Tuesday, March 27, 2012

திருமதி சோனியா காந்தியின் வீட்டில் அடுத்த சமையல்காரர் யாரோ!

RTI சட்டத்தின் மூலம் பெறப்பட்ட ஒரு தகவல்நேற்று பரபரப்பாக வெளியானதும்,அதன் தொடர்புடைய பல விஷயங்கள் நினைவிற்கு வந்தன -
2007ல் ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது திருமதி சோனியா காந்தியின் (personal choice) -சொந்த விருப்பமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர். மாமியார் இந்திரா காந்தி காலத்திலிருந்தே குடும்பத்திற்கு மிகவும் பழக்கப்பட்டவர் – வேண்டியவர் !


அண்மையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலின் போது ஒரு கோடி ரூபாய் பணத்துடன் தேர்தல் கமிஷனால் கையும் களவுமாக பிடிக்கப்பட்ட காங்கிரஸ் எம் எல் ஏ வின் பெருமைமிக்க தாய் !


கடந்த ஜூலை 7ம் தேதி, தன் திருமண ஆண்டு விழாவைக் கொண்டாட 73 உறவினர்களுடன் அரசாங்க செலவில் தனி விமானத்தில் டெல்லியிலிருந்து திருப்பதி சென்று -திரும்பிய பெருமைக்குரியவர் !


இரண்டு உறவினர்கள் பெயரில் 32.93 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, அவை திரும்பக் கொடுக்கப்படாததாலும்,சொந்த அண்ணன் மற்றும் பிற உறவினர்கள் 2 கோடி அளவுக்கு சுருட்டியதாலும்,மஹாராஷ்டிராவில், சொந்த ஊரில் -தன் பெயரில் துவக்கப்பட்ட வங்கியை தானே திவால் ஆக்கி மூட வழி செய்த பெருமைக்குரியவர்!


நடந்து கொண்டிருந்த கொலைவழக்கு ஒன்றில் தலையிட்டு - அதில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டிருந்த அண்ணன் – வழக்கிலிருந்து விடுபட காரணமாக இருந்த பாச மலர் தங்கை !


ராஜஸ்தான் மவுண்ட் அபுவில் உள்ள ஒரு ஆசிரமத்தில், 38 வருடங்களுக்கு முன்னர் இறந்து போன தன் ஆன்மிக குரு பாபா லேக்ராஜ் என்கிற சாமியாரின் ஆவியுடன் பேசியதாகக் கூறி பரபரப்பை உண்டாக்கிய ஆன்மிகவாதி !


மொத்தம் 12 தடவைகளில் – 79 நாட்களில்,சுற்றம் சூழ – அதாவது கணவர், உடன்பிறந்தோர்,பிள்ளைகள், பெண்கள், பேரன்கள், பேத்திகள்,நண்பர்கள் புடைசூழ தனி விமானங்களில்,22 வெளிநாடுகளுக்கு பயணம் செய்துமத்திய அரசுக்கு 205 கோடி செலவு வைத்து ஏர் இந்தியாவுக்கு ரூபாய் 169 கோடியும்,வெளிநாட்டு நட்சத்திர ஓட்டல்களுக்கு மிச்சம்36 கோடி பணத்தையும் வரவு வைத்தவர் !


உலகில் எவ்வளவோ நாடுகள் இருந்தாலும்,5 வருட பதவிக்காலத்தில் இவர் செல்ல முடிந்த நாடுகள் இவை மட்டுமே -
மெக்சிகோ, பிரேசில்,பூடான், வியட்னாம், சிலி,இந்தோனேஷியா, ஸ்பெயின்,போலந்து, ரஷ்யா,இங்கிலாந்து உட்பட யூரோப்பிய நாடுகள்,தஜ்கிஸ்தான், சைப்ரஸ், சீனா,லாவோஸ், கம்போடியா,ஐக்கிய அரபு குடியரசு, சிரியா,மொரிசியஸ், ஆஸ்திரேலியா,தென் கொரியா,ஸ்விட்சர்லாந்து……….. !!!!!!!!!


நல்ல வேளை பதவிக்காலம் முடிய இன்னும் 4 மாதங்கள் இருக்கின்றன. எனவே -அதற்குள் சவுத் ஆப்பிரிக்கா -முழு பரிவாரங்களுடன் தான் செல்வதற்கான திட்டங்கள் முடிவு செய்யப்பட்டு வருகின்றன.விரைவில் கிளம்புவார்கள்.அடுத்த RTI பதிலில் 205 கோடியுடன் அந்தச் செலவையும் ஞாபகமாகச் சேர்த்தாக வேண்டும் !


சென்ற வருடம், ராஜஸ்தானைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர் அமீன்கான் என்பவர் இவரைப் பற்றி கிண்டலாக மறைந்த இந்திரா காந்தி அம்மையாரின் வீட்டில், சம்பளம் வாங்காமல் சமையல் வேலை செய்து (விருந்தினர்களுக்கு டீ, காப்பி தயாரித்து )அவரது அபிமானத்தைப் பெற்றதால்,இவருக்கு இந்த பதவி கிடைத்தது என்று கூறப்பெற்றவர். (பின்னர் அந்த அமைச்சர்,பதவியை இழந்ததும், மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டதும் தனிக்கதை )
சரி - இடுகை முடிவுக்கு வந்து விட்டது.தலைப்புக்கு காரணம் சொல்லியாக வேண்டுமே !


அடுத்த 4 மாதங்களில் ஜனாதிபதி பதவிக்கு தேர்தல் வருகிறது. தகுந்த நபர் தேர்ந்தெடுக்கப் பட்டாக வேண்டுமே ! அதற்காகத் தான் இந்த கேள்வி – “அன்னை”யின் வீட்டில் அடுத்த சமையல்காரர் யாரோ ?

No comments:

Post a Comment