Saturday, May 7, 2011

எம்.ஜி.ஆர் 31



1977 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதியன்று ‘இந்து’ ஏடு முதல்வர் எம்.ஜி.ஆரைப் பற்றி எழுதியிருந்த ஒரு கட்டுரையில் பின்வருமாறு கூறியிருந்தது.

”முதல்வர் பதவி என்பது அதிகாரம் வாய்ந்தது அல்ல. அதிகாரமும் பணபலமும் உள்ள பலரைத் தினமும் ச்ந்திக்க வேண்டிய ஓர் இடமே தவிர அதிகாரம் குவிந்துள்ள இடமல்ல என்று எம்.ஜி.ஆர் கூறியிருப்பதைப் பார்த்தால், அவர் முதல்வர் பதவி என்பது எவ்வளவு கடுமையானது என்பதை உணர்ந்திருக்கிறார் என்பதையே தெளிவு படுத்துகிறது. தம்மை முதல்வர் பதவியில் அமர்த்திய அந்த மக்கள் சக்தியே தமக்கு எல்லாவிதமான எதிர்ப்புகளிலிருந்தும் கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறார். மக்களிடமிருந்து எந்தக் கருத்து வந்தாலும் அதை அவர் சீர்தூக்கி ஆராய்ந்து ஏற்பார் என்பது உறுதி. நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் எம்.ஜீ.ஆர். உற்சாகத்துடன் ஏழை மக்களின் வாழ்வை முன்னேற்ற முடியும் என்னும் நம்பிக்கையில் இருக்கிறார்”என்று கூறியிருந்தது.

முதல்வர் பதவியேற்ற புரட்சித் தலைவர், அமைச்சர்களாகப் பொறுப்பேற்ற தம் சகாக்களை அழைத்து, ”எதைச் செய்தாலும் அதில் ஏழைகளுக்கு என்ன நன்மை கிட்டும் என்பதைக் கருத்தில் கொண்டு செய்யுங்கள்” என்று கூறினார்.

மாநில அரசுகள் எதற்கும் மத்திய அரசின் உதவியை எதிர்பார்க்க வேண்டிய நிலையில் இருப்பதை புரட்சித் தலைவர் புரிந்து கொண்டார். மாநில அரசின் வருவாய் முழுவதும் கல்வி, சுகாதாரம், அரசு நிருவாகம் ஆகியவற்றுக்கே போய்விடுகிறது என்பதையும் புரிந்து கொண்டார்.

மாநிலத்தில் தொழில்கள் வளர வேண்டுமென்றால் மத்திய அரசின் உதவியும் அனுமதியும் முதலீடும் அவசியம்; தனியார் துறையின் ஆரவமும் அதிகரிக்க வேண்டும் என்பதையும் அவர் மிக விரைவிலேயே புரிந்து கொண்டார் என்றாலும் இருக்கின்ற நிதி வசதியை வைத்துக்கொண்டு ஏழை எளிய மக்களுக்குப் பயன்படுமாறு என்னென்ன திட்டங்களை உருவாக்க முடியும் என்று யோசித்தார்.

”ஏழைமக்களை வாட்டும் இரு பிரச்சினைகள் பசிக் கொடுமையும், வேலையில்லாத திண்டாட்டமுந்தான் இவை இரண்டையும் நான் நன்றாய் அறிவேன். என் இளமைக்காலத்தில் இவ்விரண்டையும் நான் அனுபவித்திருக்கிறேன்.!”

இது முதல்வர் புரட்சித் தலைவர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியதாகும்.

இவ்வாறு ஏழைகளின் முக்கிய தேவையைத் துல்லியமாகய் உணர்ந்திருந்த புரட்சித் தலைவர் எடுத்துக்கொண்ட முதல் திட்டம் கிராம மேம்பாட்டுத் திட்டமாகும்.

1978 ஆம் ஆண்டில் மதுரை மாநகராட்சிக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, இந்திரா காங்கிரஸ் ஆகிய மூன்று அணிகள் மோதின. அந்தத் தேர்தலில் புரட்சித் தலைவரின் அணிக்கே மோதின. அந்தத் தேர்தலில் புரட்சித் தலைவரின் அணிக்கே மகத்தான வெற்றி கிட்டியது. மொத்தமுள்ள 65 வட்டங்களில் (Wards) அ.தி.மு.க.வுக்கு 37 இடங்களும், இந்திரா காங்கிரசுக்கு 9 இடங்களும், கிடைத்தன. ஜனதாக்கட்சி தோல்வியடைந்தது. மதுரை மாநகராட்சியை அ.தி.மு.க. கைப்பற்றியது! இதுவும் புரட்சித் தலைவரின் சாதனைகளுள் ஒன்றாகும்.

