Sunday, September 27, 2009

மனைவி சொல்லே மந்திரம்

மனைவி சொல்லை மந்திரமாகக் கருதி, மனைவியை மதித்து வாழ்ந்து, மகத்தான சாதனைகள் புரிந்தவர்கள் ஏராளம். அவர்களில் மாமேதையான நத்தானியல் ஹாவ்தார்னும் ஒருவர். நிறுவனம் ஒன்றில்... குறைந்த சம்பளத்தில், குமாஸ்தா வேலை பார்த்து வந்தார் இவர். ஒரு நாள், திடுமென வேலை பறிபோனது. அடுத்து என்ன செய்வது என்று தவித்தவருக்கு, ஆறுதலும் அறிவுரையும் சொன்னது அவரின் மனைவிதான்! ''உங்கள் திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனவே, நாவல் எழுதுங்கள். நாளை... உங்களது திறமையை இந்த நாடே அறியும்'' என்று உற்சாகப்படுத்தினார் மனைவி. ஆனால் நத்தானியல், ''அதுவரை, சாப்பாட்டுக்கு என்ன செய்வது?'' என்று பரிதாபமாகக் கேட்டார்.
அதற்கு அவரின் மனைவி, ''அந்தக் கவலை உங்களுக்கு எதற்கு? மாதா மாதம் வீட்டுச் செலவுக் கென்று தாங்கள் தந்த பணத்தில் கொஞ்சம் சேமித்து வைத்திருக்கிறேன். சிக்கனமாக செலவு செய்தால், ஆறு மாதம் வரை நிம்மதியாக சாப்பிடலாம். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் எழுதுங்கள்'' என்றார். இப்படி, தன் மனைவி கொடுத்த உத்வேகத்துடன் நத்தானியல் எழுதிய நாவல்தான் _ 'ஸ்கார்லட் லெட்டர்!'இதையடுத்து உலகமே போற்றும் எழுத்தாளராக, மேதையாகப் பரிணமித்தார் நத்தானியல் ஹாவ்தார்ன்.

No comments:

Post a Comment