனின் விழிப்பு உணர்வை வளர்க் கும் என்பது அரசனின் எண்ணம். ஞானியின் ஆசிரமத்தில் பல்வேறு பணிகளைச் சிறப்பாகச் செய்து வந்தான் இளவரசன். ஒரு நாள், திடீரென தடியால் அவனைத் தாக்கினார் ஞானி.இளவரசன் அதிர்ந்தான். ''என்ன இது? ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள்?'' என்று கேட்டான்.''உனது விழிப்பு உணர்வை மேம்படுத்துவதற்கான முதல் பயிற்சி இதுதான். திடீர் திடீரென தடியால் உன்னைத் தாக்குவேன். அதிலிருந்து நீ தப்பிக்க வேண்டும்'' என்றார். இளவரசன் திகைத்தான். ஆரம்பத்தில்... ஞானியின் தாக்குதலில் இருந்து அவனால் தப்பிக்க இயலவில்லை; பல முறை அடி வாங்கினான். ஆனால், போகப் போக அவனது அறிவும் உணர்வும் கூர்மையாயின. ஞானியின் காலடி ஓசையைக்கூடத் துல்லியமாகக் கணித்து, அவரிடம் இருந்து தப்பித்தான். ஞானி மகிழ்ந்தார். ''பயிற்சியின் முதல் கட்டம் முடிந்தது. இனி, தூங்கும்போது தாக்கு வேன். எச்சரிக்கையாக இரு'' என்றார். இதிலும் ஆரம்ப கட்டத்தில் பல முறை அடி வாங்கியவன், அடிக்கு பயந்து தூக்கத்தையே இழந் தான். ஒரு கட்டத்தில் தூக்கத்திலும் உள்ளுணர்வு விழித்திருக்கும் நிலையை எட்டினான். ஒரு நாள், தூங்கிக் கொண்டிருக்கும் அவனைத் தாக்குவதற்காக தடியை ஓங்கினார் ஞானி. அவனோ, கண்களைத் திறக்காமலேயே தாக்குதலைத் தடுத்தான். ஞானிக்குத் திருப்தி! மறுநாள், ''இனி மூன்றாம் கட்ட பயிற்சி. தடிக்கு பதிலாக வாளால் தாக்குவேன். கொஞ்சம் அசந்தாலும் உயிர் போய் விடும். ஜாக்கிரதை!'' என்று எச்சரித்தார். இளவரசன் அதிர்ந்தான். 'விழிப்பு உணர்வை மேம்படுத்த நமக்குக் கற்றுத் தருகிறாரே... ஒரு முறை, இவர் தூங்கும் போது நாம் தாக்கினால் என்ன?' என்று எண்ணினான். மறுகணம், ஞானியின் முகம் சிவந்தது. ''என்னையே தாக்கத் திட்டமிடுகிறாயா? என்ன துணிச்சல்?'' என்று அவன் மீது பாய்ந்தார். 'மனதில் நினைப்பதையும் அறியும் அளவுக்கு விழிப்பு உணர்வு மிகுந்தவராக இருக்கிறாரே இந்த ஞானி' என்பதை அறிந்த இளவரசன் வெட்கித் தலை குனிந்தான். ஞானியிடம் மன்னிப்புக் கேட்டான். அவர் அளவுக்கு, விழிப்பு உணர்வில் தானும் மேம்பட உறுதி கொண்டான். பயிற்சிகள் தொடர்ந்தன. விரைவில் தேர்ச்சி பெற்றான். அவனை வாழ்த்தி வழியனுப்பினார் ஞானி!

Thursday, September 24, 2009

தவப்புதல்வனின் தாய்

விருதுநகர் தெப்பக்குளம்; குளத்தைச் சுற்றிலும் கடைவீதிகள். அந்த வீதிகளின் ஒன்றுக்குள்ளே பிரிந்து செல்லும் சுலோசன நாடார் வீதி என்னும் அந்தச் சின்னஞ்சிறு சந்துக்குள்ளேதான், தமிழ் நாட்டின் தவப்புதல்வர் காமராஜ் அவர் களை ஈன்றெடுத்த அன்னை சிவகாமி அம்மாள் வாழ்ந்து வருகிறார்.
மிகச் சாதாரணமான எளிய இல்லம். அங்குள்ள கயிற்றுக் கட்டிலில் அந்த அம் மையார் படுத்திருந்தார். சின்ன இடம். நாலு பக்கத்துச் சுவர்களிலும் பழம் பெரும் சேத பக்தர்களின் படங்கள். அவற் றுக்கிடையே வேல் முருகன் படம். அதற்குப் பக்கத்தில் சத்தியமூர்த்தியின் உருவம்!
கட்டிலில் படுத்திருந்த மூதாட்டியார் எங்களைக் கண்டதும் எழுந்து உட் கார்ந்தார். மூச்சுத் திணறியது. ''வாங்கய்யா'' என்று அன்புடன் அழைத்தபடியே எழுந்து போய் மின்சார விளக்கின் 'ஸ்விச்'சைப் போட்டார்.
''தங்கள் திருமகனைப் பற்றித் தாங்கள் ஏதாவது சொல்லவேண்டும்...''
''நான் என்ன சொல்லப் போகிறேன் ஐயா! எனக்கு வயதாகிவிட்டது. அத்து டன் ரத்தக் கொதிப்பு வேறு. பேசினால் மூச்சுத் திணறுகிறது. ரெண்டு வருசம் உப்பைத் தள்ளிப் பத்தியச் சாப்பாடு சாப்பிட்டேன். இப்போது கொஞ்சம் பரவாயில்லை. சாப்பாட்டில் உப்பு சேர்ந்துக்கொள்கிறேன்.''
''சென்னைக்குப் போய் மகனோடு இருப்பதில்லையா?'' என்று கேட்டபோது அம்மூதாட்டியார் முறுவலித்தார்.