1978 ஆம் ஆண்டு செப்டம்பரில் மக்கள தி.மு.க. கலைக்கப்பட்டது. அக்கட்சி
யில் இருந்த நாவலர், ப.உ.ச, கே.இராஜாராம், செ.மாதவன் முதலியவர்கள் அ.இ.அ.தி.மு.க வில் சேர்ந்தனர்.

நாவலரைத் அ.இ.அ.தி.மு.க. தலைவர் பதவியிலும், ப.உ.ச.வை பொதுச் செயலாளர் பதவியிலும், மாதவனை கழகப் பொருளாளர் பதவியிலும், அமர்த்திக் கவுரவித்தார். புரட்சித் தலைவர். மாதவனைத் தவிர மற்ற மூவரையும் பின்னர் தம் அமைச்சரவையிலும் சேர்த்துக் கொண்டார்.



முற்றும்...

Wednesday, April 20, 2011

எம்.ஜி.ஆர் 30



1977 ஆம் ஆண்டு மே மாத இறுதியில் தமிழக சட்ட மன்றத்திற்குத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் பல மாறுதல்கள் நிகழ்ந்தன. அரசியல் கட்சிகள் புதிய அணிகளை அமைத்தன.

ஜனதா கட்சி தி.மு.க. உறவைத் துண்டித்துக் கொண்டு தனியாகப்போட்டியிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தி.மு.கவை உதறிவிட்டுத் தனித்துப் போட்டியிட்டது.

அ.இ.தி.மு.க. கூட்டணியிலும் பிளவு ஏற்பட்டது. இந்திரா காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் சட்டமன்றத்தில் அதிகமான இடங்களைத் தங்களுக்குக் கோரின. புரட்சித் தலைவர் அதற்குச் சம்மதிக்கவில்லை. அதனால், இந்திரா காங்கிரசும் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியும் அ.இ.அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகித் தங்களுக்குள் தனிக் கூட்டணி ஒன்றை அமைத்துக் கொண்டு போட்டியிட்டன.

அ.இ.தி.மு.க. சில சிறிய கட்சிகளைத் தன்னோடு சேர்த்துக்கொண்டு போட்டியிட்டது.

தி.மு.க. இரண்டாவது முறையாகப் பிளவுப்பட்டுக் களத்தில் நின்றது.

இந்திரா காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஓரளவுக்கு அனுதாபம் இருப்பினும் அது ஆட்சியைப் பற்றும் என்னும் நம்பிக்கை அந்தக் கட்சிக்காரர்களுக்கே இல்லை. ஜனதாக் கட்சிக்குத் தமிழ்நாட்டில் போதுமான அளவில் செல்வாக்கும் இருக்கவில்லை. எனவே, எஞ்சியிருந்த புரட்சித் தலைவரின் அ.இ.தி.மு.க.வின் மீது தான் மக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர்.

தேர்தல்கள் நடந்தது. அனைவரும் எதிர்பார்த்தது போல, அ.இ.அ.தி.மு.க. கூட்டணி தான் பெரும் வெற்றியைப் பெற்றது. புரட்சித் தலைவரின் அ.இ.அ.தி.மு.க.வுக்கு 127 தொகுதிகள் கிட்டின. அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 17 இடங்கள் கிட்டின.

தி.மு.க. 48 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தகுதியைப் பெற்றது. இந்திரா காங்கிரஸ் 27 தொகுதிகளிலும், ஜனதாக்கட்சி 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

புரட்சித் தலைவர் அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளநர் பிரபுதாஸ் பட்வாரி புரட்சித் தலைவரை ஆட்சிப் பொறுப்பேற்க அழைத்தார்.

1977 – ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று தான் புரட்சித் தலைவர் பிரபுதாஸ் பட்வாரியின் முன்னிலையில் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அது அரசியல் சட்ட ரீதியாகவும் சம்பிரதாயப்படியும் ஏற்றுக் கொண்ட பதவி ஏற்பு விழா!

