Sunday, February 6, 2011

எம்.ஜி.ஆர் 27



இந்நிலையில் தி.மு.க. அரசு அ.தி.மு.க. விஷயத்தில் அடக்குமுறையைக் கடைப்பிடப்பதாகவும் எனவே கருணாநிதிக்கு கருப்புக் கொடி காட்டவேண்டும் என்றும் ஒரு கருத்து எழுந்தது. சட்டமன்ற உறுப்பினரும் அ.இ.அ.தி.மு.க. பொருளாளருமான எஸ்.எம்.துரைராஜ் அவ்வாறே கறுப்புக்கொடி காட்டினார். அவரும் அவருடன் சென்ற தொண்டர்களும் தாக்கப்பட்டனர். அதுமட்டுமன்றி அவர்கள்மீதே கொலை முயற்சி வழக்கும் தொடரப்பட்டது.

பின்னர் நீதிமன்றம், எஸ்.எம். துரைராஐயும் மற்றவர்களையும் குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்த்தோடு பொய் வழக்குத் தொடுத்த போலீஸாரையும் கடுமையாகக் கண்டித்தது. மார்க்சிஸ்ட் தொழிற்சங்கத் தலைவர் வி.பி. சித்தனை தி.மு.க. தொழிற்சங்கத்தினர் பட்டப்பகலில் அவர் பல்லவன் பஸ்ஸில் செல்கையில் படுகொலை செய்ய முயன்றார்கள். அவர் உடலில் 34 கத்திக் குத்துக்கள் விழுந்தன!



இந்தச் சூழ்நிலையில், 1975 ஆம் ஆண்டின் இறுதியில் அ.இ.அ.தி.மு.க.வின் சார்பில், தி.மு.க. தலைவர் மீதும் அமைச்சரவைமீதும் மீண்டும் ஊழல் புகார்கள் கொடுக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜி. விஸ்வநாதனும் நாஞ்சில் மனோகரனும் மத்திய அரசிடம் இந்த மூன்றாவது புகார் மனுவைக் கொடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தினர் எனக் கூறப்பட்டது.

மத்திய அரசு, தி.மு.க. அரசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தது. 1976 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 31 – ஆம் தேதியன்று இரவு, மத்திய அரசு, தமிழக தி.மு.க. அமைச்சரவையை டிஸ்மிஸ் செய்தது; தமிழ்நாடு சட்டமன்றமும் கலைக்கப்பட்டது.

அ.இ.அ.தி.மு.க. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கொடுத்த ஊழல் புகார் மனுக்களும், தி.மு.க. அரசு மேற்கொண்டதாக்ச் சொல்லப்பட்ட அதிகார துஷ்பிரயோகங்களுந்தாம் தி.மு.க. அமைச்சரவையை டிஸ்மிஸ் செய்வதற்குக் காரணமாய் அமைந்தன. தி.மு.க.வைத் தவிர மற்ற அரசியல் கட்சிகள் அனைத்தும் மத்திய அரசின் நடவடிக்கையை மனப்பூர்வமாய் வரவேற்று ஆதரித்தன. புரட்சித்தலைவர் தி.மு.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய்த்தை வரவேற்று அறிக்கை வெளியிட்டார்; துணிச்சலான நடவடிக்கை என்றும் பாராட்டினார்.

தி.மு.க. அரசு மீதான ஊழல் குற்றச் சாட்டுகளை விசாரிக்க விசாரணை கமிஷன் ஒன்றை உடனே அமைக்க வேண்டும் என்றும் புரட்சித்தலைவர் கோரினார். அவரது கோரிக்கை விரைவிலேயே ஏற்றக்கொள்ளப்பட்டு உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ். சர்க்காரியாவின் தலைமையிலான விசாரணைக் கமிஷனையும் அமைத்தது, மத்திய அரசு. 54 ஊழல் புகார்களும் 27 புகார்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

சர்க்காரியா கமிஷன் அமைத்தது, புரட்சித் தலைவருக்குக் கிட்டிய மகத்தான வெற்றியாகும். மாநில முதல்வர்மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்திப் பகிரங்கமாய் இயக்கம் நடத்தும் அசாத்தியத் துணிச்சல் அவர் ஒருவருக்குத்தான் இருந்தது. அதனால் ஆளுங்கட்சியினரும் அரசாங்கமும் ஏவிவிட்ட அடக்குமுறைகளைத் தாங்கிக்கொண்டு போராடும் மனோதிடமும், வலிமையும் அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மட்டுமே இருந்தது!

இந்த மகத்தான சாதனையை நிகழ்த்தி சரித்திரம் படைத்த புரட்சித் தலைவர் அரசியல் அரங்கில் இன்னொரு சாதனையையும் சத்தமில்லாமல் செய்து முடித்தார்.



தொடரும்...

No comments:

Post a Comment