''நல்லாச் சொன்னீங்கய்யா... அவன் மந்திரியாகி ஏழெட்டு வருசம் ஆகுது. இதுவரைக்கும் நான் அங்கே அஞ்சு தடவைதான் போயிருப்பேன். போன உடனே என்னை ஊருக்குத் திருப்பிப் பயணம் பண்ணி அனுப்புவதிலேயே குறியாயிருப்பான்! 'பட்டணம் பாக்கணும்னா சுத்திப் பாரு. திருப்பதிக்குப் போகணும்னா போயிட்டு வா. எல்லாத் தையும் பார்த்துட்டு உடனே விருதுநகர் போய்ச் சேரு'ம்பான்..!''
''மாசச் செலவுக்கு உங்களுக்குப் பணம் அனுப்புகிறாரா?''
''அனுப்பறான். பொடிக்கடை தனக் கோடி நாடார் மூலமாத்தான் பணம் வரும்...''
''எவ்வளவு பணம் அனுப்பறாரு?''
''120 ரூபாய். பத்துமாய்யா? தண்ணி வரியே பதிமூணு ரூவா கட்டறேன். மாசம் அந்த 120 ரூபாதான், அதுக்கு மேலே செலவு செய்யக்கூடாதும்பான். அவங்கவங்க உழைச்சுப் பிழைக்கணும் பான். நானும் பேசாம இருந்துடுவேன். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா? ரேசன் வந்துது பாருங்க... அப்ப இங்கே வந்திருந்தான். 'என்னப்பா, இப்படிக் கேப்பையும் கம்பும் போடறாங்களே, இதை எப்படிச் சாப்பிடறது? நெல்லு வாங்கித் தரப்படாதா'ன்னு கேட்டேன். 'நெல்லு பேச்சுப் பேசாதே. ஊருக்கெல்லாம் ஒண்ணு, நமக்கு ஒண்ணானு கேட்டான். அவன் சொல்றதும் நியாயம்தானேய்யா..?''
''இப்படியரு தவப்புதல்வனைப் பெற்றெடுத்த தாங்கள் நிஜமாகவே பாக்கியசாலிதான்'' என்றதும், அன்னை யின் கண்கள் கலங்கிவிட்டன.
''ஏன் கண் கலங்குகிறீர்கள் அம்மா?''
''கலங்காம என்ன செய்ய? துறவியாகி விட்ட பட்டினத்தடிகளை அவன் தாய் துறந்துவிட்டதைப்போல், நானும் என் மகனை இந்த நாட்டுக்காகத் துறந்து விட்டு நிற்கிறேனே!''