ஆனால், அது முடிந்ததும் புரட்சித் தலைவர் அண்ணா சாலையில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு அருகில் உள்ள மேடைக்கு வந்தார். அண்ணா சாலையே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. தமிழகமே தலைநகருக்கு வந்து விட்டது போல அண்ணா சாலையில் கண்ணுக்கெட்டாத தூரம் வரை பல இலட்சம் மக்கள் திரண்டிருந்தனர்.

பத்து இலட்சம் என்று ஒரு பத்திரிகையும் 20 இலட்சம் என்று இன்னொரு பத்திரிகையும் எழுதும் அளவுக்கு மக்கள் கூட்டம்கூடி ஆர்ப்பரித்தது. அப்போது மந்தகாசப் புன்னகையோடு மேடை ஏறி, மக்களின் வாழ்த்துக்களைக் கையசைத்து ஏற்றுக்கொண்டார். அந்தச் சரித்திர நாயகன். அந்த மக்கள் கடலுக்கு முன்னால் மீண்டும் ஒரு முறை பதவிப் பிரமாணம் செய்தார். பின்னர் உரையாற்றினார்.

”அங்கே ராஜாஜி மண்டபத்தில் நாங்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டது அரசாங்கச் சடங்குதான். நமது இதய தெய்வம் அறிஞர் அண்ணா அவர்களின் பெயரால் ஆணையிட்டு உங்களுக்கு முன்னால் பதிவியேற்பதைத்தான் நாங்கள் பெருமையாக்க் கருதுகிறோம்.

இங்கே நடப்பது உங்கள் கட்டளையை எதிர்பார்த்து நடக்கும் விழாவாகும். உங்கள் முன்னால் அமைச்சர்கள் சார்பாகவும், அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகம் சார்பாகவும், தமிழக மக்களுக்கும், பல நாடுகளில், பல மாநிலங்களில் வாழும் தமிழ் மக்களுக்கும் நமது கொள்கையை ஏற்றுக் கொள்கிற அனைத்து மாநிலங்களிலும் வாழ்கின்ற மக்களுக்கும் ஒரு செய்தியை இங்கே கூற விரும்புகின்றேன்.

மக்களின் எண்ணங்களையும், மக்களின் விருப்பங்களைச் சட்டமாக்கவும், மக்களின் தேவைகளை நிறைவேற்றவும் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றம் இருக்கிறது.

இதனை எங்கள் மனத்தில் இருத்தி, இலஞ்சமற்ற, ஊழலற்ற நீதிமன்றங்களில் தலையீடு அற்ற ஆட்சியை நடத்துவோம் என்று கூறிக்கொள்கிறேன்.

உழைப்பவரே உயர்ந்தவர் என்னும் கொள்கைக்கு ஏற்ப ஆட்சி நடத்துவோம்.

இந்த உயர்ந்த இலட்சியத்தை எங்கள் உயிரைக் கொடுதேனும், எங்கள் உடல், பொருள், ஆவி, அனைத்தையும் இழந்தாலும், யார் தடுத்தாலும் அதை எதிர்த்து நிறைவேற்றுவோம் என்று அண்ணாவின் மேல் ஆணையிட்டுக் கூறுகிறேன்!” என்று தலைவர் உறுதியிட்டுக் கூறினார் புரட்சித் தலைவர்.

அப்பொழுதும் அதற்குப்பபின்னரும் அங்கே ஏற்பட்ட மக்கள் எழுச்சியையும் வாழ்த்து முழக்கங்களையும் எழுத்தில் வடிக்க எவராலும் இயலாது!

அந்த விழாவை முடித்துக்கொண்டு பத்திரிகையாளர்களைச் ச்ந்தித்தார், புரட்சித்தலைவர். அவர்களிடமும் அதே கருத்தையே வலியுறுத்தினார்.

இவ்வாறு கட்சி தொடங்கி நான்கு ஆண்டுகள் 8 மாதங்கள் 13 நாட்களில், அதாவது சுமார் 1,716 நாள்களில் ஆட்சியைப்பிடித்த அற்புத சாதனையைச் சாதித்த சரித்திர நாயகனானார். புரட்சித் தலைவர்! என்றாலும், வெற்றி அவரை மேலும் பணிவுள்ளவராக மாற்றியதே தவிர, வேறு சிலரைப் போல மாற்றாரை மனம் புண்படப் பேசும் ஆணவக்காரராக மாற்றி விடவில்லை.



