Thursday, August 2, 2012

நான் ஒரு தமிழன்....

தட்டி எழுப்பிய

தம்பிக்கு

"குட் மார்னிங்"


தட்டில் உணவு கொடுத்த

அன்னைக்கு

"தேங்க்ஸ் மா"



தோளில் கைபோட்டு

துட்டு கொடுத்த தந்தைக்கு

"ஸ்வீட் பா"


முற்றலில் இருந்த

தங்கைக்கு

"பை சிஸ்டர்"


வீதியில் கண்ட

நண்பர்களுக்கு

"ஹாய் ஹாய் ஹாய்"



விலகிப் போன

நண்பிகளுக்கு

"ஹாய் ஸ்வீடி"



பள்ளிக்கூட

வளாகத்திலே

"பச்சை பச்சை ஆங்கிலம்"


வீடு திரும்பும் நேரத்திலே

காலிலே குத்திய கல்லுக்காக

கத்தினேன் "அம்மா" - என்று


குத்தியது கல்லா - இல்லை

குத்திக்காட்டியது - தமிழா???

Monday, July 16, 2012

தமிழனுக்கு கல்வி என்ன எட்டா கனியா???

இது என்னுடைய நூறாவது பதிவு...என்ன எழுதுவது...எதைப் பற்றி எழுதுவது என்ற சிந்தனை என் மனதில் இருந்தவண்ணமே இருந்தது. இவ்வாறாக யோசித்த போது கர்மவீரர் காமராஜரே என் கண்முன்னே வந்து நின்றார். அதற்கு காரணம் உண்டு, ஏனென்றால் அறுபதுகளிலும், எழுபதுகளிலும் பிறந்தவர்களுக்கு இலகுவாக பள்ளிக்கூடம் செல்வதற்கு காரணமாக இருந்தவரே கல்விக்கண் கொடுத்த காமராஜர்தான்.

ராஜாஜி கொண்டு வந்திருந்த 'குலக்கல்வித் திட்டத்'தினைக் கைவிட்டதும், அவர் காலத்தில் நிதிநிலையைக் காரணம் காட்டி மூடப்பட்டிருந்த 6000 பள்ளிகளைத் திறந்ததும், மேற்கொண்டு 12000 புதிய பள்ளிகளைத் தோற்றுவித்ததும் காமராஜரின் தலைசிறந்த பணிகளாகும். அவரது ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆனது. அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாக பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்ந்தது. (வெள்ளையர் காலத்தில் இது 7 சதவீதமாக இருந்தது)

தி.மு.க வை சேர்ந்த இளைஞர் சீனிவாசனிடம் தோல்வியுற்றார் காமராஜர்.அப்பொழுது தி.மு.க வினர் "படிக்காத காமராஜரை படித்த சீனிவாசன் வெற்றி பெற்றார்" என சுவரொட்டிகள் ஒட்டி தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர்.அதற்கு பதிலடியாக ஒரு சுவரொட்டி அதே பகுதிகளில் ஜொலித்து சிந்திக்கவும் வைத்தது...அது "படிக்காத காமராஜர் கட்டிய பள்ளியில் படித்த சீனிவாசன் வெற்றி பெற்றார் அதற்கு வாழ்த்துக்கள்" என்று....அந்த சுவரொட்டியை ஒட்டியது அய்யா தந்தை பெரியார்.அந்தளவு காமராஜரை தாங்கி பிடித்தார் அய்யா பெரியார்.சொந்தமாய் கல்வி நிலையம் தொடங்கி கோடிகளை சுரண்டவோ, நிலம் புலங்களை வாங்கி சொத்து சேர்க்கவோ அல்ல... மக்களுக்கு உண்மையாக சேவை செய்வதற்காக...ஆனால் இப்பொழுதோ கல்வியின் நிலையை கல்விக்கடவுள் சரஸ்வதியால் கூட காப்பாற்ற முடியாத சூழ்நிலை இங்கே உருவாக்கி விட்டது.

“வெள்ளத்தால் அழியாது, வெந்தணலால் வேகாது'' என்பது கல்வியின் சிறப்பு. ஆனால் இன்று கல்வி, வணிகம் என்ற வெந்தணலில் வெந்து கொண்டிருக்கின்றது. கோடி கோடியாய்க் குவிந்து கிடக்கும் பணத்தாள்களை, அதாவது கறுப்பை வெள்ளையாக்க, பண முதலைகள் பயன்படுத்திக் கொண்ட உத்திதான், “கல்வி நிலையம்''. மழலைப் பள்ளி, தொடக்கப்பள்ளி, மெட்ரிக் என்னும் நுழைமுகப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, கல்லூரி என்று காடும் மேடும் கட்டடம் எழுப்பிக் கல்வி வணிகம் தொடங்கி விடுகின்றனர். ஆயிரம் இறைத்தால் ஆசிரியக் கூட்டம் மளமளவென்று வரிசையில் நிற்கின்றது. கறுப்பை எல்லாம் வெள்ளையாய் மாற்றுவதற்கும், கணக்கு வழக்கின்றிக் காசைக் குவிப்பதற்கும் நல்வழியாக இது அமைந்து வருகின்றது. கல்வி வள்ளல் என்னும் புகழ்மொழியோடு வெள்ளுடை பூண்டு வீதியில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். உலக நாடுகளின்மீது ஆதிக்கம் செலுத்தியும் சுரண்டிக் கொள்ளையடித்தும் வல்லரசாகத் திகழ்ந்துவரும் அமெரிக்காவில்கூடத் தனியாரிடம் இருபத்திரண்டு விழுக்காடு கல்வி நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், இந்தியாவில் தொண்ணூற்று ஆறு விழுக்காடு கல்வி நிறுவனங்கள் தனியாரிடம் உள்ளன.

கல்வியை வணிக மயமாக்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பெறுகிறது. இன்று தமிழ்நாட்டில் ஆங்கில வழிப் பள்ளிக் குழந்தைகளின் அடிப்படைக் கல்வியில் வழங்கப் படும் தொகை, ஒருவரது மேல்நிலை மற்றும் கல்லூரிகளில் வழங்கப்படும் தொகைக்கு இணையாக உள்ளது. அரசுப் பள்ளிகளில் போதிய இடவசதியும், ஆசிரியர்களின் பற்றாக் குறையும், கல்லூரிகளில் அனைத்துப் பாடப் பிரிவும் ஆங்கிலத்தில் உள்ளதும், அடிப்படையிலேயே குழந்தைகள் ஆங்கிலவழிக் கல்வியில் சேர்க்கப்படுகின்றனர்.

இந்தியாவில் சிறந்த கல்லூரிகள் தமிழகத்தில் இருப்பதால் தமிழகத்தின் கல்வித் தரத்தை அடிப்படையாகக் கொண்டு வட மாநிலத்தவர்கள் பலர் உயர்கல்வி பெற இங்கு வந்து கல்வி கற்பது வழக்கமாகிவிட்டது. இவ்வாறு தேர்வு செய்யப்படும் கல்வி நிறுவனங்கள் பல அரசின் நிதி உதவியுடன் இயங்கிவரும் கல்வி நிறுவனங்கள் என்பதும் கடந்த பல ஆண்டுகளாக நல்ல நிர்வாகத்தை அடிப்படையாகக் கொண்டு உயர் கல்வியை ஒரு சமூகத் தொண்டாகக் கொண்டு இயங்கி வருவதும் கல்வியாளர்கள் முதல் பொதுமக்களும் அறிந்ததே.

இவ்வாறு சிறப்புடன் இயங்கும் அரசின் உதவி பெறும் தொழில் நுட்பக் கல்லூரிகளைத் தனியார் பல்கலைக் கழகங்களாக உருவாக்க மாநில அரசின் உயர்கல்வித்துறை முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்த உயர்கல்வி நிகழ்வுகள் ஒருபுறம் இருக்க, இப்போது செயல்படும் பல தனியார் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் இடஒதுக்கீட்டிற்கு எதிராகவும், ஏழை, எளிய மக்களுக்கு எதிராகவும் கல்வியை ஒரு சமூகத் தொண்டாகக் கருதாமல் வணிகமாகக் கருதும் நிலையே உள்ளது. இப்போது தமிழ்நாட்டின் இரண்டு புகழ்பெற்ற பொறியியல் கல்லூரிகள் பல்லாண்டுகளாக உயர்கல்விக்குத் தொண்டு செய்துவரும் நிலையில், தனியார் பல்கலைக் கழகங்களாக உருமாறும் போதும், நடுவண் மற்றும் மாநில அரசுகளின் நிதி உதவிகளுடன் கட்டமைப்பு வசதிகளைப் பெற்று, அங்குப் பணிபுரியும் ஆசிரியர்கள், படிக்கின்ற மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குரியதாகிறது.