Friday, September 18, 2009

புதிதாக ஏ.சி. வாங்குபவராக இருந்தால்

புதிதாக ஏ.சி. வாங்குபவராக இருந்தால் உங்கள் வீட்டில் ஏ.சி. பொருத்தப்படவிருக்கும் அறையின் அளவை மனதில் வைத்துக் கொண்டு தேர்வு செய்யுங்கள். 1.5 டன், 2 டன், 3 டன் என்று நம் பயன்பாட்டுக்கு ஏற்ற ஏ.சி. மெஷின்கள் உள்ளன. 150 சதுர அடி கொண்ட அறையாக இருந்தால் 1.5 டன் அளவுள்ள ஏ.சி. போதுமானது. பெரிய ஹால் என்றால் 3 டன் தேவைப்படும்.உதிரிபாகங்களை குறைந்த விலையில் வாங்காதீர்கள். நல்ல விலையில் தரமானவற்றை வாங்குங்கள். ஏ.சி. வாங்கியதும், அதற்கேற்ற தரமான 'ஃப்யூஸ் ஒயர்', 'டிரிப்பர்' போன்றவற்றை பொருத்தவேண்டும். மலிவான விலைகளில் வாங்கினால், உங்கள் உயிருக்கு ஆபத்தாக முடியும். உதாரணத்துக்கு ஸ்பிலிட் ஏ.சி. 1.5 டன் எனில், 20 ஆம்ப்ஸ் ஒயரினால் ஆன ஃப்யூஸை பொருத்துங்கள். இதேபோல் டிரிப்பரும் 20 ஆம்ப்ஸ் கொண்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மின் சப்ளையில் கோளாறு எற்பட்டாலும் டிரிப்பர் தானாக ஆஃப் ஆகி ஏ.சி-யைக் காப்பாற்றி விடும்.ஏ.சி. வாங்கும்போது இலவசமாகக் கொடுக்கப்படும் ஸ்டெபிலைசர்கள் தரம் குறைந்தவையாக இருக்கக் கூடும். தரமான நிறுவனங்களின் ஸ்டெபிலைசர்களை வாங்குங்கள். எல்லா ஏ.சி. நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு சொல்லும் அட்வைஸ்... ஏ.சி. வாங்கி பொருத்தியதும், அது எப்போதும் 23 டிகிரிக்கு கீழ் வைக்கக்கூடாது. அதற்கும் குறைவாகக் கொண்டு போகும்போது ஏ.சி. அதிக பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும். அப்போது கம்ப்ரஸர், காயில், ஏ.சி-க்கு செல்லும் ஒயர் என எல்லா பகுதியும் சூடாகிவிடும். இதனாலும் தீப்பிடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. எக்காரணம் கொண்டும் 16 டிகிரியில் ஏ.சி-யை கொண்டு போகாதீர்கள்.வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏ.சி-க்களை முன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சர்வீஸ் செய்யவேண்டும். ஸ்பிலிட் ஏ.சி. எனில் 15 நாட்களுக்கு ஒரு முறை ஃபில்டரை கழற்றி தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து மாட்டுங்கள். இதனால், எந்தவித இடையூறும் இல்லாமல் குளுமையாக காற்று வரும்.ஏ.சி. ஓடிக் கொண்டிருக்கும்போதே ரூம் ஸ்ப்ரே அடிப்பது மிகவும் தவறு. பெர்ஃப்யூம்கள் ஏ.சி.யின் உள்ளே இருக்கும் காயிலை பழுதாக்கி, சீக்கிரத்தில் மெஷினை ரிப்பேராக்கிவிடும். நல்ல குளுமை வேண்டும் என்பதற்காக ஏ.சி. ஓடிக்காண்டிருக்கும்போதே ஃபேனை போடாதீர்கள். ஃபேன் காற்று, ஏ.சி காற்றை திசை திருப்பி விடும். ஏ.சி காற்று வருவதற்கு சரியான ஃப்ளோ கிடைக்காது.27 டிகிரியிலும், நல்ல குளுமையை தரக்கூடிய ஏ.சி.தான் தரமானது. 27 டிகிரியில் வைக்கும்போது மூச்சு திணறுவதுபோல் உணர்ந்தால், அந்த ஏ.சி. சரியாக சர்வீஸ் செய்யப்படாததாக இருக்கலாம். ஸ்பிலிட் ஏ.சி. எனில் அறையை முழுவதையும் மூடிவிடக்கூடாது. கதவுக்கு அடியில் இருக்கும் வழியிலாவது காற்று போகும் அளவுக்கு இடைவெளி இருக்க வேண்டும். சிறிய துவாரமாவது போட்டு வையுங்கள். இதனால் ஒரு நாளைக்கு ஒரு யூனிட் கரன்ட் மட்டுமே கூடுதலாகச் செலவாகும்.உங்கள் ஏ.சி. கூலாக இல்லையெனில் உடனடியாக சர்வீஸ் ஆட்களை அழைத்து, மெஷினில் கேஸ் போதுமான அளவோடு இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் நிரப்பச் சொல்லுங்கள்.ஏ.சி. மெஷின்களைப் பொறுத்தவரை எவாபிரேட்டர் காயில், கண்டன்ஸர் காயில், ஏ.சி. மெஷினுடைய ஃபேன் இந்த மூன்றும் மிகவும் முக்கியம். இந்த பாகங்கள் சுத்தமாக வேலை செய்கின்றனவா என்பதை கண்காணித்துக் கொண்டே இருங்கள். இவை மூன்றும் சரியாக வேலை செய்தாலே மின்சாரம் வீணாகாமல் இருக்கும்.ஏ.சி-யை வாங்கும்போது அதுபற்றிய டெக்னிக்கலான விஷயங்களை அறிந்து கொள்ளவேண்டும். இதனால், ஏ.சி. சர்வீசுக்கு வருபவர்கள் மேலோட்டமாக சரி செய்வதையும் நீங்கள் கண்டுபிடித்துவிடலாம். சர்வீஸ் ஆட்கள் வந்தால் கூடவே இருந்து கவனிப்பது உங்கள் ஏ.சி. மெஷினுக்குப் பாதுகாப்பானது.

ம்.. வேப்ப மரத்துக் காத்து... கயித்துக் கட்டிலு இதுக்கெல்லாம் ஈடாகுமா இந்த ஏ.சி.' என்று கிராமங்களில் இன்றைக்கும் காற்றாடத்தான் தூங்குகிறார்கள். வீடு கட்டும்போதே காற்று எளிதாக வந்து போகும் வகையில் அமைத்துவிட்டால்... ஏ.சி-யாவது... கீசியாவது!