தொடரும்...

Sunday, April 17, 2011

எம்.ஜி.ஆர் 29


தேர்தல் முடிவுப்படி வடமாநிலங்களில் இந்திரா காங்கிரஸ் பெரும் தோல்விகண்டது. மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதாக் கட்சி பெரும் வெற்றி பெற்றது. ஆனால், தென் மாநிலங்களில் நான்கிலும் இந்திரா காங்கிரஸ் பெரும் வெற்றியைப் பெற்றது. தமிழகத்தில் புரட்சித் தலைவரின் செல்வாக்கும், அயராத உழைப்பும் அ.இ.அ.தி.மு.க.வுக்கு 18, இந்திரா காங்கிரஸுக்கு 14 கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 என்னும் அளவில் மகத்தான வெற்றியை ஈட்டித் தந்தது. ஸ்தாபன காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் தி.மு.க. ஒரே ஒரு தொகுதியிலும் தாம் வெற்றிபெற்றன. பாண்டிச்சேரி நாடாளுமன்றத் தொகுதியிலும் அ.இ.அ.தி.மு.க வேட்பாளரே வெற்றி பெற்றார் இது புரட்சித் தலைவரின் இன்னொரு மகத்தான சாதனையாகும். தி.மு.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய்தது, நியாயம் என்ற புரட்சித்தலைவரின் வாதத்தைதான் தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டனர்! தி.மு.க. ஒரேயொரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. தி.மு.க.வோடு கூட்டணி அமைத்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஓர் இடங்கூட கிடைக்கவில்லை. தங்களோடு கூட்டணி அமைத்துக் கொண்ட ஜனதாக்கட்சி மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருப்பதால், தங்கள் மீதான சர்க்காரியா விசாரணைக்கமிஷன் கலைக்கப்பட்டு விடும் என்று தி.மு.க. தலைமை நம்பியது. புதிய பிரதமர் மொரார்ஜிதேசாய்க்கு மத்திய அமைச்சர் பா. இராமச்சந்திரன் மூலம் வேண்டுகோளும் விடுத்தது. ஆனால், பிரதமர் மொரார்ஜி தேசாய் சர்க்காரியா கமிஷன் விசாரணையை கைவிடச் செய்ய சம்மதிக்கவில்லை! விசாரணை தொடரும் என்று அறிவித்து விட்டார்.


பாராளுமன்றத் தேர்தல் முடிந்ததும் தி.மு.க.வின் முன்னிணித் தலைவர்கள் பலரும் தங்கள் எதிர்காலத்தைப் பற்றிக் கவலையோடு சிந்தித்தனர். அவர்களின் சார்பில் தி.மு.க. பொதுச் செயலாளர் நாவலர் நெடுஞெசெழியன் முதன் முதலில் போர்க்கொடியை உயர்த்தினார். 1977 ஆம் ஆண்டு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகிய நாவலர். கருணாநிதியின் மேல் ஒரு குற்றச்சாட்டு அறிக்கையை விடுத்தார். அவரைத் தொடர்ந்து முன்னால் அமைச்சர்களான கே.ராஜாராம், எஸ். மாதவன், ஆதித்தனார், ப.உ.சண்முகம் ஆகியோரும் தி.மு.க.விலிருந்து விலகினர். இவர்களுள் சிலர் ஒன்று சேர்ந்து மக்கள் திராவிட முன்னேற்றக்கழகம் என்னும் புதிய கட்சியைத் தொடங்கினார்கள். புரட்சித் தலைவர் சொன்ன பல்வேறு குற்றச்சாட்டுகளை ஒட்டியே இவர்களது குற்றச்சாட்டுகளும் இருந்தன. என்றாலும், இந்தக் கட்சியினரைப் புரட்சித் தலைவர் சற்றும் பொருட்படுத்தவில்லை.


தொடரும்...