இங்கு படிக்கும் மாணவர்களின் கல்விக் கட்டணம் உயர்த்தப்படும் நிலையும், ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வியை நடுவில் இழக்கும் நிலையும் ஏற்படலாம். இப்போது இங்குப் பணி புரியும் பேராசிரியர்களின் நிலை, அவர்களின் வாழ்வுரிமைகள் பற்றி பல்வேறு வினாக்கள் எழுகின்றன. தமிழகத்தின் பல பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் நடத்தப்படும் பல அரசு உதவிபெறும் கல்லூரிகள் “தனியார் கல்வி நிறுவனங்களாக'' உருமாறும் போது, ஏழை எளிய மக்களுக்கு உயர்கல்வி எட்டாக் கனியாகும் நிலை ஏற்பட்டுவிடும். இடஒதுக்கீடும் கிடைக்காமல் போகும். உயர்கல்விச் சாலைகளில் அடியெடுத்து வைக்காத நிலையில் பல இலட்சம் தமிழ்க் குடும்பங்கள் உள்ள நிலையில் நடுவண் மற்றும் மாநில அரசுகளின் உயர்கல்விக் கொள்கையில் தகுந்த மாற்றம் செய்யவேண்டும்.

சாராயக் கடைகளையும், மணல் வணிகத்தையும் அரசே ஏற்று நடத்தும்போது, கல்வியையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். இடஒதுக்கீட்டை நீர்த்துப்போகச் செய்யக் கூடாது. குழந்தைகள் தங்களது சுய ஆர்வத்தைத் தாங்களே அறிந்து கொள்ளும் விதத்தில் கல்வி முறை இருக்கவேண்டும். அறிவியல் அறிஞர்களை உருவாக்கும் வகையில் செய் முறையுடன் கல்வி அமல்படுத்துவதே காலத்தின் கட்டாயம். இக்கல்விச் சீர்திருத்தங்களுக்காகக் குரல் எழுப்பும் சமூக ஆர்வலர்களின் கருத்துகளின்மீது அக்கறை செலுத்துவது, அரசின் கடமையாகும்.

Friday, June 22, 2012

ஆனந்த விகடனில் என்னுடைய வலைப்பதிவு...

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் என்னுடைய வலைப்பதிவு இந்த வாரம் ஆனந்த விகடனில் பிரசுரமாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.....


Wednesday, May 30, 2012

இந்தியாவில் சரக்கு தோன்றிய வரலாறு




வாஸ்கோடகாமா, 1498 மே மாதம் கள்ளிக்கோட்டை மன்னர் சமோரினை சந்தித்தபோது, போர்ச்சுக்கீசிய மதுச்சந்தையை இந்தியாவுக்குக் கொண்டுவர வாய்ப்பு இல்லையே என்று கவலைப்பட்டார். காரணம், அப்போது இந்தியாவில் குடிப்பழக்கம் மிக, மிக அரிதாகவே இருந்தது. குறிப்பாக, மொகலாய மன்னர்கள் உண்மையான முசல்மான்களாக இருந்து, மதுவை 'ஹராம்’ செய்து இருந்தார்கள். சுமார் 200 ஆண்டுகளுக்குப் பின்னர் மன்னர் ஜஹாங்கீர் ஆட்சியில்தான் போர்ச்சுக்கீசிய, பிரெஞ்சு நாட்டு மதுபானச் சந்தைக்கு இந்தியாவின் கதவுகள் அகலத் திறந்தன. மன்னர் ஜஹாங்கீர் விதவிதமான மது பானங்களைச் சுவைப்பதிலும் மது சுவைப்பவர்களை ஊக்குவிப்பதிலும் ஆர்வமாக இருந்தார். ஆட்சியை வழிநடத்தும் ஒரு மன்னரால் அப்போது தொடங்கி சந்தைப்படுத்தப்பட்ட மது கலாசாரம், இன்று தமிழகத்தில் அரசே மதுபானங்களை கூவிக்கூவி விற்கும் நிலைக்குக் கொண்டுவந்து, ஏழை மற்றும் நடுத்தர மக்களை நடுத்தெருவில் நிறுத்தி உள்ளது. 'குடி உயர கோன் உயரும்’ என்ற அவ்வை வாக்கை தப்பாய் புரிந்துகொண்டால் இப்படித்தான்!


இன்று உலகிலேயே மிக அதிகமாக மது குடிப்பவர்கள் இந்தியர்கள். மதுவால் ஏற்படும் சமூகப் பிரச்னையால் இந்தியா மிகப்பெரிய அழிவை நோக்கிச் செல்கிறது. அணு, மொத்தமாக அழிக்கும் என்றால், மது கொஞ்சம் கொஞ்சமாக. வீட்டுக்கு ஒரு குடிகாரர் என்பதுதான் அரசாங்கத்தின் குறைந்தபட்ச இலக்கு. வரும் ஆண்டுகளில் இது அதிகரிக்கும் என்றுஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். அதிகாரிகள் கோடிகளில் டார்கெட் நிர்ணயித்துக் காத்து இருக்கிறார்கள்.


கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் மதுக் கடைகள், மதுக் கேளிக்கை விடுதிகளின் எண்ணிக்கை சராசரியாக ஆறு முதல் எட்டு சதவிகிதம் வரை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. 1952-ம் ஆண்டில், மது அருந்தத் தொடங்கும் இந்தியரின் சராசரி வயது 19. இன்று அது 13. பன்னாட்டு மது நிறுவனங்களின் மிகப்பெரிய 'ஹப்’பாக மாறிவிட்டது இந்தியா. மாறாக, மேற்கத்திய நாடுகளில் குடிப்பழக்கம் குறைந்து வருகிறது - பிரபல இன்டர்நேஷனல் மருத்துவ பத்திரிகையான லேண்ட்செட் சமீபத்தில் வெளியிட்ட தகவல் இது!


தமிழகத்திலோ, நிலைமை மிக மிக மிக மோசம். ஏழு கோடி மக்களில் சுமார் ஒரு கோடிப் பேர் குடிக்​கிறார்கள். சுமார் 49 லட்சம் பேர் தினமும் குடிக்கும் மது அடிமைகள். இதில் 13 வயது சிறுவர்களும் அடக்கம்.


ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையில் மது தயாரிக்கப்படுகிறது. ரஷ்யாவின் ஓட்கா உருளைக் கிழங்கிலும், சீனாவின் மவுத்தாய் - ஜப்பானின் சாக்கே ஆகியவை அரிசியிலும், ஸ்காட்லாந்தின் ஸ்காட்ச் கோதுமை மற்றும் மக்காச்சோளத்திலும், ஃபிரான்ஸின் ஷாம்பெயின் திராட்சையிலும், கோவாவின் பென்னி முந்திரியில் இருந்தும் தயாராகிறது. இதுதவிர அரபு நாடுகளில் பேரீச்சம் பழத்திலும், இலங்கை, ஃபிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் தென்னை, பனையின் பொருட்களில் இருந்தும் மது தயாரிக்கப்படுகிறது. கரும்பு ஆலையில் இருந்து வெளியேறும் கழிவான மொலாசஸில் இருந்து மதுவைத் தயாரிப்பது தமிழ்நாடு மட்டுமே!


இன்றும் நம் சகோதரர்கள் ஓட்டையும், வீட்டையும் ஒரு சரக்கு பாட்டிலுக்காக விற்கின்ற அவலங்களை அன்றாடம் தினசரியில் படித்துக்கொண்டிருக்கிறோம். இப்பொழுது மாணவர்களின் சந்திப்பே பிரபலமான பார்களில் தான். உன் நண்பனை பற்றி சொல் உன்னைப் பற்றி சொல்கிறேன் என்ற பழமொழிக்கே வேலை இல்லாமல் போய்விட்டது இந்த டாஸ்மாக் வந்ததில் இருந்து...அப்துல் கலாமின் 20 - 20 கனவு டாஸ்மாக் பாரில் தான் நனவாகிக் கொண்டிருக்கிறது இன்றைய இளைங்கர்களால்.

அதுசரி, 'தினைக் கள் உண்ட தெளிதோல் மறவர்’ வழி....

Tuesday, May 29, 2012

ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கிக் கணக்கு!!!!!!

சுவிட்சர்லாந்து மாத இதழ் Schweizer Illustriertein - இதழின் நவம்பர் 1991 மாத பதிப்பின் ஒரு பக்கம். அப்பக்கத்தில் சுவிஸ் வங்கியில் 1991-ம் ஆண்டு வரை அதிக வைப்பு பணம் வைத்திருப்பவர்களை பட்டியல் இட்டு இருக்கிறது. இதில் நம் நாட்டு ராஜீவ் காந்தியும் இடம் பெற்று இருக்கிறார்.ராஜீவ் காந்தியின் படத்தின் கீழ் என்ன எழுது இருக்கிறார்கள் தெரியுமா??