Thursday, September 17, 2009

தென்கொரியாவில் தேர்வு

தென்கொரியாவில் கல்லூரிக்கான நுழைவுத்தேர்வினை அரசாங்கம் நடத்துகிறது. அது தான் அங்குள்ள மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயக்கும் தேர்வு. இந்த தேர்வு நடக்கும் நாட்களில் அரசாங்கம் எதை எல்லாம் செய்கிறது என்ற பட்டியலை பாருங்கள்.
  1. பரிட்சை நாள் அன்று காலை அலுவலகம் செல்கின்றவர்கள், வணிகர்கள் மற்றும் பிற தொழில் செய்கின்றவர்கள் ஒரு மணி நேரம் தாமதமாக தங்கள் பணிக்கு செல்லும்படியாக அரசு கேட்டுக் கொள்கிறது. அதற்கான அனுமதியை எல்லா நிறுவனங்களும் அளித்திருக்கின்றன. முக்கிய காரணம் பரிட்சைக்கு செல்லும் மாணவர்கள் பேருந்து ரயில் சாலை போன்ற இடங்களில் நெருக்கடி இல்லாமல் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காகவே.
  2. பரிட்சை நாள் அன்று கூடுதலான ரயில் மற்றும் பேருந்துகள் இயக்கபடுகின்றன.
  3. பரிட்சை நடைபெறும் வளாகத்தில் யாரும் செண்ட் அடித்துக் கொண்டு வருவது முற்றிலும் தவிர்க்கபடுகிறது. காரணம் அது கவன சிதைவை உண்டுபண்ணக்கூடும்.
  4. பரிட்சைக்கு தயார் ஆகும் மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்தவதற்கு வசதியாக மாலை முன்னதாகவே அவர்கள் வேலையிலிருந்து திரும்ப அனுமதி தரப்படுகிறது
  5. பரிட்சைக்கு மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் நாட்களில் பெற்றோர்கள் விளையாட்டு போட்டிகள் மற்றும் கேளிக்கை விழாக்களில் கலந்து கொண்டு இரவில் தாமதமாக வீடு திரும்ப கூடாது என்பதற்காக இரவு பத்து மணிக்கு எல்லா விழாக்களும் நிறைவு செய்யப்படுகின்றன.
  6. பரிட்சை நாளில் ஆங்கில தேர்வு எழுதும் மாணவர்கள் உச்சரிப்பு கேட்டு பதில் எழுத நேரிடும் என்பதால் அதற்கு இடையூறு செய்ய கூடாது என்று பரிட்சை நடக்கும் நேரத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. விமானம் பறக்கும் ஒசை மாணவர்களின் கவனத்தை சிதற அடிக்கும் என்பதால் விமான சேவை நேரம் அன்று மட்டும் மாற்றப்படுகிறது. தரையிறங்க உள்ள விமானங்கள் கூட தாமதமாகவே அனுமதிக்கபடுகின்றன
  7. ரேடியோ மற்றும் தொலைக்காட்சி பரிட்சைக்கு செல்லும் மாணவர்களை பொதுமக்கள் வாழ்த்தும் நிகழ்ச்சியை ஒளிபரப்புகின்றன
  8. பரிட்சை நடைபெறும் நேரத்தில் இந்த ஆண்டு பரிட்சை எப்படியிருக்கிறது. இது சென்ற ஆண்டுகளில் இருந்து எந்த அளவு மாறுபட்டிருக்கிறது. எப்படி மாணவர்கள் இதை எதிர் கொள்கிறார்கள் என்பதை முக்கிய தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றது
  9. அன்று மின்சார ரயில்கள் கூட அவசியமில்லாமல் ஒலிப்பானை உபயோகபடுத்த கூடாது
  10. தேர்வு நடைபெறும் வளாகங்களின் அருகாமையில் எவரும் எவ்விதமான ஒலிப்பானையும் ஒரு போதும் பயன்படுத்த கூடாது
  11. ஸ்டாக் மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய வணிக மையங்கள் கூட அன்று ஒரு மணி நேரம் தாமதமாகவே இயங்க துவங்குகின்றன
  12. நுழைவு தேர்வு எழுதும் மாணவர்களை தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கு அன்று விடுமுறை அளிக்கபடுகிறது. அதனால் மற்ற மாணவர்கள் வந்து போகும் இடையூறு தவிர்க்கபடுகிறது.
  13. தேர்வு நடைபெற்ற நாளின் மாலையில் அன்று கேட்கபட்பட்ட கேள்விகளும் அதற்கான சரியான பதிலையும் நாளிதழ்கள் பிரசுரம் செய்கின்றன. இதனால் தான் எவ்வாறு தேர்வு எழுதினோம் என்பதை மாணவன் உடனே தெரிந்து கொள்ள முடிகிறது.
  14. தேர்விற்கு ஒருவாரம் முன்னதாகவே மாணவர்களின் நினைவாற்றலை வளர்க்க உதவும் குறிப்புகள் மற்றும் பரிட்சை எழுதும் மாணவர்களுக்கான சீரான உணவு முறை பற்றிய தகவல்களை எல்லா ஊடகங்களும் வாறி வழங்குகின்றன. வீடு தேடி வந்து உளவியல் நல ஆலோசகர்கள் நம்பிக்கை பயிற்களும் தருகிறார்கள்
  15. இது போலவே பௌத்த ஆலயங்களும் கிறிஸ்துவ தேவலாயங்களும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் நினைவாற்றலை பயிற்சி தருகின்றன.
  16. கொரிய மின்சார துறை இதற்காக தனது 4000 பணியாளர்களை சிறப்பு பணி என கருதி மின்சார தடையே இல்லாமல் பரிட்சை நடைபெற உதவி செய்கிறது
  17. பரிட்சைக்கு மாணவர்கள் தயார் ஆகும் நாட்களில் வீட்டில் பெற்றோர்கள் ஹெட்போன் போட்டுக் கொண்டு மட்டுமே தொலைக்காட்சி பார்க்கும்படியாக தொலைக்காட்சிகளே வற்புறுத்துகின்றன.
  18. தாமதமாகவோ அல்லது நுழைவு தேர்விற்கான அடையாள அட்டையை மறந்துவிட்டோ வரும் மாணவர்களுக்கு உதவி செய்வதற்கு என்றே தனியான போலீஸ்படை அமைக்கபட்டு உதவி செய்கிறார்கள்.
  19. கேள்விதாளை 400 ஆசிரியர்கள் கொண்ட குழு நான்கு நிலைகளில் உருவாக்கி முடிவு செய்கிறது. பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள் ஒரு போதும் இடம் பெறுவதில்லை.
  20. தோல்வியுற்ற மாணவர்களின் பெற்றோர்கள் தன் பிள்ளையின் தோல்விக்கு ஒரு போதும் ஆசிரியரை குறை சொல்வதில்லை. மாறாக கூடுதல் கவனம் தந்து எப்ப படிக்க வைப்பது என்பதில் தான் அக்கறை காட்டுகிறார்கள்.