Tuesday, March 1, 2011

எம்.ஜி.ஆர் 28



1976 தி.மு.க. ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அதற்கிடையில் தமிழகத்தில் இன்னோர் அரசியல் மாற்றமும் நிகழ்ந்தது. ஸ்தாபன காங்கிரஸ் தலைவர் காமராஜர் 1975 ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதியன்று மாரடைப்பால் மரணமடைந்தார்.

காமராஜர் மரணத்தைத் தொடர்ந்து ஸ்தாபன காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் ஒரு விரக்தியும் மறு சிந்தனையும் தோன்றின. இந்திரா காங்கிரஸும் ஸ்தாபன காங்கிரஸும் இணைந்து ஒரே காங்கிரசாகிவிட வேண்டும் என்பதுதான் அந்த மறு சிந்தனை ஆகும். அதன்படி இணைப்பும் ஏற்பட்டது. கருப்பையா மூப்பனார் தலைமையில் பெரும்பாலன ஸ்தாபன காங்கிரஸ் தொண்டர்கள் இந்திராகாங்கிரஸில் இணைந்தனர். ஒன்றுபட்ட தமிழ்நாடு காங்கிரசுக்கு கருப்பையா மூப்பனார் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பா.இராமச் சந்திரன் தலைமையில் சிறுபான்மைக்குழுவினர் அதற்குப் பின்னரும் ஸ்தாபன காங்கிரஸாக இயங்கிக் கொண்டிருந்தனர்.1977ல் இந்தியா முழுவதிலும் பாராளுமன்றத் தேர்தலை நடத்த முடிவு செய்தார், பிரதமர் இந்திரா.

அதுவரை ஒன்றையொன்று எதிர்த்துக்கொண்டிருந்த இந்திரா காங்கிரசும், அ.இ.அ.தி.மு.க.வும் சட்டமன்ற, நாடாளுமன்றத தேர்தலில் ஒரே அணியாக நிற்பதுதான் நல்லது என்னும் எண்ணம் இரு தரப்பிலும் பரவலாக ஏற்பட்டது. அன்னை இந்திராவின் மேல் தனிப்பட்ட முறையில் மிகுந்த மிதிப்புக் கொண்டிருந்த புரட்சித் தலைவர், இந்திரா காங்கிரஸோடு கூட்டணி வைத்துக் கொள்ள உடன்பட்டார். ஆனால், நாடாளுமன்றத் தொகுதிகளில் நாடாளுமன்றத் தொகுதிகளில் அ.இ.தி.மு.க. வுக்கு அதிக இடங்களை ஒதுக்கிட இந்திரா காங்கிரஸ் சம்மதித்தால்தான் கூட்டணி அமைக்க ஒப்புக் கொள்ளமுடியும் என்றும் அவர் தெளிவு படுத்தினார்.

எம்.ஜி.ஆர். கூறியதை இந்திரா காங்கிரஸ் மேலிடம் ஒப்புக்கொண்டது. அதன்படி அ.இ.அ.தி.மு.கவுக்கு 20, இந்திரா காங்கிரஸுக்கு 15, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 பாண்டிச்சேரி நாடாளுமன்றத் தொகுதி அ.இ.அ.தி.மு.க வுக்கு என்ற அடிப்படையில் ஒப்பந்தம் உருவானது. புதிய கூட்டணியும் உதயமானது. தி.மு.க. ஸ்தாபன் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இன்னொரு கூட்டணியை அமைத்துக்கொண்டன. பிரதமர் இந்திராவும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும் ஒரே மேடையில் பேசி வாக்குக் கேட்டார்கள்.

நெருக்கடி நிலைப்பிரகடனம் இரத்து செய்யப்பட்டது. காவலில் இருந்த தலைவர்களெல்லாரும் விடுதலை செய்யப்பட்டனர்.
தொடரும்...

Sunday, February 6, 2011

எம்.ஜி.ஆர் 27



இந்நிலையில் தி.மு.க. அரசு அ.தி.மு.க. விஷயத்தில் அடக்குமுறையைக் கடைப்பிடப்பதாகவும் எனவே கருணாநிதிக்கு கருப்புக் கொடி காட்டவேண்டும் என்றும் ஒரு கருத்து எழுந்தது. சட்டமன்ற உறுப்பினரும் அ.இ.அ.தி.மு.க. பொருளாளருமான எஸ்.எம்.துரைராஜ் அவ்வாறே கறுப்புக்கொடி காட்டினார். அவரும் அவருடன் சென்ற தொண்டர்களும் தாக்கப்பட்டனர். அதுமட்டுமன்றி அவர்கள்மீதே கொலை முயற்சி வழக்கும் தொடரப்பட்டது.