Raajiv Gandhi, Indian , Holds 2.5 Billion Swiss Francs (அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 13,200 கோடி (1991ம் ஆண்டு))ஆனால் இன்று வரை காங்கிரஸ் கட்சியினர் இதனைப் பற்றி மூச்சு விடவில்லை.இவரைத் தான் Mr.Clean-க நம் முன் நிறுத்தப்படுகிறார் ... இவரின் குடும்பத்தினர் தான் இன்றும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து நம்மை ஆளுகின்றனர்... இவரின் பிறந்த நாளின் போது நம் வரிப் பணத்தில் இவரின் புகழை பரப்புகின்றனர்....

இவர்களா கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவரப் போகிறார்கள்.

Monday, May 28, 2012

காந்திஜி கொல்லப்பட்ட வழக்கில் கோட்சேயின் வாக்குமூலம்

காந்தி கொலை செய்யப்பட்டதற்கு முழுக்க முழுக்க நானே பொறுப்பு. வீரசவர்க்கார் உள்பட வேறு எவருக்கும் தொடர்பு இல்லை" என்று கோட்சே கூறினான். டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் கோட்சே தொடர்ந்து வாக்குமூலம் அளித்தான். வாக்கு மூலத்தின் பின்பகுதி வருமாறு:-



ஜின்னாவின் இரும்புப்பிடி, எக்கு உள்ளத்தின் முன் காந்திஜியின் ஆத்ம சக்தி, அகிம்சைக் கொள்கை அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டன. ஜின்னாவிடம் தம் கொள்கை ஒருக்காலும் வெற்றி பெறாது என்று தெரிந்திருந்தும் அவர் கொள்கையை மாற்றிக் கொள்ளாமலேயே இருந்தார்.தம் தோல்வியையும் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. மற்ற மேதைகள் ஜின்னாவுடன் பேசி அவரை முறியடிக்கவும் வழிவிடவில்லை. இமயமலைப் போன்ற பெரிய தவறுகளைச் செய்த வண்ணம் இருந்தார். நாட்டைப் பிளந்து துண்டு துண்டாக்கியவரைத் "தெய்வம்" என மற்றவர் மதித்தாலும் என் உள்ளம் ஏனோ அவ்வாறு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, அவர் மீது கோபம்தான் வருகிறது.


காந்தியைக் கொன்றால் என் உயிரும் போய்விடும் என்பதை அறிவேன். சிறிதும் சந்தேகம் இல்லாமல் என் எதிர்காலம் பாழாய்ப்போவது உறுதி. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலிருந்தும் அட்டூழியத்திலிருந்தும் இந்தியா விடுதலையடையும் என்பது என்னவோ உறுதியாகும். மக்கள் என்னை "முட்டாள்" என்று அழைக்கலாம். அறிவில்லாமல் அண்ணல் காந்தியடிகளைக் கொன்றதாகக் கூறலாம். நம் இந்தியா ஒரு பலமுள்ள நாடாகவும், சுதந்திர நாடாகவும் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம். நம் நாடு வல்லரசாகத் திகழவேண்டுமானால், காந்தியடிகளின் கொள்கையை நாம் கைவிடவேண்டும். அவர் உயிரோடிருந்தால் நாம் அவர் கொள்கைகளிலிருந்து மாறுபட்டுச் செயல்பட முடியாது. நான் இந்த விஷயத்தை நன்கு அலசி ஆராய்ந்த பிறகே அவரைக் கொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஆனால் நான் அதுபற்றி யாரிடமும் பேசவில்லை. எந்த வகையான யோசனையையும் எவரும் சொல்லவில்லை.


பிர்லா மாளிகையில் பிரார்த்தனை மைதானத்தில் 30_1_1948_ல் மகாத்மா காந்தியைச் சுட என் இரு கைகளுக்கும் வலிமையை நான் வரவழைத்துக்கொண்டேன். இனி நான் எதையும் சொல்வதற்கில்லை. நாட்டின் நலனிற்காகத் தியாகம் செய்வது பாவம் எனக் கருதினால் நான் பாவம் செய்தவனாவேன். அது கவுரவம் என்றால் அந்த கவுரவம் எனக்கு வரட்டும். நேதாஜி விடுதலைப்போரில், வன்முறையை ஆதரிப்பவர்களை மட்டும் காந்திஜி எதிர்த்தார் என்பதில்லை. அவருடைய அரசியல் கருத்துக்கு எதிரான கருத்துக்கள் உடையவர்களையும் வெறுத்தார். அவருடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீது அவருக்கு இருந்த வெறுப்புக்கு சுபாஷ் சந்திரபோஸ் ஓர் எடுத்துக்காட்டு. காங்கிரசில் இருந்து சுபாஷ் சந்திரபோஸ் தூக்கி எறியப்படும் வரை, காந்திஜியின் வன்மம் முற்றிலும் அகலவில்லை.


சுபாஷ் சந்திரபோஸ் 6 ஆண்டுகள் நாடு கடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டதை எதிர்த்து எனக்குத் தெரிந்தவரை காந்திஜி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. மற்ற எந்த தலைவர்களையும் விட நேதாஜியை மக்கள் விரும்பினர். 1945_ல் ஜப்பானியர் தோல்விக்குப்பிறகு சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்குள் நுழைந்திருந்தால், இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக அவரை வரவேற்று இருப்பார்கள். ஆனால் காந்தியின் அதிர்ஷ்டம் சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்கு வெளியில் இறந்துவிட்டார். முஸ்லிம்கள் மீது காந்திஜி அதிகமான மோகத்தை வளர்த்துக்கொண்டார். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக ஓடிவந்த இந்துக்கள் மீது இரக்கப்பட்டு ஆறுதலாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மனிதாபிமானம் பற்றி அவருக்கு ஒரு கண்தான் இருந்தது. அது முஸ்லிம் மனிதாபிமானம். காந்திஜிக்கும், எனக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எவ்வித பகையும் இருந்தது இல்லை. காந்திஜி மீது நான் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளக் காரணம், நம் நாட்டின் மீது நான் கொண்டிருந்த பக்திதானே தவிர வேறு ஒன்றும் இல்லை. பாகிஸ்தான் நிறுவப்பட்ட பிறகாவது, பாகிஸ்தானில் வாழும் இந்துக்களின் நலனைக்காக்க இந்த காந்தீய அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால், என் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால், விடியும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியைக் கொண்டு வந்தது.


15 ஆயிரம் சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அந்த இந்துப்பெண்கள் சந்தைகளில் ஆடு_மாடுகள் விற்கப்படுவதுபோல விற்கப்பட்டனர். இதனால் இந்துக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவை நோக்கி ஓடிவந்தனர். இந்தியாவை நோக்கி வந்த இந்திய அகதிகள் கூட்டம், நாற்பது மைல் நீளத்துக்கு இருந்தது. இந்தக் கொடிய நிகழ்ச்சிக்கு எதிராக இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? அவர்களுக்கு விமானத்தில் இருந்து ரொட்டித் துண்டுகள் போடப்பட்டன. அவ்வளவுதான். "தேசத்தந்தை" என்று காந்தி அழைக்கப்படுகிறார். அது உண்மையானால் அவர் ஒரு தந்தைக்குரிய கடமையிலிருந்து தவறிவிட்டார். பிரிவினைக்கு (பாகிஸ்தான் அமைப்புக்கு) சம்மதம் தெரிவித்ததன் மூலம் இந்த தேசத்துக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்.


பிரிவினைக்கு காந்திஜி சம்மதித்ததால் அவர் இந்தியாவின் தேசத்தந்தை அல்ல; பாகிஸ்தானின் தேசத்தந்தை என்று நிரூபித்து விட்டார். பாகிஸ்தான் பிரிவினைக்கு நாம் இணங்கியிருக்காவிட்டால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது என்று சிலர் கூறுவது தவறான கருத்து. தலைவர்கள் எடுத்த தவறான முடிவுக்கு அது வெறும் சாக்குப்போக்காகவே எனக்குத் தோன்றுகிறது. 1947 ஆகஸ்டு 15_ந்தேதி பாகிஸ்தான் சுதந்திர நாடானது எப்படி? பஞ்சாப், வங்காளம், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து முதலிய பகுதி மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் எந்த மதிப்பும் தராமல் பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரிக்கக்கூடாத பாரதம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியில் மதவாத அரசு நிறுவப்பட்டது. முஸ்லிம்கள் தங்கள் தேச விரோத செயல்களுக்கு வெற்றிக்கனியை பாகிஸ்தான் வடிவில் பெற்றனர். பட்டப்பகலில் சுமார் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்திஜியை நான் சுட்டேன். அது உண்மை.


