Wednesday, July 29, 2009

சைக்கிள்

எனக்கு மிகவும் ஆச்சர்யம் நான் பார்த்த வலைப்பதிவுகளில் யாருமே சைக்கிள் பயணத்தையோ அல்லது சைக்கிளில் இருக்கும் டைனமோ பற்றியோ பதிவு செய்யாதது எனக்கு மிகுந்த மன வருத்தத்தைத் தந்தது. இருந்தாலும் மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததற்கு. கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காது அந்த தருணம். சிறு வயது முதலே சைக்கிள் என்றால் எனக்கு அலாதி பிரியம். சைக்கிளில் வந்து என் உறவினர்கள் யார் வந்து கூப்பிட்டாலும் நான் பயணத்திற்கு தயாரான காலம் அது. சைக்கிளில் உள்ள மணியின் ஓசைக்கு பைப் ஹோர்ன் கூட இணைஇல்லை என்றே நான் நினைக்கிறேன்.அப்பொழுது எல்லாம் சைக்கிளின் குறுக்கு கம்பிக்கு நடுவே ஒரு சின்ன இருக்கை ஒன்று இருக்கும் அது சிறு வயது குழந்தைகளுக்காக.உட்கார பழகிஇருக்கும் குழந்தைகளுக்காக கூடையினால் செய்யப்பட்ட சீட்டை சைக்கிளின் முன் பகுதியில் மாட்டிவைப்பர்கள் அந்த குழந்தைகளும் எந்த பயமும் இன்றி உட்கார்ந்துகொள்ளும். அந்த காலங்களில் சைக்கிள்களுக்கு லைசென்ஸ் உண்டு. அந்த லைசென்ஸ் ஒரு மெல்லிய தகடினால் செய்யப்பட்டு அதில் வருடம் பொறிக்கப்பட்டிருக்கும். அப்பொழுதெல்லாம் வசதியின்மை காரணமாக வாடகைக்கு சைக்கிள் எடுத்துதான் பழக வேண்டும். அதுவும் காத்திருந்து... அவரவர் உயரத்திற்கு தகுந்தபடி சைக்கிள் அளவும் இருக்கும். கால் வண்டி,அரை வண்டி, முக்கால் வண்டி மற்றும் முழு வண்டி என்றெல்லாம் வாடகை சைக்கிள் கடையில் அன்று. அரை மணி நேரத்திற்கு ஐம்பது பைசா ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரூபாய் என்று கணக்கு வேற. ஒரு ஐந்து நிமிடம் அதிகமானால் கூட கடைக்காரன் திட்டி விடுவான். பழகும் போது பஞ்சர் ஆகிவிட்டால் பஞ்சருக்கும் சேர்த்து காசு வாங்கிவிடுவான். சைக்கிள் ஓட்ட தெரியாத சிறு வயதில் டைனமோ வைத்த சைக்கிள் என்றால் அவ்வளவுதான். அன்று முழுவதும் சைக்கிளின் பெடலை கையால் சுற்றிக் கொண்டே இருப்பேன்.சைக்கிள் பூட்டு பக்கத்தில் ஒரு டைனமோ பொருத்தப்பட்டிருக்கும் அதன் மேல் பகுதியில் ஒரு சக்கரம் இருக்கும் அந்த சக்கரம் சைக்கிளின் டயரோடு உரசுவதால் டைனமோவில் இருக்கும் சக்கரமும் சேர்ந்து சுழல அதில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு சைக்கிளின் முன் பகுதியில் உள்ள விளக்கு எரியும்.எவ்வளவு வேகமாக பெடலை சுற்றுகிறோமோ அவ்வளவு பிரகாசமாக விளக்கு எரியும். இவ்வாறு செய்ததால் பலமுறை என் அப்பாவிடம் நான் திட்டு வாங்கியிருக்கிறேன். பாவம் அவர் கஷ்டம் அவருக்கு. ஏனென்றால் டைனமோவை அதிக முறை உபயோகித்தால் டயர் சீக்கிரமே தேய்ந்து விடும். இதற்காக ஒவ்வொரு முறையும் டயர் மாற்றும் போது ரிக்க்ஷா டயர் போடுப்பா என்று என் அப்பா கடைக்காரனிடம் கூறியது இப்போது நினைவுக்கு வருகிறது. டைனமோவிலிருந்து தான் மின்சாரம் உற்பத்தியாகும் என்று நான் சற்று பெரியவனான பிறகு தான் உணர்ந்தேன்.நான் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் பொழுது என் அப்பா எனக்கு ஒரு சைக்கிள் வாங்கி கொடுத்தார்.