பின்னர் நீதிமன்றம், எஸ்.எம். துரைராஐயும் மற்றவர்களையும் குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்த்தோடு பொய் வழக்குத் தொடுத்த போலீஸாரையும் கடுமையாகக் கண்டித்தது. மார்க்சிஸ்ட் தொழிற்சங்கத் தலைவர் வி.பி. சித்தனை தி.மு.க. தொழிற்சங்கத்தினர் பட்டப்பகலில் அவர் பல்லவன் பஸ்ஸில் செல்கையில் படுகொலை செய்ய முயன்றார்கள். அவர் உடலில் 34 கத்திக் குத்துக்கள் விழுந்தன!



இந்தச் சூழ்நிலையில், 1975 ஆம் ஆண்டின் இறுதியில் அ.இ.அ.தி.மு.க.வின் சார்பில், தி.மு.க. தலைவர் மீதும் அமைச்சரவைமீதும் மீண்டும் ஊழல் புகார்கள் கொடுக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜி. விஸ்வநாதனும் நாஞ்சில் மனோகரனும் மத்திய அரசிடம் இந்த மூன்றாவது புகார் மனுவைக் கொடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தினர் எனக் கூறப்பட்டது.

மத்திய அரசு, தி.மு.க. அரசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தது. 1976 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 31 – ஆம் தேதியன்று இரவு, மத்திய அரசு, தமிழக தி.மு.க. அமைச்சரவையை டிஸ்மிஸ் செய்தது; தமிழ்நாடு சட்டமன்றமும் கலைக்கப்பட்டது.

அ.இ.அ.தி.மு.க. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கொடுத்த ஊழல் புகார் மனுக்களும், தி.மு.க. அரசு மேற்கொண்டதாக்ச் சொல்லப்பட்ட அதிகார துஷ்பிரயோகங்களுந்தாம் தி.மு.க. அமைச்சரவையை டிஸ்மிஸ் செய்வதற்குக் காரணமாய் அமைந்தன. தி.மு.க.வைத் தவிர மற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் மத்திய அரசின் நடவடிக்கையை மனப்பூர்வமாய் வரவேற்று ஆதரித்தன. புரட்சித்தலைவர் தி.மு.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய்த்தை வரவேற்று அறிக்கை வெளியிட்டார்; துணிச்சலான நடவடிக்கை என்றும் பாராட்டினார்.

தி.மு.க. அரசு மீதான ஊழல் குற்றச் சாட்டுகளை விசாரிக்க விசாரணை கமிஷன் ஒன்றை உடனே அமைக்க வேண்டும் என்றும் புரட்சித்தலைவர் கோரினார். அவரது கோரிக்கை விரைவிலேயே ஏற்றக்கொள்ளப்பட்டு உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ். சர்க்காரியாவின் தலைமையிலான விசாரணைக் கமிஷனையும் அமைத்தது, மத்திய அரசு. 54 ஊழல் புகார்களும் 27 புகார்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

சர்க்காரியா கமிஷன் அமைத்தது, புரட்சித் தலைவருக்குக் கிட்டிய மகத்தான வெற்றியாகும். மாநில முதல்வர்மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்திப் பகிரங்கமாய் இயக்கம் நடத்தும் அசாத்தியத் துணிச்சல் அவர் ஒருவருக்குத்தான் இருந்தது. அதனால் ஆளுங்கட்சியினரும் அரசாங்கமும் ஏவிவிட்ட அடக்குமுறைகளைத் தாங்கிக்கொண்டு போராடும் மனோதிடமும், வலிமையும் அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மட்டுமே இருந்தது!

இந்த மகத்தான சாதனையை நிகழ்த்தி சரித்திரம் படைத்த புரட்சித் தலைவர் அரசியல் அரங்கில் இன்னொரு சாதனையையும் சத்தமில்லாமல் செய்து முடித்தார்.



தொடரும்...