சுட்ட பிறகு ஓடுவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. தப்பி ஓடும் எண்ணமும் எனக்கு இல்லை. என்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயலவில்லை. கொலை பற்றி நீதிமன்றத்தில் என் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்கவே விரும்பினேன். மரியாதைக்குரிய நீதிமன்றம் எனக்கு எந்த தண்டனையையும் விதிக்குமாறு கட்டளையிடலாம். என் மீது கருணை காட்டவேண்டும் என்றும் நான் கேட்கவில்லை.


பிறர் என் சார்பாக கருணை வேண்டுவதையும் நான் விரும்பவில்லை. `கொலைக்கு நானே பொறுப்பு' என்னோடு பலர் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். கொலைக்கு சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான் முன்பே கூறியபடி என் செயலுக்கு கூட்டாளிகள் யாரும் கிடையாது. என் செயலுக்கு நானே முழுப்பொறுப்பு. அவர்களை என்னோடு குற்றம் சாட்டி இருக்காவிட்டால் எனக்காக எந்த எதிர்வாதமும் செய்திருக்கமாட்டேன். வீரசவர்க்காரின் தூண்டுதலில் நான் செயல்பட்டேன் என்று கூறுவதை நான் ஆணித்தரமாக மறுக்கிறேன். அது என் அறிவுத்திறனுக்கு ஏற்படுத்தும் அவமதிப்பாகக் கருதுகிறேன்.


1948 ஜனவரி 17_ந்தேதி சவர்க்காரை பார்த்தோம் என்றும் அவர் "வெற்றியோடு திரும்புங்கள்" என்றும் வாழ்த்தி வழியனுப்பினார் என்று கூறுவதையும் மறுக்கிறேன். இந்து மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன் என்ற மன நிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது. மானிட வர்க்கத்தின் நலனுக்காகவே இந்தச் செயலை செய்தேன். இந்தச் செயல் முற்றிலும் இந்து தர்மத்தையும், பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதுதான். நம் நாடு "இந்துஸ்தான்" என்ற பெயரில் இனி அழைக்கப்படட்டும். இந்தியா மீண்டும் ஒரே நாடாக வேண்டும். இந்திய வரலாற்றை எவ்வித பாரபட்சமும் இன்றி நேர்மையாக எழுதக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்காலத்தில் உருவானால், அவர்கள் என் செயலை மிகச்சரியாக ஆராய்ந்து, அதிலுள்ள உண்மையை உணர்ந்து, உலகறியச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது." இவ்வாறு கோட்சே கூறினான்.

Saturday, May 12, 2012

ஐடி துறையில் பணிபுரிவோர்களுக்கு சுகி.சிவம் கூறும் அறிவுரை

நீங்கள் கூடுதல் புத்திசாலிகள்- கெட்டிக்காரர்கள். எந்த ஒரு விஷயத்தையும் பளிச்சென்று பிடித்துக் கொள்ளும் கூர்மதி உங்களுடை யது. வெற்றி என்பது உங்களுக்கு ஒரு விளையாட்டுப் பொருள். வாழ்க!பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல! உங்களின் பெற்றோர் தங்களது பணிக் காலத்தின் இறுதியில் வாங்கும் ஊதியத் தொகையை, நீங்கள் முதல் மாதமே வாங்கி விடலாம். அதற்காக, அவர்களை விடவும் நீங்கள் அதிபுத்திசாலி என்றோ, திறமையாளர் என்றோ, பெரிய மனிதராகவோ எண்ண வேண்டாம்.உறவினர்களை அற்ப ஜந்துக்கள் போல நினைக்க வேண்டாம். தம்பி- தங்கைகளைப் படிக்க வைக்க நிறைய செலவு செய்யுங்கள். குடும்பத்தின் பந்த- பாசத்தை, இணைய தளத்தில் டௌன் லோட் செய்ய முடியாது! வெளிநாட்டுப் பணம் வரலாம்... வெளிநாட்டுப் பண்பாடு வரலாமா? பிற மனிதர்கள் எல்லோருமே நாம் பயன்படுத்திக் கொள்ள மட்டும் அல்ல!


பத்து ரூபாய் கூடுதல் சம்பளம் என்றதும் கம்பெனியைக் கைகழுவுவது கொஞ்ச காலம் பெருமையாகத் தெரியலாம். ஆனால், ஒரு நாள்... இந்தத் துறையின் செயல்பாடே இதனால் ஸ்தம்பிக்க வாய்ப்பிருக்கிறது.உணவு, உறக்கம், ஓய்வு, காலா காலத்தில் இல்லாதபடி உடம்பை- மன தைச் சீர்குலைத்தால், 40 வயதுக்குப் பிறகு உயிர் வாழ்வதே பிரச்னை யாகி விடும். யோசியுங்கள்!!!!!எப்போதும் ஏ.ஸி-யில் இருப்பதால், உங்களுக்கு வியர்வையே வருவதில்லை. அது, உடலுக்குக் கெடுதல். உடலை வியர்க்க விடுங்கள். தண்ணீர்த் தாகம் எடுக்காத போதும் நீர் அருந்துங்கள். கண்ட கண்ட குளிர்பானங்கள் குடிப்பதை விட்டு விட்டு, எலுமிச்சை, ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை சாறு அருந்துங்கள். பார்லியும் சேர்த்துக் கொள்ளுங்கள். தினந்தோறும் நிகழ வேண்டிய காலைக் கடனை முடிக்க மாத்திரைகள் சாப்பிடுவதும் நல்லதல்ல. கண்களிலும் கவனம் வையுங்கள்.


உட்கார்ந்தே இருப்பதால் எடை கூடும்; சர்க்கரை அதிகரிக்கும். கொலஸ்ட்ராலும் பழுத்துக் கிடக்கும். மூளைக்கு வேலை என்பதால் ரத்த அழுத்தமும், சக்கைப் போடு போடும். எல்லாவற்றையும் எதிர்பார்த்து வெற்றி கொள்ளுங்கள்.காதலிக்கும்போது அல்லது திருமணத்துக்குப் பெண் தேடும் போது... சம்பளம், வேலைவாய்ப்பு, செலவழிக்கும் இயல்பு போன்றவற்றை இரண்டாம்பட்சமாக வைத்துக் கொண்டு, ஒழுக்கம், குணம், பண்பாடான குடும்பம் ஆகிய விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.'இன்று போலவே என்றும் சம்பளம் வரும்' என்று கனவு காணாதீர்கள். சிக்கனமாக செலவழிக்கப் பழகுங்கள். உங்களால் அதிகம் செலவழிக்க முடியும் என்பதற்காக, சிரமப்பட்டு சம்பாதிப்பவர்களது மனம் புண்படும்படி ஜம்பம் அடிக்காதீர்கள். அந்நிய நாட்டின் தயவில் அதிகம் சம்பாதிப்பவர்களாகிய பலரும் இந்த நாட்டு வெற்றிக்கு உழைப்பவரை இளக்காரமாக நினைக்காதீர்கள்.


வெளிநாடுகளில் வேலை பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பும் போது, ஓட்டல்களில் தங்கிக் கொண்டு... உறவினர்களை- அம்மா- அப்பாவை, ''என்னால் வர முடியாது. இங்கு வந்து பார்... ஆட்டோவுக்கு வேண்டு மானால் காசு தருகிறேன்!'' என்று கூறி அசிங்கப்படுத்தாதீர்கள். பணத்தை விட ரத்தம் கனமானது.வெளிநாடுகளில் பிறந்து வளரும் குழந்தைகளுக்கு எதிர்ப்புச் சக்தி குறைவு என்பது உண்மைதான். என்றாலும் சிறிது நேரமாவது தாத்தா- பாட்டி... அதாவது உங்களின் பெற்றோர், உங்கள் பிள்ளையைக் கொஞ்சு வதற்கு- உணவு ஊட்டுவதற்கு அனுமதி கொடுங்கள்.


உங்களை காயப்படுத்துவதாக இந்த பதில் அமைந்தால், என்னை மன்னியுங்கள்! உங்களை நோகடிப்பது எனது நோக்கம் அல்ல. இவை யாவும், உங்களைப் போன்றோரின் பெற்றோர்கள், உங்களிடம் சொல்ல முடியாமல் என்னிடம் புலம்பிய புலம்பல்கள். நான் வெறும் தபால்காரன்... அவ்வளவே! நமக்கு வரும் எந்த நோட்டீஸூக்கும் தபால்காரனை நோக முடியாது.

Wednesday, May 9, 2012

இனி இல்லை பி.எஃப் தொல்லை! வருகிறது பி.எஃப். நிரந்தர எண்...!