கொரியா மாணவர்களின் எதிர்காலத்தை முடிவு செய்யும் நுழைவு தேர்விற்கு அரசும் மக்களும் தரும் முக்கியத்துவத்தில் பத்தில் ஒரு பகுதி கூட நமது சூழலில் இல்லை.

Monday, September 14, 2009

எய்ட்ஸ் நோயாளிக்கு வாய்த்த அதிர்ஷ்டம்...

'அதிசயம்... ஆனால், உண்மை!' என்று சொல்லும்படியாக எங்காவது, எப்போதாவது, ஏதாவது சில சம்பவங்கள் நடப்பதுண்டு. அந்தப் பட்டியலில் இந்த விஷயத்தையும் சேர்க்கவேண்டும். சம்பந்தப்பட்டவர்களின் எதிர்கால நலன் கருதி, பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டிருக்கின்றன.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்துக்கும் நகரத்துக்கும் இடைப்பட்ட ஊர் அது. அந்த ஊரைச் சேர்ந்த சரவணனுக்கும், கீதாவுக்கும் திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிறது. ஒரு வருடத்துக்கு முன்பு கீதா அழகான பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். குழந்தைக்கு ஆராதனா என்று பெயர் சூட்டி சந்தோஷப்பட்டிருக்கிறார்கள். 'இதுல என்ன அதிசயம் இருக்கு..?' என்று கேட்கிறீர்களா?
சரவணன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்! அவரைக் கரம் பிடித்தபோது
கீதாவுக்கு எய்ட்ஸ் கிடையாது. குழந்தை ஆராதனா எய்ட்ஸ் நோய் பாதிப்பில்லாமல் பிறந்திருக்கிறாள். கீதாவுக்கும் எய்ட்ஸ் பரவவில்லை. அதுதான் அதிசயம்!
சரவணனின் வீட்டுக்குப் போனோம். ''பாப்பா தூங்கிட்டு இருக்கா... வாங்க வெளியில உட்கார்ந்து பேசுவோம்!'' என்றவர், வீட்டு வாசலில் இருந்த வேப்ப மரத்தடியில் கயிற்றுக் கட்டிலை எடுத்துப் போட்டார். ''நாமக்கல்ல இருக்கிற ஒரு காலேஜ்ல நான் டிகிரி படிச்சேன். ஃபைனல் இயர் படிக்கும்போது, ஃபர்ஸ்ட் இயர்ல வந்து சேர்ந்தா கீதா. அவளை முதல்ல பார்த்ததுமே மனசுக்குள்ள ஒரு பூ பூத்துச்சு. 'இதயம்' படத்துல வர்ற முரளி மாதிரி என்னோட காதலை கீதாகிட்ட போய்ச் சொல்லத் தயங்கியே... ஒரு வருஷம் முடிஞ்சு போச்சு.
இந்த நிலையில... ஃபைனல் இயர்ல எங்க செட் பசங்க நாலு பேரு குற்றாலம் டூர் போயிருந்தோம். நாங்க தங்கியிருந்த இடத்துல ஒரு வெளிநாட்டுப் பொண்ணு இருக்கறதா சொல்லி புரோக்கர் ஒருத்தன் வந்தான். வெளிநாட்டுப் பொண்ணுன்னு சொன்னதால, ஆசையில ஓகே சொல்லிட்டோம். நாங்க தங்கியிருந்த காட்டேஜுக்கு பொண்ணை கூட்டிட்டு வந்தான் புரோக்கர். நாலு பேரும் விடியற வரைக்கும் அந்த பொண்ணோட சந்தோஷமா இருந்தோம். என் நண்பர்கள் எல்லாரும் காண்டம் யூஸ் பண்ணினானுங்க. என்னோட திமிரு... வெளி நாட்டுப் பொண்ணுகிட்ட என்னடா பிரச்னை இருக்கப் போவுதுன்னு, காண்டம் யூஸ் பண்ணல. என் வாழ்க்கையில நான் செஞ்ச முதல் தப்பும் அதுதான்... கடைசி தப்பும் அதுதான்.
ஊருக்கு வந்ததும் திரும்பவும் கீதாவைத் தொடர ஆரம்பிச்சேன். ரெண்டு வருஷ போராட்டத்துக்குப் பிறகு தான் அவ என் காதலை ஏத்துக்கிட்டா. அதுக்குப் பிறகு நான் அவளுக்கு உண்மையா இருக்க ஆரம்பிச்சேன். இந்த சூழ்நிலையில கீதாவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாங்க. அப்போதான் கீதா, தன்னோட வீட்டுல எங்க காதலைச் சொன்னா...'' என்று சரவணன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சூடு பறக்கத் தேநீர் கொண்டுவந்தார் கீதா.