அப்பொழுது எனக்கு கார் வாங்கிகொடுத்தது போல் ஒரு சந்தோஷம். அன்று இரவு என் நண்பர்கள் அனைவரிடமும் சென்று என் சைக்கிளை காண்பித்து விட்டு வந்தேன். அதில் தான் எத்தனை ஆனந்தம்.அப்பொழுது என் நண்பர்களில் ஒரு சிலர் மட்டுமே சைக்கிள் வைத்திருந்தனர்.பள்ளிக்குச் செல்லும் போது ஒவ்வொரு சைக்கிளில் இரண்டு பேர் செல்வோம். சில சமயம் மூன்று பேர் செல்லும் பழக்கமும் உண்டு. விடுமுறை நாட்கள் என்றால் நண்பர்கள் அனைவரும் தத்தமது சைக்கிளை எடுத்துக் கொண்டு ஊர் சுற்ற கிளம்பிவிடுவோம். வீட்டை விட்டு நெடுந்தூர பயணம் என்றெல்லாம் அனுபவம் உண்டு எனக்கு. போகும் வழியில் சாலையின் இரு புறமும் இருக்கும் புளிய மரத்தின் நிழலில் இளைப்பாறி புளியங்காயை ருசி பார்த்த நாட்கள் ஏராளம்.கோடையில் வீட்டிற்க்கு தண்ணிர் எடுத்து வருவது என்பது சாதாரண காரியம் கிடையாது. இரு ரப்பர் குடங்களை அதன் வாய் பகுதியில் நல்ல நைலான் கயிற்றினால் கட்டி சைக்கிளின் பின் பகுதியில் இருக்கும் கேரியரில் தொங்க வைத்து விடுவார்கள். என்னோடு மூத்த வயதுக்காரர்கள் எல்லாம் மூன்று குடங்களை கேரியரில் வைத்து தண்ணீர் எடுப்பார்கள். மூன்றாவது குடம் என்பது ஆச்சர்யமான விஷயம் தான். ஏனென்றால் அந்த மூன்றாவது குடத்தை கேரியரின் நடுவில் வைத்து சைக்கிள் டியூப்பினால் கட்டி சைக்கிளின் இருக்கையோடு மாட்டிவிடுவார்கள். பல சமயம் நான் தண்ணீர் எடுத்து வரும் பொழுது குடத்தோடு கீழே விழுந்தது உண்டு. சில சமயம் குடமும் உடைந்தது உண்டு. அன்று முழுவதும் திட்டுகளும், பாசங்களும் மாறி மாறி கிடைத்திருக்கிறது. திட்டுகள் குடம் உடைந்ததற்க்காக.... பாசங்கள் நான் கீழே விழுந்ததற்க்காக.....
என் நண்பன் ஒருவன் சைக்கிளில் செல்லும் பொழுதே தன்னுடைய இரண்டு கைகளையும் விட்டு பயணம் செல்லுவான். அவனிடம் நான் எப்படியடா இப்படி இரண்டு கைகளையும் விட்டு செல்கிறாய் என்றால் அதை சொல்லித்தர அவன் பண்ணிய பந்தாவுக்கு அளவே கிடையாது. பிற்பாடு நானே கற்றுக் கொண்டு ஒரு நாள் சாலையில் இரண்டு கைகளையும் விட்டு பயணம் செய்யும் பொழுது என் அப்பாவின் நண்பர் ஒருவர் அந்தக் காட்சியை காண அன்று எனக்கு என் அப்பாவிடம் நல்ல அடி கிடைத்தது. இப்பொழுது சாலையில் நான் பார்க்கும் சிறார்கள் சுலபமாக இவ்வாறு ஓட்டிச் செல்கின்றனர்.(பெண் சிறார்கள் கூட) இப்பொழுது சைக்கிள் ஓட்டுவது என்பதே எனக்கு அபூர்வமாகிவிட்டது.நான் என் ஊருக்குச் சென்றால் தருணம் வாய்க்கும் பொழுது எல்லாம் சைக்கிள் ஓட்டி விடுவேன். இப்பொழுது வரும் சைக்கிள்கள் எல்லாம் நவீனமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சில சமயம் நாமும் இப்பொழுதே பிறந்திருக்கலாமே என்று தோன்றியது உண்டு.ஆனால் நான் பெற்ற இன்பம் இன்றைய தலைமுறையினர்க்கு கிடைக்க வாய்ப்பே இல்லை என்று மட்டும் ஆணித்தனமாக என்னால் சொல்ல முடியும்.

2 comments:

சென்ஷி said...

பதிவர் நண்பர் முத்துக்குமரன் மற்றும் லக்கிலுக் சைக்கிளை பற்றி முன்பு பதிவில் ஏற்றியுள்ளார்கள்.

karthi said...

1870, 1980 galil, pirandha anaivarukkum indha anubhavam irundhirukkum. iruppinam adhai katturayaga thinithu nanabargalai vasikka veitha ungaladhu muyarchikku oru parattu.

Post a Comment