செல்போன் எண்ணை மாற்றாமல் சேவை நிறுவனத்தை மாற்றும் வசதியை கொண்டு வந்து, செல்போன் சந்தாதாரர்களின் அமோக வரவேற்பை பெற்றது மத்திய அரசு. அதே மாதிரி, விரைவில் பிராவிடெண்ட் ஃபண்ட் சந்தாதாரர்களுக்கும் நிரந்தர எண்ணை கொடுக்கும் முயற்சியில் களமிறங்கி இருக்கிறது.


தற்போது ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்துக்கு வேலை மாறும் போது பி.எஃப். கணக்கு எண் மாறிவிடுகிறது. மேலும் பழைய கணக்கிலிருந்து புதிய கணக்கு தொகையை மாற்றுவது சற்று சிரமமாக, பெரிய நடைமுறையாக ( சில நேரங்கில் பெரும் தொல்லையாகக் கூட ) இருக்கிறது. இதற்கு பயந்தே பலரும் பழைய நிறுவன கணக்கில் இருக்கும் பி.எஃப். பணத்தை எடுத்துவிடுகிறார்கள். ஓய்வூதியத்துக்காக சேர்க்கும் தொகை இவ்வாறு எடுப்பதால், இடையில் செலவாகிவிடுகிறது. இதனால், பலர் ஓய்வு பெறும் போது மிகக் குறைவான பி.எஃப் தொகையையே பெறுகிறார்கள்.


இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்பட இருக்கிறது. வேலையில் சேரும் ஒருவருக்கு பணி ஓய்வு வரைக்கும் நிரந்தர பி.எஃப். எண்ணை வழங்கும் முயற்சியில் பிராவிடெண்ட் ஃபண்ட் அமைப்பு இறங்கி இருக்கிறது.


மொத்தமுள்ள 4.8 கோடி பி.எஃப். உறுப்பினர்களுக்கு பிரத்யேக தனி எண் கொடுப்பது என்பது சற்று கடினம்தான். அந்த வகையில் தற்போதுள்ள பி.எஃப். எண், ஆதார் எண் (தேசிய அடையாள அட்டை எண்), பான் எண் (வருமான வரித் துறை எண்) இவற்றில் ஏதாவது ஒரு எண்ணை ஒருவருக்கு தற்காலிக பி.எஃப். எண் ஆக இருக்கும். உதாரணத்துக்கு பான் எண் மூலமும் பி.எஃப். விவரத்தை தெரிந்துக் கொள்ள முடியும் என்பது போல் கொண்டு வரப்படும்.


படிப்படியாக ஏதாவது ஒரு எண் பி.எஃப். நிரந்தர எண்ணாக மாற்றப்படும். பி.எஃப். கணக்கில் மொத்தம் 3 லட்சம் கோடி ரூபாய் நிர்வகிக்கப்படுகிறது. ஆண்டுக்கு புதிதாக சுமார் 30,000 கோடி ரூபாய் சேர்கிறது.பி.எஃப். நிரந்தர கணக்கு வந்தால், பணி ஓய்வூக்காலத்தில் கோடிக் கணக்கான பேர் கைநிறைய பணத்துடனும், மனம் நிறைய நிம்மதியுடனும் வீட்டுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கலாம்...!

Thursday, April 19, 2012

பி. எஃப். கணக்கு இருப்பு: ஆன் லைனில் பார்க்கலாம்

நீண்ட நாட்களாக வருங்கால சேமநல நிதி (பிராவிடெண்ட் ஃபண்ட் - PF ) கணக்குதாரர்கள் எதிர்பார்த்த ஒரு விஷயம் நடந்திருக்கிறது.அதாவது, பி.எஃப். கணக்குதாரர்கள் அவர்கள் கணக்கில் இருக்கும் இருப்பு தொகையை இணையதளத்திலேயே (ஆன்லைன்) பார்க்க முடியும்.இதற்கு கீழே உள்ள பி.எஃப். அமைப்பின் இணையதள இணைப்பை கிளிக் செய்யவும்.
http://epfoservices.in/epfo/member_balance/member_balance_office_select.php

அப்போது கம்ஃப்யூட்டர் ஸ்கிரீனில் ஒரு பக்கம் தோன்றும்.
அதன் அடியில் Click Here to know the balance என்கிற பகுதியை சொடுக்கினால், இன்னொரு பக்கம் தோன்றும் அதில் உங்களின் மாநிலம், நகரத்தை தேர்வு செய்ய வேண்டும்அதன் பிறகு உங்கள் நிறுவனத்தின் பி.எஃப். எண் மற்றும் உங்களின் பி.எஃப் மற்றும் உங்களின் பெயர் (பி.எஃப்.கணக்கில் இருப்பது போல்), உங்களின் செல்போன் நம்பர் ஆகியவற்றைக் கொடுத்தால் எஸ்.எம்.எஸ் மூலம் உங்களுக்குத் தகவல் வந்து சேரும்.பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் சுமார் 4 கோடி பேருக்கு இது சந்தோஷமான தகவல்!

Tuesday, March 27, 2012

திருமதி சோனியா காந்தியின் வீட்டில் அடுத்த சமையல்காரர் யாரோ!

RTI சட்டத்தின் மூலம் பெறப்பட்ட ஒரு தகவல்நேற்று பரபரப்பாக வெளியானதும்,அதன் தொடர்புடைய பல விஷயங்கள் நினைவிற்கு வந்தன -
2007ல் ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது திருமதி சோனியா காந்தியின் (personal choice) -சொந்த விருப்பமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர். மாமியார் இந்திரா காந்தி காலத்திலிருந்தே குடும்பத்திற்கு மிகவும் பழக்கப்பட்டவர் – வேண்டியவர் !


அண்மையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலின் போது ஒரு கோடி ரூபாய் பணத்துடன் தேர்தல் கமிஷனால் கையும் களவுமாக பிடிக்கப்பட்ட காங்கிரஸ் எம் எல் ஏ வின் பெருமைமிக்க தாய் !


கடந்த ஜூலை 7ம் தேதி, தன் திருமண ஆண்டு விழாவைக் கொண்டாட 73 உறவினர்களுடன் அரசாங்க செலவில் தனி விமானத்தில் டெல்லியிலிருந்து திருப்பதி சென்று -திரும்பிய பெருமைக்குரியவர் !


இரண்டு உறவினர்கள் பெயரில் 32.93 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, அவை திரும்பக் கொடுக்கப்படாததாலும்,சொந்த அண்ணன் மற்றும் பிற உறவினர்கள் 2 கோடி அளவுக்கு சுருட்டியதாலும்,மஹாராஷ்டிராவில், சொந்த ஊரில் -தன் பெயரில் துவக்கப்பட்ட வங்கியை தானே திவால் ஆக்கி மூட வழி செய்த பெருமைக்குரியவர்!


நடந்து கொண்டிருந்த கொலைவழக்கு ஒன்றில் தலையிட்டு - அதில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டிருந்த அண்ணன் – வழக்கிலிருந்து விடுபட காரணமாக இருந்த பாச மலர் தங்கை !


ராஜஸ்தான் மவுண்ட் அபுவில் உள்ள ஒரு ஆசிரமத்தில், 38 வருடங்களுக்கு முன்னர் இறந்து போன தன் ஆன்மிக குரு பாபா லேக்ராஜ் என்கிற சாமியாரின் ஆவியுடன் பேசியதாகக் கூறி பரபரப்பை உண்டாக்கிய ஆன்மிகவாதி !


மொத்தம் 12 தடவைகளில் – 79 நாட்களில்,சுற்றம் சூழ – அதாவது கணவர், உடன்பிறந்தோர்,பிள்ளைகள், பெண்கள், பேரன்கள், பேத்திகள்,நண்பர்கள் புடைசூழ தனி விமானங்களில்,22 வெளிநாடுகளுக்கு பயணம் செய்துமத்திய அரசுக்கு 205 கோடி செலவு வைத்து ஏர் இந்தியாவுக்கு ரூபாய் 169 கோடியும்,வெளிநாட்டு நட்சத்திர ஓட்டல்களுக்கு மிச்சம்36 கோடி பணத்தையும் வரவு வைத்தவர் !


உலகில் எவ்வளவோ நாடுகள் இருந்தாலும்,5 வருட பதவிக்காலத்தில் இவர் செல்ல முடிந்த நாடுகள் இவை மட்டுமே -
மெக்சிகோ, பிரேசில்,பூடான், வியட்னாம், சிலி,இந்தோனேஷியா, ஸ்பெயின்,போலந்து, ரஷ்யா,இங்கிலாந்து உட்பட யூரோப்பிய நாடுகள்,தஜ்கிஸ்தான், சைப்ரஸ், சீனா,லாவோஸ், கம்போடியா,ஐக்கிய அரபு குடியரசு, சிரியா,மொரிசியஸ், ஆஸ்திரேலியா,தென் கொரியா,ஸ்விட்சர்லாந்து……….. !!!!!!!!!