தேநீரை நம்மிடம் கொடுத்துவிட்டு சரவணன் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார் கீதா. ''நான் காதலிக்கற விஷயத்தைச் சொன்னதும் அப்பா என்னை அடிக்க வந்துட்டாரு. அப்புறம் என்னோட பிடிவாதத்தைப் பார்த்த பிறகு கல்யாணத்துக்கு சம்மதிச்சாரு. நாமக்கல் ஏரியாவுல கல்யாணத்துக்கு முன்னாடி பையனுக்கும் பொண்ணுக்கும் ஹெச்.ஐ.வி. டெஸ்ட் பண்ணிக்கறது ஒரு சம்பிரதாயமாகவே இருக்கு. நாங்களும் டெஸ்ட் பண்ணினோம். அப்போதான் இவருக்கு எய்ட்ஸ் இருக்கறதை கண்டுபிடிச்சாங்க. அந்த நேரத்துல இவரு அழுத அழுகை எனக்கு மட்டும்தான் தெரியும். எய்ட்ஸ் இருக்குன்னு நான் இவரை விட்டுட்டு போயிருந்தா... கண்டிப்பா அன்னிக்கே இவரு செத்திருப்பாரு. முதல்ல அதிர்ந்துபோன நான், மெள்ள ஜீரணிச்சுக்கிட்டேன். 'கல்யாணம் பண்ணிகிட்டு உன்னோட வாழ்க்கையை கெடுக்க விரும்பல கீதா'ன்னு சொல்லி ஒதுங்கப் பார்த்தாரு. ஆனா, நான் பிடிவாதமா இவரை கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சேன். இவருக்கு எய்ட்ஸ் இருக்கற விஷயம் இன்னும் எங்க குடும்பத்துல யாருக்கும் தெரியாது.
கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி எய்ட்ஸ் நோய்க்கு ட்ரீட்மென்ட் கொடுக்கற டாக்டர் ஆனந்தைப் போய் பார்த்தோம். 'உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சுருக்கு?'னு அவரு என்னை திட்டினாரு. என் காதலோட உறுதியைப் பார்த்துட்டு, 'சரி... கல்யாணம் பண்ணிக்கங்க. ஆனா, குழந்தையெல்லாம் பெத்துக்கக் கூடாது. எப்போ செக்ஸ் வச்சுக்கிட்டாலும் கண்டிப்பா காண்டம் யூஸ் பண்ணணும்'னு சொன்னாரு. கல்யாணம் முடிஞ்சு ரெண்டரை வருஷம் அப்படித்தான் இருந்தோம். குழந்தை இல்லைன்னு ஊருல அவரைப் பத்தித் தப்பா பேசுறதைக் கேட்டுட்டு, என்னால தாங்கிக்க முடியல. எனக்கு அந்த வியாதி வந்தாலும் பரவாயில்ல... குழந்தை பெத்தே ஆகணும் முடிவு பண்ணினேன். ஆனா, அதுக்கு எங்கவீட்டுக்காரர் சம்மதிக்கவே இல்ல. ஒரு நாள் நைட் அவரை கட்டாயப்படுத்தி காண்டம் இல்லாம செக்ஸ் வச்சுக்கிட்டேன். நான் கர்ப்பமானேன். அதுக்குப்பிறகு டாக்டர் ஆனந்த்தை போய் பார்த்தோம். அவரு மறுபடியும் என்னை திட்டித் தீர்த்துட்டு, 'எப்படியோ உனக்கு அந்த கிருமிகள் பரவியிருக்கும். பொறக்கப்போற குழந்தைக்காவது அது இல்லாம பார்த்துக்குவோம்'னு சொல்லி ட்ரீட்மென்ட் கொடுத்தாரு. ஹெச்.ஐ.வி. பாதிப்பு இல்லாம குழந்தை பிறந்துடுச்சு. அதுக்குப் பிறகு எனக்கு டெஸ்ட் எடுத்துப் பார்த்தாங்க. எனக்கும் ஹெச்.ஐ.வி. பாதிப்பு இல்ல. சில பேருக்கு ஆறு மாசத்துக்கு பிறகுதான் தெரியும்னு டாக்டர் சொன்னாரு. இப்போ ரெண்டு வருஷம் ஆகப்போகுது. அதனால மறுபடியும் செக் பண்ணி பார்த்துக்கலாம்னு டாக்டர் கிட்ட போனோம். எந்த சாமி புண்ணியமோ... எனக்கு எய்ட்ஸ் இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாரு!'' என்று கண் கலங்கினார் கீதா.
''இது எப்படி சாத்தியமாகும்..?'' என்ற கேள்வியோடு டாக்டர் ஆனந்த்தை சந்தித்தோம். ''நிஜமாகவே இது மெடிக்கல் மிராக்கிள் தான். அந்தப் பொண்ணுகிட்ட நான் பேசிய வரைக்கும் பீரியட் டைம் முடிஞ்சு சரியா பதினான்காவது நாள் ரெண்டு பேரும் செக்ஸ் வச்சுருந்திருக்காங்க. அதனால ஒரே முயற்சியில கர்ப்பமாகிட்டா. அந்த நேரத்துல அந்தப் பொண்ணோட உடலுறுப்புகள்ல புண் எதுவும் இல்லாம இருந்திருக்கணும். அதோட உடம்புல எதிர்ப்பு சக்தியும் அதிகமா இருந்திருக்கணும். அதனால தான் ஹெச்.ஐ.வி. அவங்கள பாதிக்கல.அதுக்குப் பிறகு அவங்க தொடர்ந்து காண்டம் யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. இனி காண்டம் இல்லாம இது மாதிரி ரிஸ்க் எடுக்க வேண்டாம்னு அவங்களை எச்சரிக்கை பண்ணி ருக்கேன்.
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் மத்தவங்களும் இதையே ஒரு முன் உதாரணமா எடுத்துகிட்டு காண்டம் இல்லாம உடலுறவு வச்சுக்க முயற்சிக்கக்கூடாது. அப்படி வச்சுக்கிட்டா, கண்டிப்பா எய்ட்ஸ் வரும்!'' என்று எச்சரித்தார்.
நன்றி: ஜூனியர் விகடன்