Thursday, January 27, 2011

எம்.ஜி.ஆர் 26



1975 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர், கழகத்தின் பெயரில் ஒரு மாற்றத்தைச் செய்ய விரும்பினார். அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்திற்குத் தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திரம், கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலும்கூட கிளைக் கழகங்களும் மன்றங்களும் தோன்றி வளர்ந்து கொண்டிருந்தன. எனவே, கட்சிப் பெயருக்கு முன்னால் "அனைத்திந்திய"என்னும் வார்த்தைகளையும் சேர்க்க வேண்டுமென்று புரட்சித் தலைவர் விரும்பினார்.

அதற்காக அ.தி.மு.க. பொது குழுவைக் கூட்டிய போது, புரட்சித் தலைவரே எதிர்பாராத அளவுக்கு கட்சியின் இளம் உறுப்பினர்கள் சிலர் அந்த யோசனையைக்கடுமையாக எதிர்த்தனர்.

பழைய கொள்கைகளில் ஊறியிருந்த அவர்கள் அனைத்து இந்திய என்னும் வார்த்தைகளை தீண்டத்தகாதவையாகவே கருதி வெறுப்பைக் கக்கினார்கள். ஒரு மிகக் குறுகிய வட்டத்திலிருந்து எப்பொழுதோ தம்மை விடுவித்துக்கொண்டு தேசியத் தலைவராக உயர்ந்து கொண்டிருந்த புரட்சித் தலைவருக்கு அந்தச் சிலரின் எதிர்ப்பு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. அதனால் தாம்கூறும் யோசனையைக் கட்சி ஏற்றுக்கொள்ளாவிட்டால், தம்மைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவித்துவிட்டு புதிய பொதுச்செயலாளர் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி புரட்சித் தலைவர் ஒரு வெடிகுண்டை எடுத்து வீசீனார்.

அவ்வளவுதான்! பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள், ”கூடவே கூடாது! புரட்சித்தலைவர் இல்லாத கட்சியில் எங்களுக்கு மட்டும் என்ன வேலை?’ என்று கூறினர். பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களும் தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டு புரட்சித் தலைவரின் கருத்தை ஏற்றனர்.

அதற்குப்பின்னர் அந்தத் தீர்மானம் ஏகமனதாய் நிறைவேறியது. கழகத்தின் பெயர் அன்று முதல் ”அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” ஆயிற்று.

1974 -75 ஆம் ஆண்டுகளில் இந்திய அரசியலில் ஒரு முக்கியமான மாறுதல் நிகழ்ந்தது. பிரதமர் இந்திராகாந்தியின் தேர்தல் செல்லாது என்று அலஹாபாத் உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்தது, சில அற்பக் காரணங்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பு, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று இந்திரா காங்கிரஸ் கட்சி கருதியது; எனவே, அது உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்துவிட்டுப் பிரதமர் இந்திரா தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டது.

ஆனால், ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் திரண்ட எதிர்க்கட்சியினரோ இந்திரா உடனே பதவி விலக வேண்டும் என்று கோரிப் பெரும் கிளர்ச்சி செய்தனர்.

ஜெயப்பிரகாஷ் நாராயண் போலீஸாரும் இராணுவத்தினரும் அரசு உத்தரவுகளுக்குக் கீழ்படியக்கூடாது என்று அறைகூவல் விடுத்தார். மக்கள் தெருவுக்கு வந்து போராட வேண்டும் என்றும் கூறினார். நாடே கொந்தளிப்பு நிலையில் இருந்தது. வெடிகுண்டுகள்கூட ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டன. உள்நாட்டுக் கலவரம் ஏற்பட்டது. அதை அடக்குவதற்கும், நாட்டில் சட்டம் ஒழுங்குப் பாதுகாப்பதற்கும் பிரதமர் இந்திரா உள்நாட்டு நெருக்கடிநிலையைப் பிரகடனப்படுத்தினார். ஜெயப்பிரகாஷ் நாராயண் உள்பட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

பரோடா வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்பட்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமறைவானார். தமிழகத்தில் தி.மு.க., ஸ்தாபன காங்கிரஸ் கட்சிகளைத் தவிர இதர கட்சி கட்சிகளெல்லாம் நெருக்கடி நிலைப் பிரகடனத்தை ஆதரித்தன.



தொடரும்...