நல்ல வேளை பதவிக்காலம் முடிய இன்னும் 4 மாதங்கள் இருக்கின்றன. எனவே -அதற்குள் சவுத் ஆப்பிரிக்கா -முழு பரிவாரங்களுடன் தான் செல்வதற்கான திட்டங்கள் முடிவு செய்யப்பட்டு வருகின்றன.விரைவில் கிளம்புவார்கள்.அடுத்த RTI பதிலில் 205 கோடியுடன் அந்தச் செலவையும் ஞாபகமாகச் சேர்த்தாக வேண்டும் !


சென்ற வருடம், ராஜஸ்தானைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர் அமீன்கான் என்பவர் இவரைப் பற்றி கிண்டலாக மறைந்த இந்திரா காந்தி அம்மையாரின் வீட்டில், சம்பளம் வாங்காமல் சமையல் வேலை செய்து (விருந்தினர்களுக்கு டீ, காப்பி தயாரித்து )அவரது அபிமானத்தைப் பெற்றதால்,இவருக்கு இந்த பதவி கிடைத்தது என்று கூறப்பெற்றவர். (பின்னர் அந்த அமைச்சர்,பதவியை இழந்ததும், மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டதும் தனிக்கதை )
சரி - இடுகை முடிவுக்கு வந்து விட்டது.தலைப்புக்கு காரணம் சொல்லியாக வேண்டுமே !


அடுத்த 4 மாதங்களில் ஜனாதிபதி பதவிக்கு தேர்தல் வருகிறது. தகுந்த நபர் தேர்ந்தெடுக்கப் பட்டாக வேண்டுமே ! அதற்காகத் தான் இந்த கேள்வி – “அன்னை”யின் வீட்டில் அடுத்த சமையல்காரர் யாரோ ?

Wednesday, March 7, 2012

எமெர்ஜென்சி

கடந்த நூற்றாண்டில் இந்தியாவின் தலையாயத் தலைவர்களில் மிக முக்கியமானவர்கள் பலர் இருந்தாலும் இந்த கட்டுரையின் நாயகர்கள் இருவர். ஒருவர் பாரத பிரதமராக இருந்த இந்திரா காந்தி. மற்றொருவர் சர்வோதய இயக்கத்தின் தலைவராக இருந்த ஜெயப்ரகாஷ் நாராயண் (ஜே.பி) .முன்னவர் அதிகாரமும் பணபலமும் படைத்தவர். பின்னவரோ அதிகாரத்தின்மீது துளியும் ஆசை வைக்காதவர். இந்த இருவருக்கும் இடையில் புகுந்த வில்லன், பதவி வாரிசாகத் துடித்துக் கொண்டிருந்த சஞ்சய் காந்தி. இந்த கட்டுரையை நான் எழுத காரணம் எமெர்ஜென்சி முடிவுக்கு வந்த மாதம் மார்ச் மாதம் தான்.

சர்வாதிகாரியாகத் தன்னை ஆக்கிக்கொண்ட இந்திரா காந்திக்கும் குடியாட்சி முறையை முழுமையாக ஆதரித்த ஜேபிக்கும் இடையேயான இந்தப் போராட்டம் ஜூன் 1975 ல் தொடங்கியது.மார்ச் 1977 ல் இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்த போது, குடியாட்சி முறை வென்றது. சர்வாதிகாரம் வீழ்த்தப்பட்டது. இந்திய அரசியல் முற்றிலுமாக மாறியது. உலகின் மிகப் பெரிய குடியாட்சி நாடு என்று தற்பெருமை கொள்ளும் இந்த நாட்டில், இந்திரா காந்தியும் அவரது குடும்பமும் கொண்டாடப்படுகிறது. ஆனால் ஜேபியின் பெயர் வரலாற்றில் இருந்து முற்றிலுமாகத் துடைதெறியப்பட்டுவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் நடைபெற்ற, சக்திவாய்ந்த மாபெரும் இளைஞர் இயக்கம் ஒன்றுக்கு ஜேபி தலைமை வகித்தார். இன்றைய இளைஞர்களுக்கோ ஜேபி யார் என்றே தெரியாது!
என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு
என்றார் வள்ளுவர். நன்றி மறப்பதைப் போன்ற பாவம் வேறெதுவும் இல்லை.ஆனால் அதைத்தான் இந்தியாவும் இந்தியர்களும் ஜேபிக்குச் செய்துள்ளனர். இது தொடர்ந்தால் எதிர்காலம் நம்மை நிச்சயம் மன்னிக்காது.

முதலில், நடந்த வரலாற்றின் சிறிய சுருக்கம். ஆகஸ்ட் 8 1942 ல் மகாத்மா காந்தி ஆரம்பித்த ''வெள்ளையனே வெளியேறு" இயக்கம் பிசுபிசுக்கத் தொடங்கியிருந்தது. ஆனால் அந்த ஆண்டு தீபாவளி இரவு அன்று துணிகரமான நிகழ்வு ஒன்று நடந்தது. கடுங்காவல் சிறையான ஹசாரிபாக் சிறையிலிருந்து ஜேபி தப்பித்து வெளியேறினார். பிரிட்டிஷார் அவரை உயிரோடவோ அல்லது பிணமாவோ பிடிக்க, மாபெரும் தேடுதல் வேட்டையை ஆரம்பித்தனர். இந்த நிகழ்விலிருந்து தான் தேசிய இயக்கம் புத்துயிர் பெற்றது. காலனி ஆதிக்கம் வீழ்ந்து, இந்தியா தன் முதல் சுதந்தரத்தை பெற்றது.

இந்த சுதந்திரம் 25 ஜூன் 1975 நள்ளிரவில், வீழ்ந்தது. அன்று இரவு, குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அஹ்மத், ஒரு சில வரிகளில் ஓர் ஆணையை வெளியிட்டார். அரசியல் அமைப்புச் சட்டம், பிரிவு 352 ,உபபிரிவு 1 ,எனக்கு அளித்துள்ள அதிகாரத்தின்படி, இந்தியாவின் குடியரசுத் தலைவராகிய பக்ருதின் அலி அஹ்மத் என்னும் நான் , உள்நாட்டு கலவரங்களால் இந்தியாவின் பாதுகாப்புக்குக் கடுமையான அச்சுறுத்தல் உள்ளது என்பதால், நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்கிறேன்.

நெருக்கடி நிலை அமுலில் இருந்த 20 மாதங்களிலும் தனிமனித சுதந்திரமும் அடிப்படை உரிமைகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன. கொடுமையான அடக்குமுறைக்கு ஆளான மக்கள், பயத்தால் வாய்மூடி மெளனமாக ஆனார்கள். தேசம் முழுவதிலும் கல்வியாளர்கள், வழக்கறின்கர்கள், அலுவலர்கள் எனப் பலரும் சுயமரியாதையை இழந்து,நெருக்கடி நிலை அதிகார வர்க்கத்தினர் கால்களில் விழுந்து அவர்களது புகழைப் பாடினர். கொஞ்சம் குனி என்றால், தரையிலேயே விழுந்தனர் சிவில் சர்வீஸ் அதிகாரிகள்! நெருக்கடி நிலை காலக்கட்டத்தில் குடிமக்களுக்கு உயிர் வாழும் உரிமைகூடக் கிடையாது என்று தீர்ப்பளித்தனர். ஒருசிலரைத் தவிர பெரும்பான்மையான அரசியல்வாதிகள் அனைவரும் ஆண்மை இழந்து, அடிபணிந்தனர். நாடு முழுவதும் இருள் பரவி இருந்தது. உலகின் மிகப் பெரிய குடியாட்சி நாடு கொஞ்சம் கொஞ்சமாகச் சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்திருந்தது.

ஆனால் இவை எல்லாவற்றுக்கும் இடையில், ஒரே ஒருவர், ஒரு தனி மனிதர், வேதனையிலும் விரக்தியிலும் வெந்து கொண்டிருந்தார். முதலில் சண்டிகரில் கைதியாக...அடுத்து மும்பை ஜஸ்லோக் மருத்துவமனையில் ஒரு டயாலிசிஸ் மசினுடன் இணைக்கப்பட்டபடி....பின்னர் பாட்னாவில் ஒரு சாதாரண வீட்டில்...ஆனாலும் எதற்கும் கலங்காத, தலை வணங்காத ஜேபி என்ற மாமனிதர்தான் இந்திராவின் சர்வாதிகாரத்தை எதிர்த்து, இரண்டே வருடங்களுக்குள்ளாக அதைத் தோற்கடித்துக் காட்டினார். இந்தியா இரண்டாவது முறையாகச் சுதந்திரம் பெற்றது. இத்தனையும் நடந்த போது அவரது உடல் படுமோசமாகவும் அவரது உயிர் பிரியும் நிலையிலும் இருந்தது என்பது முக்கியம்.

