Tuesday, April 12, 2016

திருந்துமா இனி கட்சிகள்

இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்னுடைய வலைபதிவில் பதிவேற்றம் இட்டு. தேர்தல் நெருங்கும் வேளையிலாவது பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற கனவு இப்பொழுது நினைவாகிவிட்டது. எதைப் பற்றி எழுதலாம் என்ற சிந்தனையில் இருந்த பொழுது நேற்று தேர்தல் பரப்புரையில் நடந்த இரண்டு மரணத்தை பற்றி எழுதவே என் மனம் விரும்பியது.

கடந்து வந்த தேர்தல்களில் எல்லாம் தேர்தல் நடக்கும் பொழுதோ அல்லது வாக்குப் பெட்டியை கைப்பற்றும் பொழுதோ மரணம் ஏற்பட வாய்ப்புகள் இருந்தது. ஆனால் இந்த முறை தேர்தல் பரப்புரையின் போதே அந்த சம்பவம் நிறைவேறிவிட்டது. ஆனால் இந்த முறை வெயிலின் கொடுமையினால். இப்பொழுது இருக்கும் நவீன உலகத்தில் வெயிலின் தாக்கத்தையோ அல்லது மழையின் அறிகுறியவோ எளிதாக நம்மால் தெரிந்து விட முடியும். அப்படி இருக்கின்ற சூழ்நிலையில் ஆட்சியாளர்கள் நண்பகளிலா அவர்களுடைய பரப்புரையை மேற்கொள்வது? அதனால் வந்த விளைவே இந்த 2 மரணம்.

முதல்வர் ஜெயலலிதா பேசத் துவங்கிய சற்று நேரத்தில், வெயில் கொடுமை காரணமாக சிலர் மயங்கி விழுந்ததை தொடர்ந்து, கூட்டத்திலிருந்து மக்கள் வெளியேற முயன்றதால் நெரிசல் ஏற்பட்டது என்று தெரிகிறது. மேலும் அதில் 15க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்து காயமடைந்தனர். இந்த சம்பவத்தினால் கூட்டத்தில் பதற்றம் நிலவியது. ஜெயலலிதா பேசிக் கொண்டிருந்ததால் மயக்கம் அடைந்தவர்களை, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. பின் ஒரு வழியாக, அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் இருவரும் இறந்தனர்.

இந்த இரண்டு கழகங்களுக்கும் பேருந்து எரிப்போ அல்லது பத்திரிக்கை அலுவலக எரிப்போ ஒன்றும் புதிதல்ல. மாறாக இயற்கையின் எரிப்பை இந்த பாழாய் போன என் சாமானிய வாக்காளன் உணராதது தான் நிசப்தம். அவனை இயற்கையும் வஞ்சிக்கும் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டான்.

இனிமேலாவது ஆட்சியாளர்களோ அல்லது ஆட்சிக்கு வரத்துடிப்பவர்களோ இதை உணர்ந்து தத்தமது பரப்புரைகளை மாலை நேரத்தில் வைப்பர்களேயானால் இது போன்ற துர்மரணங்கள் நிகழாமல் செய்யலாம். என்ன செய்வது நம் நாட்டில் ஒரு முன்னேர்ப்பாடோ அல்லது சட்டமோ இயற்ற வேண்டுமானால் குறைந்தது இரு உயிர்களாவது இழக்க வேண்டும் என்பது சாபக்கேடு போலும்... இதில் நிவாரண இழப்பிடு உடனே வழங்க முடியாது என்பது கொடுமையிலும் கொடுமை ஏனென்றால் அது தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பானதாம்...இதை எங்கு போய் சொல்ல...இறந்தவர் ஆன்மாக்கள் சாந்தி அடையட்டும்.