Monday, January 17, 2011

எம்.ஜி.ஆர் 25


இனையதள நண்பர்கள் அனைவருக்கும் முதலில் என்னுடைய புத்தாண்டு மற்றும் பொங்கல் தின வாழ்த்துக்கள்...பணிசுமையின் காரணமாக கடந்த இரண்டு வாரமாக என்னால் பதிவுகளை இட முடியவில்லை. பேருக்கு வாழாமல் ஊருக்கு வாழ்ந்தவரின் பிறந்த நாளன்று எழுத எனக்கு வாய்ப்பு கிடைத்தது தெய்வச்செயல் தான்.

1973 ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதியன்று தேர்தல் நடந்தது. மே 22 ஆம் தேதியன்று தேர்தல் முடிவு வெளியாயிற்று.பொறுமையின் சின்னமாய் அண்ணாவின் இதயக்கனியாய்த் திகழ்ந்த புரட்சித் தலைவரின் பொறுமைக்கே வெற்றிக் கிட்டியது.

ஆம்; அ.தி.மு.க. வேட்பாளர் கே. மாயத்தேவரே வெற்றி பெற்றார். பெற்ற வெற்றி சாதாரணமானதா? மொத்தம் பதிவான வாக்குகள் 5 இலட்சம். அவற்றுள் மாயத்தேவர் பெற்ற வாக்குகள் 2,60,930 ஆகும்! அதாவது பாதிக்கு மேற்பட்ட வாக்குகள்!

இரண்டாவது இடம் ஸ்தாபன காங்கிரசுக்கு (1,19,000 வாக்குகள்) கிட்டியது. மூன்றாவது இடம்தான் மாநில ஆளுங்கட்சியான தி.மு.க.வுக்கு (93,000வாக்குகள்) கிட்டியது. மத்தியில் ஆளுங்கட்சியான இந்திரா காங்கிரசுக்கோ பொறுப்புத் தொகையை (டிபாசிட்) இழந்த அவல நிலையும், நான்காவது இடமும் (11,000) வாக்குகள் கிடடின.

தி.மு.க. அணியிலிருந்து பிரிந்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஏ. பாலசுப்பிரமணியமும் தம் பொறுப்புத் தொகையை இழந்தார்.புரட்சித்தலைவரின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் 1,42,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார்.அந்த வெற்றி அ.தி.மு.க.வின் முதல் வெற்றி மட்டுமல்ல; தமிழக்த்தின் தலைவிதியையே மாற்றவிருக்கும் வெற்றிகள் பலவற்றுக்கு முன்னோடி என்பதை அதற்குப் பின்னரும் சில அரசியல் தலைவர்கள் உணரவில்லை.!

திண்டுக்கல் வெற்றிச் செய்தி வெளியானபோது தொண்டர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள்! பட்டாசு வெடித்தார்கள். ஆனால் அப்பொழுது தியாகராய நகரில் உள்ள தம்முடைய அலுவலகத்தில் இருந்த எம்.ஜி.ஆர். ”மிக்க மகிழ்ச்சி” என்று மட்டும் கூறிவிட்டு அதற்கு மேல் யாரிடமும் ஒரு வார்த்தையும் பேசாமல் அமைதியாகி விட்டார்.

தம் தலைவருக்கு வெற்றி மாலை சூட அ.தி.மு.க. முன்னணி வீரர்கள் பலர் வந்தனர். அவர்களிடம், அங்கேயிருந்த ஒரு சிறிய அண்ணா சிலைக்கு மாலைகளை அணிவித்துப் போகும்படி எம்.ஜி.ஆர் கூறினார். வெற்றியைக் கண்டு கூத்தாடாமலும், தோல்வியைக் கண்டு துவண்டு விடாமலும் இருக்கம் மனப்பக்குவத்தைப் புரட்சித்தலைவர் எப்பொழுதோ பெற்றுவிட்டார்!

மாற்றுக் கட்சியினர் கூறியதுபோல புரட்சித் தலைவர் இந்திரா காங்கிரசுக்குக் கட்டுப்பட்டவரல்ல என்பதையும் அந்த வெற்றி பறைசாற்றியது! அவ்வாறெல்லாம் மாயத்தேவருக்காக உழைத்த உழைப்பை மாயத்தேவர் மறந்து விட்டு மீண்டும் தி.மு.கவில் 1980 ஆம் ஆண்டு இணைந்ததுதான் வேதனை.

தொடரும்...