இத்தகைய தலைவரை இன்று நாம் முழுமையாக மறந்துவிட்டோம். அதே நேரம் நியாயமான, நேர்மையான, சுயநலமற்ற நாட்டுக்காக தியாகம் செய்த ஒரு சிலரை புழுவைப் போலப் பார்த்து அவமரியாதை செய்கிறோம்.அப்படிப்பட்ட ஒருவர்தான் ஜேபி. நாட்டுக்காக அவர் அனைத்தையுமே தியாகம் செய்தார். தன் இளமையை, குடும்பத்தை, ஆரோக்கியத்தை, உயிரையும்... அதன்மூலம் இந்த நாடு சுதந்தரத்தைப் பெற்று. அதை தொடர்ந்து பாதுகாக்க வழிவகை செய்தார்.

Monday, February 20, 2012

தமிழகத்தில் அணு உலைகள் அவசியமா?

கூடங்குளம் அணு உலையை ஆதரிப்பவர்களில் பெரும்பான்மையினரது கருத்து அணு உலையை இயக்கினால் தமிழ்நாட்டிற்கு மின் பற்றாக்குறை நீங்கும் என்பதாகும்.

அணு உலையை ஆதரிப்பவர்களின் கூற்று சரியா? அதாவது தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறை உண்மையா? என்பதே இக்கட்டுரையின் நோக்கம். இதற்கு வேறெங்கும் சான்றுதேடி அலையாமல் நெய்வேலியில் உற்பத்தியாகும் அனல் மின்சாரத்தில் தமிழகத்தின் பங்கு என்னவென்பது தெரிந்தால் உண்மை வெளிச்சத்திற்கு வரும்.

நடுவண் அரசு அனல்மின் நிலையமானாலும் அணு மின்நிலையமானாலும் எந்த மாநிலத்தில் அமைக்கிறதோ அம்மாநிலத்திற்கு உற்பத்தியாகும் மின்சாரத்தில் 30% மட்டும்தான். இதை எளிதாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் தமிழகத்திற்கு கிடைக்கும் மின்சாரம் 30%தான். அப்படியானாலும் மீதம் 70% மின்சாரம் எங்கே? யாருக்கு?

ஆந்திராவிற்கு 19% கர்நாடகத்திற்கு 14% கேரளாவிற்கு 10% புதுச்சேரிக்கு 5%, என்.எல்.சி. நிர்வாகத்திற்கு 7%, நடுவண் மிந்தொகுப்பிற்கு 15% என வழங்கப்படுகிறது. உண்மையில் தமிழர்களின் ஏமாளித்தனத்தால் பறிபோகிறது என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும்.

பாலாற்றின் உரிமையைத் தடுக்கும் ஆந்திராவிற்கும், காவிரியின் உரிமை மீது தடைபோடும் கர்நாடகத்திற்கும், முல்லைப்பெரியாற்றில் மல்லுகட்டும் கேரளத்திற்கும் தமிழ்நாட்டிலிருந்து வருடத்தின் எல்லா நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. காரணம் நெய்வேலி தமிழனுக்குச் சொந்தமில்லை. தில்லிக்குச் சொந்தம்.

தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் 30% மின்சாரம்கூட நமக்கு சும்மா கிடைக்கவில்லை. 1 யூனிட்ட மின்சாரம் ரூ.1.82 கொடுத்துத்தான் நடுவண் அரசிடமிருந்து தமிழக அரசு பெறுகிறது. இதைவிட அதிக விலைக்கு பிற மாநிலங்களுக்கு மின்சாரத்தை விற்று காசு பார்க்கிறது நடுவண் அரசு.

வெட்டியெடுக்கப்படும் நிலக்கரிக்கு ராயல்டி என்ற பெயரில் 1 டன்னுக்கு ரூ.45 மட்டுமே நடுவண் அரசால் தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது. 1 டன் நிலக்கரியை எரித்து அதில் 1 மெகாவாட் அதாவது 1000 யூனிட் மினுற்பத்தி செய்யப்படுகிறது. அப்படியானால் 1820 ரூபாய் லாபமாகப் பெறுகிறது நடுவண் அரசு. (1.82 1000 = 1820).

4 டன் நிலக்கரியை எரிக்கும் போது 1 டன் சாம்பல் கிடைக்கிறது. இந்தச் சாம்பலையும் விற்று காசு பார்க்கிறது என்.எல்.சி. நிர்வாகம். தமிழ்நாட்டில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வங்கிக் கடனுதவியுடன் ஹாலோ பிரிக்ஸ் என்றழைக்கப்படும் நிலக்கரி சாம்பலைக் கொண்டு தயாரிக்கப்படும் கற்களை (செங்கல் போல் வீடு கட்ட பயன்படும்) செய்து பிழைத்து வந்தனர். ஆனால் இன்று நிலக்கரிச் சாம்பல் சிமெண்ட் கம்பெனிகளுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. செயல்படாத நிறுவனம்கூட போலியாக செயல்படுவதாகக்கூறி சாம்பலை மொத்தமாக வாங்கிய பிறகு கூடுதல் லாபம் வைத்து ஹலோ பிரிக்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்கின்றனர்.

அடுப்புக்கரியின் விற்பனை விலையை விட குறைவாக. ஒரு டன் நிலக்கரிக்கு தமிழக அரசுக்கு பணம் கொடுத்து விட்டு இந்நிலக்கரியின் மூலம் பல்லாயிரம் கோடிக்கு மினுற்பத்தியை செய்வதோடு நிலக்கரிச் சாம்பலையும் பலநூறு கோடிக்கு விற்றுக் காசு பார்க்கிறது நடுவண் அரசு.

தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தை நடுவண் அரசிடமிருந்து காசுகொடுத்து வாங்கி தமிழ்நாட்டிலுள்ள பன்னாட்டு, வடநாட்டு தொழில் நிறுவனங்களுக்கு மானியத்துடன் தடையற்ற மின்சாரத்தை வழங்குவதால்தான் ரூ.42 ஆயிரம் கோடி தமிழ்நாடு மின்வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2011ல் நெய்வேலியில் உற்பத்தியான மொத்த மினளவு 19,240 மில்லியன் யூனிட் ஆகும். (ஒரு மில்லியன் என்பது 10 இலட்சம் யூனிட்டுகளாகும்) இதன்படி விழுக்காட்டளவில் இம்மின்சாரத்தை பிரித்தால் தமிழகத்திற்கு 30% என்ற அளவில் 5772 மி.யூனிட் மட்டுமே கிடைக்கிறது. ஆந்திராவிற்கு 3655.6 மி.யூனிட் கர்நாடகாவிற்கு 2693.6 மி.யூனிட் கேரளாவிற்கு 1924 மி.யூனிட் புதுவைக்கு 962 மி.யூனிட், என்.எல்.சி.க்கு 1346.8 மி.யூனிட், நடுவண் மின் தொகுப்பிற்கு 2886 மி.யூனிட் போய் சேருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் இப்படித்தான் அண்டை மாநிலங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறது.

தமிழர்களின் மற்றொரு தாயகமான புதுச்சேரிக்கும் மின்னுர்ற்பர்த்திக்காக மின்சாரத்தை செலவிடும் என்.எல்.சி. நிறுவனத்திற்குமான மின்சாரம்போக நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் பெரும்பகுதி அண்டை மாநிலங்களுக்கு வழங்கப்படுவதால்தான் தமிழகம் மின்பற்றாக்குறை மாநிலமாகத் திகழ்கிறது. புதுச்சேரிக்கும், என்.எல்.சி.க்கும் போக கடந்தாண்டு உற்பத்தியான மின்சாரத்தில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு வழங்கப்பட்டவை 8273.3 மி.யூனிட்டுகளாகும், அதாவது 43% ஆகும். இதனால்தான் தமிழகம் செயற்கையான மின்பற்றாக்குறை மாநிலமாகத் திகழ்கிறது.

கூடங்குளம் அணு உலையை ஆதரிக்கும் பலரும் தமிழகம் மின்பற்றாக்குறை மாநிலமாக இருக்கும்போது, மினுற்பத்திக்காக அமைக்கப்பட்டு வரும் கூடங்குளம் திட்டத்தை எதிர்ப்பது நியாயமா?என்று கூறிவருகின்றனர். தமிழ்நாட்டின் கனிமவளத்தையும், தமிழர்களின் உழைப்பையும் சுரண்டி, இப்படி அண்டை மாநிலத்தவர்களுக்கு மின்சாரம் கொடுப்பதால்தான், தமிழகம் செயற்கையாக இருண்டு கிடக்கிறது என்பதை தெரியாததால் கூடங்குளம் திட்டத்தினை இவர்கள் ஆதரிக்கிறார்கள்.

