Tuesday, March 1, 2011

எம்.ஜி.ஆர் 28



1976 தி.மு.க. ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அதற்கிடையில் தமிழகத்தில் இன்னோர் அரசியல் மாற்றமும் நிகழ்ந்தது. ஸ்தாபன காங்கிரஸ் தலைவர் காமராஜர் 1975 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதியன்று மாரடைப்பால் மரணமடைந்தார்.

காமராஜர் மரணத்தைத் தொடர்ந்து ஸ்தாபன காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் ஒரு விரக்தியும் மறு சிந்தனையும் தோன்றின. இந்திரா காங்கிரஸும் ஸ்தாபன காங்கிரஸும் இணைந்து ஒரே காங்கிரசாகிவிட வேண்டும் என்பதுதான் அந்த மறு சிந்தனை ஆகும். அதன்படி இணைப்பும் ஏற்பட்டது. கருப்பையா மூப்பனார் தலைமையில் பெரும்பாலன ஸ்தாபன காங்கிரஸ் தொண்டர்கள் இந்திராகாங்கிரஸில் இணைந்தனர். ஒன்றுபட்ட தமிழ்நாடு காங்கிரசுக்கு கருப்பையா மூப்பனார் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பா.இராமச் சந்திரன் தலைமையில் சிறுபான்மைக்குழுவினர் அதற்குப் பின்னரும் ஸ்தாபன காங்கிரஸாக இயங்கிக் கொண்டிருந்தனர்.1977ல் இந்தியா முழுவதிலும் பாராளுமன்றத் தேர்தலை நடத்த முடிவு செய்தார், பிரதமர் இந்திரா.

அதுவரை ஒன்றையொன்று எதிர்த்துக்கொண்டிருந்த இந்திரா காங்கிரசும், அ.இ.அ.தி.மு.க.வும் சட்டமன்ற, நாடாளுமன்றத தேர்தலில் ஒரே அணியாக நிற்பதுதான் நல்லது என்னும் எண்ணம் இரு தரப்பிலும் பரவலாக ஏற்பட்டது. அன்னை இந்திராவின் மேல் தனிப்பட்ட முறையில் மிகுந்த மிதிப்புக் கொண்டிருந்த புரட்சித் தலைவர், இந்திரா காங்கிரஸோடு கூட்டணி வைத்துக் கொள்ள உடன்பட்டார். ஆனால், நாடாளுமன்றத் தொகுதிகளில் நாடாளுமன்றத் தொகுதிகளில் அ.இ.தி.மு.க. வுக்கு அதிக இடங்களை ஒதுக்கிட இந்திரா காங்கிரஸ் சம்மதித்தால்தான் கூட்டணி அமைக்க ஒப்புக் கொள்ளமுடியும் என்றும் அவர் தெளிவு படுத்தினார்.

எம்.ஜி.ஆர். கூறியதை இந்திரா காங்கிரஸ் மேலிடம் ஒப்புக்கொண்டது. அதன்படி அ.இ.அ.தி.மு.கவுக்கு 20, இந்திரா காங்கிரஸுக்கு 15, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 பாண்டிச்சேரி நாடாளுமன்றத் தொகுதி அ.இ.அ.தி.மு.க வுக்கு என்ற அடிப்படையில் ஒப்பந்தம் உருவானது. புதிய கூட்டணியும் உதயமானது. தி.மு.க. ஸ்தாபன் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இன்னொரு கூட்டணியை அமைத்துக்கொண்டன. பிரதமர் இந்திராவும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும் ஒரே மேடையில் பேசி வாக்குக் கேட்டார்கள்.

நெருக்கடி நிலைப்பிரகடனம் இரத்து செய்யப்பட்டது. காவலில் இருந்த தலைவர்களெல்லாரும் விடுதலை செய்யப்பட்டனர்.
தொடரும்...