Thursday, January 27, 2011

எம்.ஜி.ஆர் 26



1975 ஆம் ஆண்டு புரட்சித்தலைவர், கழகத்தின் பெயரில் ஒரு மாற்றத்தைச் செய்ய விரும்பினார். அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்திற்குத் தமிழகத்தில் மட்டுமின்றி ஆந்திரம், கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலும்கூட கிளைக் கழகங்களும் மன்றங்களும் தோன்றி வளர்ந்து கொண்டிருந்தன. எனவே, கட்சிப் பெயருக்கு முன்னால் "அனைத்திந்திய"என்னும் வார்த்தைகளையும் சேர்க்க வேண்டுமென்று புரட்சித் தலைவர் விரும்பினார்.

அதற்காக அ.தி.மு.க. பொது குழுவைக் கூட்டிய போது, புரட்சித் தலைவரே எதிர்பாராத அளவுக்கு கட்சியின் இளம் உறுப்பினர்கள் சிலர் அந்த யோசனையைக்கடுமையாக எதிர்த்தனர்.

பழைய கொள்கைகளில் ஊறியிருந்த அவர்கள் அனைத்து இந்திய என்னும் வார்த்தைகளை தீண்டத்தகாதவையாகவே கருதி வெறுப்பைக் கக்கினார்கள். ஒரு மிகக் குறுகிய வட்டத்திலிருந்து எப்பொழுதோ தம்மை விடுவித்துக்கொண்டு தேசியத் தலைவராக உயர்ந்து கொண்டிருந்த புரட்சித் தலைவருக்கு அந்தச் சிலரின் எதிர்ப்பு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. அதனால் தாம்கூறும் யோசனையைக் கட்சி ஏற்றுக்கொள்ளாவிட்டால், தம்மைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவித்துவிட்டு புதிய பொதுச்செயலாளர் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி புரட்சித் தலைவர் ஒரு வெடிகுண்டை எடுத்து வீசீனார்.

அவ்வளவுதான்! பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள், ”கூடவே கூடாது! புரட்சித்தலைவர் இல்லாத கட்சியில் எங்களுக்கு மட்டும் என்ன வேலை?’ என்று கூறினர். பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களும் தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டு புரட்சித் தலைவரின் கருத்தை ஏற்றனர்.

அதற்குப்பின்னர் அந்தத் தீர்மானம் ஏகமனதாய் நிறைவேறியது. கழகத்தின் பெயர் அன்று முதல் ”அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” ஆயிற்று.

1974 -75 ஆம் ஆண்டுகளில் இந்திய அரசியலில் ஒரு முக்கியமான மாறுதல் நிகழ்ந்தது. பிரதமர் இந்திராகாந்தியின் தேர்தல் செல்லாது என்று அலஹாபாத் உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்தது, சில அற்பக் காரணங்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பு, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று இந்திரா காங்கிரஸ் கட்சி கருதியது; எனவே, அது உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்துவிட்டுப் பிரதமர் இந்திரா தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டது.

ஆனால், ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில் திரண்ட எதிர்க்கட்சியினரோ இந்திரா உடனே பதவி விலக வேண்டும் என்று கோரிப் பெரும் கிளர்ச்சி செய்தனர்.

ஜெயப்பிரகாஷ் நாராயண் போலீஸாரும் இராணுவத்தினரும் அரசு உத்தரவுகளுக்குக் கீழ்படியக்கூடாது என்று அறைகூவல் விடுத்தார். மக்கள் தெருவுக்கு வந்து போராட வேண்டும் என்றும் கூறினார். நாடே கொந்தளிப்பு நிலையில் இருந்தது. வெடிகுண்டுகள்கூட ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டன. உள்நாட்டுக் கலவரம் ஏற்பட்டது. அதை அடக்குவதற்கும், நாட்டில் சட்டம் ஒழுங்குப் பாதுகாப்பதற்கும் பிரதமர் இந்திரா உள்நாட்டு நெருக்கடிநிலையைப் பிரகடனப்படுத்தினார். ஜெயப்பிரகாஷ் நாராயண் உள்பட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

பரோடா வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்பட்ட ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமறைவானார். தமிழகத்தில் தி.மு.க., ஸ்தாபன காங்கிரஸ் கட்சிகளைத் தவிர இதர கட்சி கட்சிகளெல்லாம் நெருக்கடி நிலைப் பிரகடனத்தை ஆதரித்தன.



தொடரும்...

No comments:

Post a Comment