உண்மையிலேயே மின் பற்றாக்குறை மாநிலமாகத் திகழும் ஆந்திரா, கர்நாடகா, கேரளம் போன்ற மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் அமையவிருந்த அணு உலையை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளியதால் தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் அணு உலைகள் கட்டப்பட்டன. தடையில்லாமல் தமிழகத்தின் நெய்வேலியிலிருந்து மின்சாரம் கிடைக்கும்போது நமக்கு எதற்கு அணு உலைகள் என்று அவர்கள் முடிவெடுத்ததில் தவறேதும் இல்லை. ஆனால் உற்பத்தியாகும் மின்சாரத்தை இழந்ததோடு மின்பற்றாக்குறையைப் போக்க அணு உலைகள் தான் சரியானது என்று தேர்ந்தெடுக்கும் நம்மைப்பார்த்து தெலுங்கனும், கன்னடனும், மலையாளியும் சிரிக்க மாட்டார்களா?

கூடங்குளம் அணு உலை இயங்கினாலும் அதன் பெரும்பகுதி மின்சாரம் நமக்கு இல்லை என்பதுதான் உண்மை.

இராமேசுவரத்திலிருந்து இலங்கை தலைமன்னாருக்கு இடைப்பட்ட 50 கி.மீ. தொலைவு கடற்பகுதியின் அடியில் கேபிள் மின் கம்பிகள் மூலம் இலங்கைக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தினை மத்திய அரசின் நிறுவனமான பவர்கிரிட் கார்ப்பரேசன் மூலம் ரூ.4500 கோடி செலவு செய்து அத்திட்டம் 2014இல் நிறைவடையவுள்ளது.

தங்கள் மாநிலத்தில் அணு உலைகள் வேண்டாம் என்று துரத்தியடித்த மலையாளிகள் கூடங்குளம் அணு உலையிலிருந்து மின்சாரம் பெறுவது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். திருவனந்தபுரம் அணு ஆற்றல் மேலாண்மை மய்ய இயக்குநர் தரேசன் உன்னிதரன், கேரள அரசாங்கம் கூடங்குளம் பகுதியில் கேரளாவிற்கென இன்னும் ஆயிரம் மெகாவாட் திறனுள்ள 2 அணு உலைகளைக் கட்ட பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். தமிழ்நாடு இடம் கொடுப்பதால் 400 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கும், 1600 மெகாவாட் மின்சாரம் கேரளாவிற்கும் வரும்படி செய்யலாம். ஆனால் இதற்கு பலமான அழுத்தம் கேரளாவிலிருந்து கொடுக்கப்பட வேண்டும் (இத்தகவல் கேரள அரசின் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது) எனக் கூறுகிறார்.

ஈழத்தில் 1 இலட்சம் தமிழர்களை கொன்ற சிங்களவனுக்கும், துணைபோன மலையாளிகளுக்கும் கூடங்குளம் மின்சாரம் வழங்கப்பட இருக்கின்றது என்பதற்கு இந்த இரு எடுத்துக்காட்டுகளே போதுமானதாகும். கூடங்குளம் அணூலை செயல்படத் தொடங்கினால் 50% தமிழகத்திற்கு கிடைக்கும் என்று மன்மோகன்சிங் கூறும் ரகசியமும் இதுதான். (மீதி. 50% கேரளாவிற்கும், இலங்கைக்கும்)

நிலைமை இவ்வாறிருக்க கடலூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் தனியார் அனல்மின் நிலையங்களுக்கு கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அனுமதி வழங்கப்பட்டு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் மினுற்பத்தியைத் தொடங்கவுள்ளன. இதில் ஒரு விழுக்காடு மின்சாரம் கூட தமிழகத்திற்குக் கிடையாது என்பதுதான் அதிர்ச்சியான செய்தியாகும்.

நாகை மாவட்டத்தில் 11 இடங்களில் தனியார் நிறுவனங்களால் 11,365 மெகாவாட் திறன்கொண்ட அனல் மின்நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. நிலவளத்தையும், கடல் வளத்தையும் மாசுபடுத்தி பெரும் சூழல்சீர்கேட்டை விளைவிக்கும் இந்த அனல்மின் நிலையங்களால் தமிழகம் கண்ட - காணப்போகும் பயன்பாடு என்ன?

தமிழ்நாட்டின் மின்பற்றாக்குறையைப் போக்க நமக்கு கல்பாக்கம், கூடங்குளம் போன்ற அணு உலைகளும் வேண்டாம். புதியதாக எந்த அனல் மின்நிலையங்களும் வேண்டாம். நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரமே நமக்குப் போதுமானதாகும். கூடங்குளத்தில் உற்பத்தியாகப்போகும் மின்சாரத்தில் 50% கொடுப்போம் என்று கூறும் மன்மோகன்சிங் நெய்வேலி மின்சாரத்தில் 50% கொடுத்தாலே தமிழகத்தின் மின்பற்றாக்குறையைப் போக்கிட முடியுமே. பிறகெதற்கு அணு உலைகள், அனல் மின்நிலையங்கள்?

கருணாநிதியைப் போல டெல்லியில் சரணாகதி அடையாமல் தமிழகத்தின் உரிமைக்காக துணிவுடன் குரல் எழுப்பும் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டுகிறோம். அதே வேளையில் தமிழக மின் பற்றாக்குறையைப் போக்க நடுவண் மிந்தொகுப்பிலிருந்து கூடுதலாக 1000 மெகாவாட் மின்சாரம் கேட்பதற்கு பதிலாக, நெய்வேலியின் மீதான முழூரிமை தமிழகத்திற்கே என குரலெழுப்ப வேண்டும். நமது நெய்வேலி மின்சாரம்தான் நடுவண் மிந்தொகுப்பிற்குப் போய் சேருகிறது. எனவே நேரடியாகவே முதல்வர் அவர்கள் நெய்வேலி மின்சாரத்தின் மீது உரிமை கோரவேண்டும்.

நெய்வேலி அனல்மின்நிலையம் நடுவணரசின் கீழ் இயங்குவதால் இங்கு வெளி மாநிலத்தவர்களின் ஆதிக்கம் பெருகி வருகிறது. சுமார் 20 ஆயிரம் ஊழியர்களில் உயர்பதவி முழுக்க வடமாநிலத்தவர்களுக்கும், மலையாளிகளுக்கும் சொந்தமாகி விட்டன. 8 ஆயிரம் வெளிமாநில ஊழியர்களில் மலையாளிகள் மட்டும் 3000 பேர் உள்ளனர். தமிழக அரசின்கீழ் நெய்வேலி அனல் மின்நிலையம் இருந்தால், தமிழர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்கும். அண்டை மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கும் உரிமை தமிழக அரசிடம் இருக்குமானால் ஆற்றுநீரின் மீது அடாவடி செய்யும் கேரள, கர்நாடக, ஆந்திர அரசுகள் பணியும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை...

Wednesday, February 15, 2012

இக்கவிதை சிங்கள தேசத்தில் சுற்றுலா செல்லும் இன உணர்வில்லா தமிழர்களுக்காக...

நீங்கள் இப்போது நடந்து கொண்டிருக்கும் வீதியில்தான்குழந்தையொன்று பின்னந்தலையும் தாயும் இல்லாமல் அழுதே இறந்தது.

நீங்கள் நடங்கள்!

நீங்கள் இப்போது பார்க்கும் வீட்டில்தான் போராளி ஒருத்தியைநான்கைந்து பேர்மொழிக் கலப்பற்றுப் புணர்ந்தார்கள்.

நீங்கள் நடங்கள்!

நீங்கள் இப்போதுகால் நனைக்கும் கடற்கரையில்தான்படகில் தப்பி ஒட முயன்றநிறைசூல் பெண் ஒருத்திசுடப்பட்டு இறந்து போனாள்.

நீங்கள் நடங்கள்!

நீங்கள் இப்போது நிற்கும்பதுங்கு குழியில்தான்மேலே செல்லடியில் இறந்தஆறு மாத குழந்தையைத்தூக்க இயலாமல்கையில் துவக்கோடும்தவிப்போடும் நின்றிருந்தான்போராளி ஒருவன்.

நீங்கள் நடங்கள்!

நீங்கள் இப்போது ஒய்வெடுக்கும் இடம்அகதி முகாமாய் இருந்தபோதுநீர் பிடிக்கவும் மகனுக்காகவும்வரிசையில் காத்திருந்த முதியவர் ஒருவர்சுருண்டு விழுந்து இறந்தார்.

நீங்கள் நடங்கள்!

நாளை வேறொரு பகுதிக்கு செல்லலாம்ஆமாம் இப்போது இந்நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் செல்லலாம்சுற்றுலா தேசம் இதுஆயினும்சுற்றிக் காட்டவும் சொல்லி காட்டவும்இக்கதைகள் மாத்திரமே உலவுவதற்குநான் எதுவும் செய்வதிற்கில்லை!