சுவிஸ் பேங்க்ல அக்கவுண்ட் ஆரம்பிக்கலாமா?

சுவிட்சர்லாந்து வங்கிகள் என்றாலே வாடிக்கையாளர்களின் பணம் மற்றும் வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்கள் குறித்த பாதுகாப்புக்குப் பிரபலமானவை என்பது சர்வதேசப் பாமரர்களுக்கும் தெரிந்த உண்மை. சுவிஸ் வங்கிகளின் ரகசியத்தன்மை 1934-ம் ஆண்டு சட்டம் மூலம் கொண்டுவரப்பட்டது. கிட்டத்தட்ட 300 ஆண்டுகளாக சுவிஸ் வங்கிகள் பரபரப்பாக இயங்கி வந்தாலும், 'இரும்புத் திரை வங்கிகளாக' இவை மாறத் தொடங்கியது அதன் பிறகுதான். பின்னணியில், இரண்டு காரணங்கள் இருந்தன.
ஹிட்லர் ஜெர்மனியை ஆண்ட 1931-ம் ஆண்டு, 'ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் சொத்துக்கள் வைத்திருக்கக் கூடாது' என்று அறிவித்திருந்தார். அதை மீறி சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர். 1932-ல் பிரான்ஸின் மேல்தட்டைச் சேர்ந்தவர்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இதற்கு எதிராக பிரெஞ்சு இடதுசாரிகள் கலகம் செய்யத் துவங்கினர். அதிலிருந்தே சுவிஸ் வங்கிகளின் நடைமுறைகள் மேலும் இறுக்கமாகின. சுவிட்சர்லாந்தைப் பொறுத்தவரை, சொத்துக் குவிப்பைக் கணக்கில் காட்டாமல் கறுப்புப் பணம் குவிப்பது அந்த நாட்டின் சட்டப்படி குற்றமே கிடையாது. எனவேதான் உலகெங்கும் அரசாங்கங்களின் கண்களில் மண்ணைத் தூவி, வருமான வரித் துறையுடன் கண்ணாமூச்சி ஆடி, கறுப்புப் பணம் சேர்க்கும் பணக்காரர்களும், மகா மெகா ஊழல் அரசியல்வாதிகளும் சுவிஸ் வங்கிகளில் பணம் குவிக்கின்றனர்.
'எங்கள் நாட்டில் இந்த அமைச்சர் ஊழல் செய்து சேர்த்த பணம் இங்கு வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டுள்ளதா?' என்றோ, 'வருமானத்தில் கணக்கு காட்டப்படாத பணம் உங்கள் வங்கியில் சேர்க்கப்பட்டுள்ளதா?' என்று கேட்டாலோ, சுவிஸ் வங்கிகள் சொல்லும் ஒரே பதில், 'ஸாரி'. ஆயுதக் கடத்தல், போதைப் பொருள் கடத்தல் போன்ற பிரத்யேகக் குற்றங்களுக்கு மட்டும் விதிவிலக்காக விசாரணையின் பொருட்டு சுவிஸ் வங்கிகள் வாடிக்கையாளர் குறித்த ரகசியங்களைத் தரும்.
ஆனாலும்கூட, அந்தக் குற்றங்கள் முழுவதுமாக நிரூபிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும். மேலும், சுவிஸ் மாஜிஸ்டிரேட் ஒருவர் தீர விசாரித்து, 'சுவிட்சர்லாந்து சட்டங்களின்படி இது தண்டிக்கப்படக்கூடிய குற்றம்' என்று சான்றிதழ் அளித்தால் மட்டும்தான் இது சாத்தியம். இல்லாமல்போனால், சுவிட்சர்லாந்து அரசாங்கமே கேட்டாலும் சுவிஸ் வங்கிகள் வாடிக்கையாளர் குறித்த விவரங்களைத் தர வேண்டிய அவசியமில்லை. இது தவிர விவாகரத்து, சொத்துப் பிரிவினை போன்ற எந்த ஒரு காரணத்துக்காகவும் வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்கள் தரப்பட மாட்டாது. வருமானத்தை மிஞ்சி சொத்து சேர்ப்பது, பணம் சேர்ப்பது அந்த நாட்டுச் சட்டப்படி குற்றமில்லை. இது குறித்த விவரங்களை யாராவது கேட்டு, வங்கிகள் கொடுத்தால்தான் சுவிட்சர்லாந்து குற்றவியல் சட்டத்தின்படி கடுமையான குற்றமாகும்.
அப்படியானால், இந்த வங்கிகளில் யார் வேண்டுமானாலும் அக்கவுன்ட் ஓப்பன் செய்துவிட முடியுமா?
சுவிஸ் வங்கிகள் வங்கிக் கணக்கைத் தொடங்குவதற்குக் கேட்கும் ஆவணங்கள்.
1. பாஸ்போர்ட்
2. இருப்பிடச் சான்றிதழ், கேஸ் கனெக்ஷனுக்கான பில்கள், குடிநீர் வரி கட்டிய பில்கள் போன்றவை.
3. பொருளாதாரப் பின்னணிக்கான ஆவணங்கள். உங்கள் கம்பெனியின் டாகுமென்ட்ஸ், பிசினஸ் ஒப்பந்தங்கள் ஆகியவற்றைக் காட்டலாம்.
4. நீங்கள் சுவிஸ் வங்கிகளில் கட்டும் பணம் உங்களுக்கு எந்த வருமானத்தின் மூலம் வந்தது என்பதற்கான ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஏனெனில் ஆயுதக் கடத்தலும் போதைப் பொருள் கடத்தலும் சுவிஸ் அரசியலமைப்பின்படி தடைசெய்யப்பட்டு இருப்பதால், அத்தகைய சட்டவிரோதச் செயல்களின் மூலம் வந்த வருமானம் இல்லை என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். மற்றபடி அது கறுப்புப் பணமா, ஊழல் பணமா என்பதைப் பற்றியெல்லாம் கவலையில்லை.
என்ன, ரொம்ப சிம்பிளாகத்தானே இருக்கிறது, நாமும் சுவிஸ் வங்கியில் ஒரு அக்கவுன்ட் ஓப்பன் செய்யலாம் என்று கிளம்புகிறீர்களா? ஒரு நிமிஷம்... பெரும்பாலான சுவிஸ் வங்கிகளில் 'மினிமம் பேலன்ஸ்' கண்டிப்பாகத் தேவை. அந்த மினிமம் பேலன்ஸ்... சுமார் ஆறு கோடியே அறுபத்தைந்து லட்ச ரூபாய்.
இதையெல்லாம் விட முக்கியம், சுவிஸ் வங்கியில் ஏற்கெனவே கணக்கு வைத்திருக்கும் ஒருவரின் அறிமுகம் தேவை. அவரை நீங்கள் கண்டுபிடிப்பதற்குள் தாவு தீர்ந்து டவுசர் கிழிவது நிச்சயம்.
சுவிஸ் வங்கிக் கணக்குகள் குறித்து சர்வதேச சமூகத்தின் கவனம் திரும்பி இருக்கிறது.
காரணம், அமெரிக்கா தொடங்கி மூன்றாம் உலக நாடுகள் வரை தன் ஆக்டோபஸ் கரங்களை விரித்து இறுக்கி நெரிக்கும் பொருளாதார நெருக்கடி. 'உள்ளூர்ச் சந்தையும் அரசாங்கமும் பங்குச் சந்தையும் இன்ன பிறவும் பொருளாதார நெருக்கடிகளில் தள்ளாடும்போது தங்கள் தேசத்தைச் சேர்ந்த மில்லியன், பில்லியன், டிரில்லியன் கணக்கான பணம் சுவிஸ் வங்கிகளில் முடங்கிக் கிடப்பது என்ன நியாயம்?' என்று உலக நாடுகள் சிந்திக்கத் தொடங்கியிருக்கின்றன.
இந்தியப் பண மதிப்புப்படி 72 லட்சம் கோடி ரூபாய் சுவிஸ் வங்கிகளில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த இந்தியாவின் இடைக்கால பட்ஜெட் தொகை ரூ. 9 லட்சத்து 53 ஆயிரத்து 231 கோடி. ஆக மொத்தம், கிட்டத்தட்ட ஏழு இந்திய பட்ஜெட்டுகளுக்கான இந்தியர்களின் கறுப்புப் பணம் சுவிஸ் வங்கிக் கணக்குகளில் உள்ளன.